Monday 7 November 2016

fast track

ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு fasttrack  வாட்ச்  வாங்கினேன் .ஸ்ட்ராப் கொஞ்சம் இத்து போச்சு .சரின்னு வாங்கின கடையில போய் கேட்டா இங்கெல்லாம் பாக்க முடியாது service centre  கொண்டு போங்கன்னு சொல்லிட்டாங்க .அது என்னமோ டி நகர்ல தான் இருக்காம் .ஒரு வழியா போன வாரம் போனேன் .

ஒரு நாலஞ்சு பேரு வெயிட் பண்ணிட்டு இருந்தாங்க .உள்ள ஒரு ஏழெட்டு பேரு வேல பாத்துட்டு இருந்தாங்க .கவுன்ட்டர்ல  ஒரே ஒரு பொண்ணு .எல்லாத்துக்கும் பத்து நாள் டைம் கேட்டுட்டு இருந்துது .

கஸ்டமர் 1 :
லாக்க மாத்திட்டீங்களா ?எவ்வளவு ஆச்சு ?
பொ :150
க:போன்ல 100 ரூ னா  சொன்னீங்க ?உள்லேருந்து தானே எடுத்து வந்து மாத்துறீங்க.அது ஏன் உங்களுக்கு ரேட் தெரியல ?200னு சொல்லிற  வேண்டியது தானே ? பணம் பத்தலைன்னா என்ன செய்ய ?

கஸ்டமர் 2 :   
உங்கள்   வாட்ச் ரெடி ஆகல .
போன் பண்ணி கேட்டுட்டு தானே வந்தேன் ?
நீங்க போன் பண்ணினீங்களா ?இங்கிருந்து போன் வந்துச்சா ?
நான் தான் பண்ணினேன் .பார்த்திபனு ஒருத்தர் பேசினார் .வந்து கலெக்ட் பண்ணிக்கோங்கன்னு சொன்னார் .அவர் சொல்லியே நாலு நாள் ஆகிருச்சு .
தேடி பாருங்க .200 ரூ செலவு பண்ணி ஆட்டோல வந்திருக்கேன் .மறுபடியும் வர முடியாது .

உள்ள போய் வாட்ச எடுத்துட்டு வந்து கொடுத்து கஸ்டமர் எக்ஸிட் .

கஸ்டமர் 3:        

கேஸ் மாத்தணும் .இந்த கேஸ் வராது .இதுலேயே கோல்டு கலர் தான் வரும்
என்னம்மா எட்டாயிரம் ரூ வாட்ச் .அசால்ட்டா சொல்ற .
கம்பியூட்டர்ல செக் பண்ணிட்டு எட்டாயிரம் இல்லையே அஞ்சாயிரம் தானே ?
பத்து நாள் டைம் கொடுங்க ,வேற எங்கயாவது கேட்டு பாக்குறேன் .ஆனா கிடைக்கறது கஷ்டம் தான் . கோல்டு இருக்கு .
என்னம்மா எவ்வளவு விலை .அதுவும் அந்த கேஸ்க்காக தான் வாங்குனேன் .
எட்டாயிரம் இல்ல சார் .
நா வாங்குனப்ப எட்டாயிரம் தான் .
அந்த மாடல் எப்பவுமே அஞ்சாயிரம் தான் .

கஸ்டமர் 4
நான் தான் .
ஸ்ட்ராப் இல்ல மேடம்
கொடுத்திட்டு போங்க ட்ரை பண்றேன் .
சாதாரண கருப்பு ஸ்ட்ராப் தானே
பிரெட்த் வேற .கிடைக்காது .நீங்க வேணா ரத்னா ஸ்டோர்ஸ்க்கு எதிரே ஒரு fasttrack ஷோ ரூம் இருக்கு .அங்க இருக்கானு கேட்டு பாருங்க
நான் -இருந்தா ?
வாங்கிட்டு வந்துருங்க .மாட்டிக்கலாம்

இதுல moral  of the story  என்னன்னா ..fasttrack வாட்ச் வாங்காதீங்க .வாங்குனாலும் ரிப்பேர் ஆச்சுன்னா தூக்கி போட்டுருங்க .
service centreல எதுவும் எதிர்பாக்காதீங்க ...


Wednesday 12 October 2016

எங்கம்மா...

எப்பவுமே மருந்துகள் சரியா சாப்பிட மாட்டார் இவர் .போன மாசம் வந்து சில டெஸ்டுகள் செஞ்ச  பின் ,ஒரு வாரம் கழிச்சு வர சொன்னா இன்னைக்கு தான் வந்தார் .வந்ததுமே கிளம்புற அவசரத்துல வேற இருந்தாப்பல .நா ,வேற சில வேலையில இருந்ததால பாக்க ஒரு ரெண்டு மணி நேரமாகிருச்சி .

"என்ன டாக்டர் இன்னைக்கு இவ்வளவு லேட் பண்ணிட்டீங்க ?இவ்வளவு நேரத்துல நா அப்பல்லோவுக்கே  போய்ட்டு வந்துட்டேன் ."
இவர் அதிமுக .எப்பவுமே கட்சி கரை  வேட்டியில தான் வருவாப்புல .

அப்பல்லோவுக்குனு சொன்னதுமே எதுக்குன்னு தெரிஞ்சு போச்சு .
எப்படி இருக்காங்க உங்கம்மா ?
"நீங்க தான் சொல்லணும் ."
எனக்கென்ன தெரியும்
"டாக்டர்ஸுக்கே தெரியலைன்னா எங்களுக்கு எப்படி தெரியும் ?"

நேத்தைக்கு ஓபிஎஸ்க்கு மாத்தி கொடுக்க சொல்லியிருக்காங்களே .அப்ப நல்லா தானே இருக்காங்க ?கலைஞர் கூட சி எம் கையெழுத்து போட்டிருக்காங்களான்னு கேட்டிருக்காரே ?

"கேட்கட்டும் மேடம் .அப்பத்தான் விஷயம் தெரியும் .ஆளாளுக்கு வராங்க போறாங்க, ஆனா யாருமே ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறாங்களே ?போன வாரம் பூரா அப்பல்லோ வாசல்ல தான் இருந்தேன் .அப்புறம் இருந்து எதுவும் ஆகப் போறதில்லனு தெரிஞ்சதும் ஊருக்கு போய்ட்டேன் ."

என் கால பாருங்க ,காய்ச்சு போச்சி .30 கிலோமீட்டர் நடந்தேன் ,எங்கூர் பக்கத்துல ஒரு சாமிக்கு அம்மாவுக்காக வேண்டிகிட்டு  .எல்லாரும் கிண்டல் பண்றாங்க.நா நடந்து என்ன ஆகப்போகுதுன்னு கேட்டுறாதீங்க .இத்தன பேரு செய்றதுல ஏதாவது ஒண்ணு சாமிக்கு போய் எட்டி அம்மா நல்லாகிற மாட்டாங்களான்னு தான் .இந்த வெள்ள வேட்டி சட்டை  எங்கம்மா போட்ட பிச்சை .எங்கம்மா நல்லாயிருவாங்கன்னு சொல்லுங்க டாக்டர் ...."ஓவென  அழ ஆரம்பித்தார் .....

Thursday 22 September 2016

ஆயிரம் பொய் சொல்லி ...

கல்யாணத்த பத்தி இங்க ஒரு பெரிய பிரேமை இருக்கு . "ஆயிரம் பொய் சொல்லி கல்யாணம் பண்ணணும்" வீட்ட கட்டி பாரு ,கல்யாணம் பண்ணி பாரு" , அப்படி இப்படின்னு .ஆனா நேற்றைய பதிவுக்கு அப்புறம் திடீர்ன்னு இங்க நெசத்துல என்ன காரணங்களுக்காக பொண்ணுக்கு கல்யாணம் பண்றாங்கன்னு ஒரு நெனப்பு வந்தது .
என் மனசுல தோணின சில காரணங்கள் இங்க ..

1.பொண்ணுக்கு கல்யாண வயசு வந்திருச்சுன்னு பெத்தவங்களுக்கு தோண்றப்ப கல்யாணம் -இந்த வயசு சட்டப்படி ஒண்ணாவும் சமூகம் படிப்பு இப்படி சில விஷயங்கள் சார்ந்த  ஒண்ணாவும் இடத்துக்கு ஏத்தப்படி இருக்கு .இந்தியாவுல இன்னமும் குழந்தை திருமணம் முழுமையா ஒழிக்கப்படவே இல்ல .

2.அம்மா அப்பாவுக்கு வயசு ஆகிறப்ப.குறிப்பா அப்பாவுக்கு வயசாகிருச்சுன்னா .கல்யாண செலவு ,அதுக்கு பின்னால செய்ய வேண்டிய சீர் செலவு அதுக்கான source தேவை இதுக்கு காரணமா இருக்கு .

3.அம்மாவோ அப்பாவோ இதுவும் அப்பா இல்லாத பொண்ணுக்கு ,சில நெருங்கின சொந்தக்காரங்க  அவங்களுக்கு தோதான நேரத்துல அந்நேரத்துல அகப்பட்ட மாப்பிள்ளையை பிடிச்சு ஒரு கல்யாணம் .

4.தேடி அலையாம தானவே நல்ல மாப்பிள்ளை (இது நல்ல படிப்பு ,நல்ல வேலை +வருமானம் ,நல்ல சொத்து வசதி ,நல்ல அழகு /சிவப்பு நிறம்ன்னு எதுவாக வேணும்னா இருக்கலாம் ) இந்த பொண்ண கட்டிக்  கொடுங்கன்னு வலிய வந்து கேக்குறப்ப .

5.பொண்ணு மேல படிக்க மாட்டேன்னு மக்கர் பண்ணினா -அடுத்தது கல்யாணம் தான்

6.சில பொண்ணுங்க ஒரு டிகிரி முடிச்சிட்டு மேல படிக்கிறேன்னு சொல்றப்ப .இதுல ரெண்டு கேட்டகிரி இருக்கு .ஒண்ணு  மேல படிக்கிறேன்னு சொல்றப்ப அதுக்கு பொருத்தமா மாப்பிள்ளை கிடைக்காதோன்னு ஒரு கல்யாணம் .இன்னொன்னு வெளிநாட்டுல போய் படிக்கப்  போறேன்னு சொல்ற பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டு மாப்பிள்ளையோட போன்னு அட்வைஸோடா  அநேகமா வெளிநாட்டுல வேல பாக்குற இல்ல வேல பாக்குற வாய்ப்பு இருக்குற பையன பாத்து கல்யாணம் .

7. பொண்ணு யாரையாவது லவ் பண்ணிட்டா இல்ல லவ் பண்ணுமோன்னு சந்தேகம் வந்துட்டா  அடுத்து வர ஜாதிக்கார பையன் ஓகே தான் .

8. பொண்ண   யாராவது   நமக்கு  பிடிக்காத பையன் லவ் பண்ணிட்டா இல்ல லவ் பண்ண சொல்லி தொந்தரவு பண்ணா -சட்டுன்னு ஒரு கல்யாணம் .

9. பிடிச்ச பொண்ண ஆளு வச்சு தூக்கிட்டு போய் கட்டாய கல்யாணம் .

10.பொண்ணோட அக்கா கல்யாணத்தன்னைக்கு காதலனோடு எஸ்கேப் ஆயிட்டா ,நிச்சயம் பண்ணின மாப்பிள்ளைக்கு இழப்பீடா அடுத்த பொண்ணுக்கு அந்த மாப்பிள்ளையோட கல்யாணம் .

11.அப்புறம் எப்பவாவது சில அல்ப சொல்ப இடங்கள்ல  ஒரு பொண்ணும் பையனும்  இஷ்டப்பட்டு ஒண்ணா வாழ விருப்பப்பட்டா ...வாழ்க்கை இணை நல  ஒப்பந்த விழா .

Wednesday 21 September 2016

இருமணம் கொண்ட

ஒரு சனிக்கிழமை .நிறைய பேஷண்ட்ஸ் .பாத்துக்கிட்டே இருக்கிறப்ப ஒரு கணவன் மனைவி .இவங்களுக்கு ஒரு மகனும் மகளும் .ரெண்டு பெரும் படிப்பெல்லாம் முடிஞ்சி வேல பாக்குறாங்க .

"பிள்ளைங்க கிட்ட எங்க ரெண்டு பேருக்கும் எச் ஐவி இருக்குன்னு சொல்லிட்டோம் (சொல்ல சொல்லி கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருக்கேன் ).இப்ப என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணலாம்ன்னு பாக்குறோம் .ஒத்துக்க மாட்டேங்குறா .நீங்க கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்க ."
நான் "நிறைய பேஷண்ட்ஸ் இருக்காங்களே  ."
"பரவாயில்ல,நாங்க வெயிட் பண்றோம் .எல்லா பேஷண்ட்டும் பாத்து முடிச்சிட்டு பேசுங்க "

பொண்ணு அழகா ரொம்ப துடிப்பா இருந்தா .
என்ன சொல்றாரு உங்கப்பா ?
"ஒண்ணுமில்ல ஆண்ட்டி .கல்யாணம் பண்ண சொல்லி எல்லாரையும் அட்வைஸ் பண்ண சொல்றாங்க .நா பேசாம கல்யாணமே பண்ணிக்கிறேன் ."
ஒனக்கு இஷ்டமில்லையா ?
"அம்மா அப்பா ஹெல்த் எப்படி இருக்கு ?"
நல்லா இருக்கே .
"அப்புறம் ஏன் அத சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோன்னு கம்பெல் பண்றாங்க ?நாங்க இருக்கும் போதே பண்ணிக்கோன்னு ?"
எப்ப கல்யாணம் பண்ணலாம்ன்னு நீ நினைக்கிற ?
"நல்ல பையனா இருந்தா ,எனக்கு ஓகே தான் .எனக்கு பையன பிடிக்கணும் ."
இந்த பையன பிடிக்கலையா ?
"ஆமா ஆன்ட்டி .பிடிக்கல .அப்பா மத்த எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றாரு .பிளாக்மெயில் வேற .நா கல்யாணமே பண்ணிக்கிறேன் .பரவாயில்ல .ஆனா இந்த பையன எனக்கு பாத்தாலே பிடிக்கல ."

இப்ப அம்மா அப்பாவ வர சொன்னோம் .
"ஒத்துக்கிட்டாளா ?"(நம்ம திறமைல அப்படி ஒரு நம்பிக்கை )
கல்யாணத்துக்கு ஓகே தான் .இந்த பையனுக்கு ஓகே இல்லையாம் .
"ஆமா ,பையன் நல்லா இல்ல .எங்களுக்கே பிடிக்கல .ஆனா மத்த எல்லாம் இருக்கு .அப்புறம் எங்களுக்கு ஒடம்பு நல்லாருக்கும் போதே செய்யணும் .சர்வீஸ் வேற இன்னும் நாலு வருஷம் தான் இருக்கு .அவளா ஏதாவது பையன இஷ்டப்பட்டாலும் பரவாயில்ல ."

உங்க ரெண்டு பேர் ஹெல்த் நல்லா இருக்கு .அப்புறம் யாரோட ஆயுசையும் யாராலயும் கணிக்க முடியாது .அத காரணம் கட்டி அந்த பொண்ணுக்கு பிடிக்காத பையன ,இதுல உங்களுக்கும்  பையன பிடிக்கல, கல்யாணம் பண்ணி வைக்கிறத விட பெரிய முட்டாள் தனம் வேற எதுவும் இல்ல .

எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த அத பொண்ணு சொன்னா ,"ஆண்ட்டி ,நா இப்பதான் கொஞ்ச மாசமா வேலைக்கு போறேன்.இப்ப தான் இவங்க ரெண்டு பேருக்கும்  இந்த பிரச்சனை இருக்கிறது தெரியும் .இவங்க இத சொல்லி எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க பாக்குறாங்க .இதே காரணத்துக்காக நா என் கேரியர்ல நல்லா வரணும் .நாளைக்கு  அம்மா அப்பாக்கு ஏதாவது ஆஸ்பத்திரி செலவுக்கு தேவைப்பட்டா செலவழிக்க பணம் சேத்து வைக்கணும்ன்னு நினைக்கிறேன் .கொஞ்ச நாள் போகட்டும் .இவங்க பாக்குற பையன் எனக்கு பிடிச்சிருந்தா இல்ல எனக்கு யாரையாவது பிடிச்சிருந்தா கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கிறேன் ."

Saturday 17 September 2016

ஒருவேளை


எதுவாக  முடியுமோ அதுவாக இருப்போம்
ஒருவேளை ஆகியிருக்கும்  ,
ஆனால் இதனால் ,அதனால் அப்புறம் இதனால்
என்று சொல்லாதீர்கள்
எந்த விதியாலும் நம் பாதை மாற்ற முடியாது
ஆனவனால்  மட்டுமே முடியும்


 நாம் செய்வதை  செய்வோம் .
கனவு காணாதீர்கள்
வாய்ப்பு வீரனை கைவிடுகிறது ,மகுடமில்லாமல் அழ
எது  போல தோன்றுகிறார்களோ
அது போலவே மக்கள்
இது என் எண்ணம் .
செய்து முடித்தவன் ,செய்தவனாகிறான்

 
ஏற முடிந்த இடங்களில்  ஏறுவோம்  .
என்னிடம் சொல்லாதீர்கள்
உச்சி தொடாமல் செய்த கடும் புயல்கள் பற்றி
அண்டிய  சிகரத்தை தொடாத கழுகுண்டா
ஏறுபவன் எப்படியும் ஏறுவான்


"ஒருவேளை  ஆகியிருக்கும்" எனக்கு பிடிக்காத தொடர்
வலிமை இல்லை அதில் அப்புறம்  
வாழ்க்கையின் சிறப்பான  நிஜங்களை அது திரிக்கிறது
நான் நம்புகிறேன்
நம்மிடம் உண்டென 
நாம் எட்டுகிறோம்
நாம் வெல்கிறோம் 
நம் பாலைகள் எதுவான போதும்


"It Might Have Been" - Poem by Ella Wheeler Wilcox


We will be what we could be. Do not say,
"It might have been, had not this, or that, or this."
No fate can keep us from the chosen way;
He only might who is.

We will do what we could do. Do not dream
Chance leaves a hero, all uncrowned to grieve.
I hold, all men are greatly what they seem;
He does, who could achieve.

We will climb where we could climb. Tell me not
Of adverse storms that kept thee from the height.
What eagle ever missed the peak he sought?
He always climbs who might.

I do not like the phrase "It might have been!"
It lacks force, and life's best truths perverts:
For I believe we have, and reach, and win,
Whatever our deserts.

Thursday 8 September 2016

தேவதைகள்

ஒன்பது வயது சிறுமி .அம்மா இல்லை .அப்பா குடிகாரர் .தாத்தாவும் பாட்டியும் அழைத்து வந்தார்கள் .வயிறெல்லாம் உப்பலாக .மூச்சு திணறிக்கொண்டு .
டெஸ்ட்டுகள் செய்து  பார்த்ததில் வயிற்றில் TB தொற்று போல் தோன்றியது .சிகிச்சை ஆரம்பித்து   ஒரு மாதம் கழித்து வரும் படி சொல்லி அனுப்பி வைத்தேன்.

இரண்டு வாரங்களுக்கு முன் திரும்ப வந்தாள் .வயிறு இன்னமும் கொஞ்சம் உப்பலாக .காய்ச்சலும்  வலியும் குறைந்து இருந்தன .CT  ஸ்கேன் செய்ததில் வயிற்றில் இன்னமும் நெறி கட்டிகள் குறையாமல் இருப்பது தெரிந்தது .ஒருவேளை கேன்சராக இருக்குமோ என்று அடையாறு கேன்சர் இன்ஸ்டிட்யூட்டுக்கு அனுப்பினேன் .

அவர்களும் சிலபல டெஸ்ட்டுகள் செய்த பின் ,பயாப்சி (biopsy ) செய்ய முடிவெடுத்து போன வாரத்தில் செய்தார்கள் .பலமுறை ஆந்திராவில் இருந்து அலைந்து திரிந்தார்கள் தாத்தாவும் பாட்டியும் இதற்கென .எங்களுக்கென்று இவள் ஒருத்தி தான் இருக்கிறாள் என்பார்கள் அழுதபடி .இன்று சோதனை முடிவுகள் வந்து ,TB தான் என்று உறுதியானது .

இந்த இரண்டு வாரத்தில் இவள்  உடல் நலமும் இன்னமும் கொஞ்சம் சீரானது .இந்த இரண்டு வாரங்களில் அவளும் நானும் ஒரு ஆறு முறையேனும் சந்தித்திருப்போம் .சிரித்துக்கொண்டே இருப்பாள் .கேள்விக்கு மட்டும் பதில் சொல்வாள் .எப்போதும் பொம்மை போல அழகாக உடை உடுத்தி இருப்பாள் .
இன்று அவள் தாத்தா பாட்டியிடம் ,அடுத்து என்ன செய்ய வேண்டும் ,எப்போது வர வேண்டும் என்றெல்லாம் பேசி ,இரண்டு மாதங்கள் கழித்து பார்க்கிறேன் என்று சொல்லி முடித்தேன் .

சிரித்துக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்தாள் .போகும் போது ,"டாக்டர் உங்க பேர் என்ன ?"என்  பேரு பூங்குழலி ."பூங்.....பூங்குலலி ...பூங்குழலி ."
"டாக்டர் பூங்குழலி ஆன்ட்டி -சால தேங்ஸ்"....

 

Saturday 3 September 2016

"டீ"

                             
                                Image result for tea paintings


டீ போடவென
ஒரு  தனித்திறன் தேவையாயிருக்கிறது
லேசாக இல்லாமலும்
அடர்வாக  இல்லாமலும்
டீ போடவென  ஒரு திறன் தேவைதான்
தித்திப்பும் மெல்லிய கசப்பும்
உதட்டில் பரவி
நாவில் பூச
பருகுவோர்  காதல் கொள்ளும்
டீயின் தனி சுவை
ஆக்குவது ஒரு திறனே தான்
ஏதோ ஒரு
லாகவமும் 
நேர்த்தியும் நாசூக்கும்
நிச்சயம் தேவைப்படுகின்றன
அடுத்தவர் விரும்பும்படி
டி போடவும்  

Tuesday 30 August 2016

மீண்டும்

                                                  Image result for watching rain  paintings


ஏதோ ஒரு நாளின் காதல்
சற்றே  பூவின் வாசம்
எதற்கோ வந்த கோபம்
காரணமில்லா புன்னகை
தேநீர் குவளையின் சூடு
நனையும் மண்ணின் வாசம்
எல்லாம்  தேடி வந்து
என் வாசலில் கொட்டித்தீர்த்தது
மழை
மழை போன பின்னும்
அவை வழிந்து கொண்டே இருக்கின்றன
ஜன்னல் கம்பிகளிலும்
தாழ்வாரத்திலும்
என் விரலிடுக்குகளிலும்
இன்னும் பிறவிலும்

Tuesday 23 August 2016

கபாலி

                                      Image result for kabali


எல்லாரும் பாத்து  சிலாகிச்சு திட்டி அக்கு வேறு ஆணி வேறா பிரிச்சப்புறம் கபாலிய பத்தி எழுத கொஞ்சம் கூச்சமா தான்  இருக்கு .ஆனாலும் நானும் படத்தை பாத்துட்டேங்கறத இந்த தமிழ் கூறும் நல்லுலகுக்கு சொல்ல வேற வழி இல்லாததால இந்த பதிவு ...

படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சு  போச்சு .கண்ண மூடுனா ரஜினி தெரியுறாரு .கண்ண திறந்தாலும் ரஜினி தெரியறாப்பல .என்னத்துக்கு வழ வழா கொழகொழானு ..

எனக்கு பிடிச்சது

கஷ்டப்பட்டு  ஸ்டைல் பண்ணாம ரஜினி இயல்பாவே ஸ்டைலா இருக்கிறது -ஒவ்வொரு ஷாட்லேயும் -எம்புட்டு நாளாச்சு இப்படி பாத்து ..கண்ணெல்லாம் பளிச் பளிச்
அவரோட அழகான வார்டுரோப் -குறிப்பா அந்த மஞ்சளும் சிவப்பும் ?கட்டம் போட்ட லுங்கி  -விசில்ஸ்
குமுதவள்ளிய பாக்க போறதுக்கு முந்தின நாள் இரவெல்லாம் நிக்கிற அந்த ஷாட்  /தாடியை ஷேவ் பண்ணிட்டு இறங்கி வர ஷாட் - சுத்திப்போடுங்கய்யா 
மகளோட கைய பிடிச்சிக்கிட்டு  அவ கூட வர சீன்ல குழந்தை மாதிரி ஒரு முகபாவம் -வாவ்
அந்த தாடி போக எஞ்சின கொஞ்ச ஸ்பேஸ்ல என்னாமா குட்டி குட்டி எக்ஸ்பிரஷன்ஸ் - ஆஸம்
 அழுமூஞ்சியா இல்லாத strong நாயகி - இந்த ரோலுக்கு ரீல் ரீலா அழுத்திருக்கலாமே ?
assassin மக
எங்கேயோ நைசா மொளகா தேய்க்கிற மாதிரியே  இருக்கு வசனமெல்லாம்
குறிப்பா கோட் சூட் வசனங்கள்  - படத்துல அந்த கோட் சூட் கூட ஒரு கதாபாத்திரம் ?

பாட்டு
டேன்ஸ்-  இல்லாதது

அப்புறம்... எல்லாமுமே

ரஜினியை இயக்குனர் நல்லா மடை கட்டி இயக்கியிருக்காப்ல

சொல்லாம இருக்கவே முடியாது - மகிழ்ச்சி




 

Saturday 20 August 2016

வீடு





எந்த பாதையிலும்
இடித்துக் கொண்டிருக்கிறார்கள்
ஏதோ ஒரு வீட்டையேனும்
கதவுகள் கழற்றப்பட்டு
செங்கல்கள் உதிர்க்கப்பட்டு
நிர்வாணமாய் நிற்கிறது
அந்த வீடும்


அவ்வீட்டில்  குடியிருந்த
நினைவுகளையும்
சிரிப்புகளையும்
துக்கங்களையும்
எவரும் அறியாமல்
எங்கோ  தொலைதூரத்தில்
கொண்டு கரைக்கிறது காற்று


மிஞ்சியிருக்கும் 
செங்கலும் மண்ணும்
பழங்கதைகள் பேசிக்கழிக்கின்றன
எஞ்சியிருக்கும் பொழுதுகளை
எல்லாம் களையப்பட்டு
அடித்தளம் அகற்றும் போது
ஓவென்று அழுகிறது மண்
தான் அனாதையென




Tuesday 9 August 2016

இரவில் நினைவுகள்

என் படுக்கையின் முன்னே
பளிச் நிலவொளி இருக்கிறது
பளிச்சென்பதால் 
தரையில் பனிபோல் 


தலையை தூக்கி
பளீர் நிலவை பார்க்கிறேன்
தலையை தாழ்த்தி
கனவு காண்கிறேன்
நான் வீடு வந்ததாக 


Quiet Night Thoughts - Poem by Li Po

Before my bed
there is bright moonlight
So that it seems
Like frost on the ground:

Lifting my head
I watch the bright moon,
Lowering my head
I dream that I'm home.

Tuesday 2 August 2016

வைன்

குடித்துக்கொண்டு ,உட்கார்ந்திருக்கிறேன்
இரவுக்கு தொலைந்து .
உதிரும் இலைகளை
தரையிடமிருந்து ஏந்தி
தொடர எழுகிறேன்
ஓடையின் வெள்ளை நிலாவை
பறவைகளின் அறிகுறிகள் இல்லை
மனிதர்கள் போய்விட்டிருக்கிறார்கள்




 Wine - Poem by Li Po

Drinking, I sit,
Lost to Night,
Keep falling petals
From the ground:
Get up to follow
The stream’s white moon,
No sign of birds,
The humans gone.

Wednesday 13 July 2016

கவலையாக இருக்கிறது






எளிதானதாக எதுவுமே இல்லை
கவலைப்படுவதும்
அழுவதும் உட்பட
கவலைப்படுவதற்கென
சில மூலைகளும்
சில மனிதர்களும்
அவர்கள் சிலாகிக்கும்
காரணங்களும் தேவைப்படுகின்றன 

அழவோ
காரணங்கள் மட்டுமன்றி
சிறு கூட்டமேனும்  
அவசியமே...
இவை அற்ற
அழுகையும் கவலையும்
பிறந்து மடிகின்றன
சவலைப்பிள்ளைகளாக
சரி 
சிரித்து தொலையலாம் என்றால்
சிரிப்பதற்கு
இருக்கவே இருக்கின்றன
கால நேர நியமங்களும்
கட்டுப்பாடுகளும் கேள்விகளும்
எளிதில்லை  எதுவுமே
சிலநேர தனிமை பொழுதுகளில்  தவிர்த்து






Thursday 12 May 2016

உயிரோடிரு


ரேசர்கள் வலிக்க  செய்யும்
ஆறுகள்  சொதசொதவென்றிருக்கும்
ஆசிட்கள் கறையாக்கும்
அப்புறம்
மாத்திரைகள் நோவு  தரும்
துப்பாக்கிகள் சட்டவிரோதம்
சுருக்குகள் விட்டுப்போகும்
கேஸ் கடும் நாற்றம்
நீ வாழ்ந்தே தொலைக்கலாம்


Resume
By Dorothy Parker


Razors pain you;
Rivers are damp;
Acids stain you;
And drugs cause cramp.
Guns aren't lawful;
Nooses give;
Gas smells awful;
You might as well live.


Saturday 7 May 2016

என் கவிதை




எங்கோ இருக்கத்தான் வேண்டும்
எனக்கான கவிதை ஒன்று
மான் எனவும்
மயில் எனவும்
குயில் எனவும்
பாவித்த சொற்கள் ஏந்தி

நிலா எனவும்
நதி எனவும்
ஜோடனைகள் பூசியதாய்
இருக்கத்தான் வேண்டும்
எனக்கான கவிதை
எங்கேனும்

என்றென்றும்
எப்பொழுதும்
தினம் தினம்
என காலங்கள் தொடுத்ததாய்
நிச்சயம் இருக்கும்
எனக்கான கவிதை

காத்திருக்கிறேன்
என்றேனும் ஒரு நாளில்
என்னிடம் வரும் என
அந்நாளில் எக்காளமாய்
சராசரிகள் நானல்ல என்றுவிட்டு
மீண்டும் காத்திருப்பேன்
என்  கவிதைக்கென  

Saturday 2 April 2016

வசிய மருந்து

பேஷன்ட் உள்நோயாளிகள் பிரிவில் இருந்தார் .அவர் மனைவி என்னிடம் பேச விரும்புவதாக சொல்லி என் அறைக்கு வந்தார் .

"வாந்தி நிக்கவே இல்லையே!"
முன்னைக்கு இப்ப கொறஞ்சிருக்கே?மருந்தெல்லாம் கிடைக்குது .

"எங்கூர்ல என்ன சொல்றாங்கனா ..."
என்ன சொல்றாங்க ?

"வசியம் மிச்சமிருந்தா  வாந்தி நிக்காதாம் ?"
உங்க வீட்டுக்காரருக்கு வசியம் யார் வச்சது ?(பேஷன்ட் படு சுமார் பெர்சனாலிட்டி )

"அதெல்லாம் நெறைய பொம்பளைங்க வசியம் வச்சு ,அங்க இங்க போய் தான் இந்த நோய் வந்துச்சு .கொஞ்ச நாள் முன்னாடி வரைக்கும் கூட இன்னொரு பொம்பள கூட தான் இருந்தாரு"
முடியாம போன உடனே உங்ககிட்ட வந்துட்டாராக்கும் ?

"ஆமா .நா தான் வசியம் எடுத்தேன் .கையில முருங்க ஏல சார கசக்கி விடுவாங்க .அப்படியே இருந்தா ஒண்ணும் இல்ல, கெட்டியா ஆச்சுன்னா வசியம் இருக்குன்னு அர்த்தம் .பேதியாவறதுக்கு மருந்து கொடுப்பாங்க .வசியம் போயிரும் .முழுசும் போகலைனா தொண்டைல முடியா மொளச்சு வாந்தி வந்துகிட்டே இருக்குமாம் ."

 இப்ப என்ன செய்யலாம்ன்னு இருக்கீங்க ?
"வசியம் எடுக்கலாமா ?"
பேதிஎல்லாம் ஆச்சுன்னா ஒடம்பு தாங்காது .ரெண்டு மூணு மாசம் போகட்டும் .
"அதுக்குள்ளே முடி நெறையா மொளச்சா ? இப்ப அவரு தங்கச்சி (போலீஸ் இன்ஸ்பெக்டர் இவர் ) என்ன சொல்றாப்புலனா ,நீ வசியம் வச்சிருந்தா எடுத்திரு .(ஆனா நா எடுக்க தான் செஞ்சேன் .நா வைக்கல .சொன்ன நம்பல )நீ வசியம் வச்சதெல்லாம் சரிதான் .இனிமேல் என்ன ,எடுத்துரு வாந்தி நிக்கட்டும் "

உங்க வீட்டுக்காரருக்கு மஞ்சகாமாலை இருக்கு .அதனால வாந்தி வருது .தொண்டையில் காமெரா (endoscopy பண்ணியிருக்கோம் ) போட்டு பாத்தாச்சு .முடி கிடி எதுவும் உள்ள இல்ல .வேணா அந்த போட்டோ தரேன் .உங்க நாத்தனார் கிட்ட காமிங்க .


Tuesday 29 March 2016

பொம்மை கல்யாணம்

வாசலில் வந்திறிங்கிய முதல் என்னை பார்த்து சிரித்து கொண்டே இருந்தாள் அவள் .பொம்மைக்கு புடவை கட்டியது போல .நாம் பார்க்கும் பேஷன்ட் போல தெரியவில்லையே ,எதற்கு நம்மை பார்த்து இத்தனை வாஞ்சையாய் சிரிக்கிறாள் என்று சிறிது யோசித்துவிட்டு வேறு பேஷன்ட்டுகளை பார்ப்பதில் மூழ்கிப்  போனேன் .

சிறிது  நேரத்தில் நான்  வழக்கமாக பார்க்கும் சிறுமியின் பைலை கொண்டு வந்து தரவும் பளிச்சென்று நினைவுக்கு வந்தது ,இவள் தான் அவள் என .பார்த்து இரண்டு மூன்று வருடம் ஆகியிருக்கலாம் ..சுரிதாரோ பாவாடை சட்டையோ அணிந்திருப்பாள் .எப்போதும் வளையல் கம்மல் எல்லாம் மேட்சாக இருக்கும்.

 அம்மாவுடன் வருடம் ஒருமுறை விடுமுறையின் போது மட்டும் வருவாள் . ஏதோ ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்துக் கொண்டு இருந்தாள் .இவள் அம்மா ஒரு இளம் விதவை .அவள் அம்மா ஆதரவில் இருந்தாள் .மாத வருமானம் அதிக பட்சம் 5000 இருக்கலாம் .

உள்ளே வந்தாள் .பார்க்க அழகாகவும் சிரிப்பாகவும் இருந்தது .
என்ன பொடவ  கட்டியிருக்க ?
கல்யாணம் ஆயிருச்சு .
கல்யாணம் ஆயிருச்சா ?எப்ப ?
ஆறு மாசமாச்சு .
என்ன வயசு ஒனக்கு ?
பதினஞ்சு
ஒங்கம்மா ஒண்ணும் சொல்லலையே ?
ம்ம் ..நீங்க திட்டுவீங்கன்னு சொல்லல
மாப்பிள்ள ?
இங்க தான் அவரும் ட்ரீட்மென்ட் எடுக்குறாரு ...பைலை வாங்கி பார்த்தால் மாப்பிள்ளை வயது முப்பத்தெட்டு .
கூட்டிட்டு  வரவா ?உங்ககிட்ட பேசணுமாம் ..
குழந்தை பெத்துக்கணும்ன்னு  கேக்குறாங்க -
அதெல்லாம் ரொம்ப சின்ன பொண்ணு ,இன்னும் ரெண்டு வருஷமாவது ஆகணும் என்று அதட்டிய என்னை கோபமாக பார்த்துவிட்டு வெளியே சென்றான் .
ஒங்கம்மா வரட்டும் பேசிக்கிறேன் .

இன்று வந்தாள் அவள் அம்மா .பொல பொலவென்று அழ ஆரம்பித்தாள் .அவங்க வீட்ல ரெண்டு வருஷமா இந்த பொண்ண கேட்டுட்டே இருக்காங்க .வேண்டாம்ன்னு சொல்லிக்கிட்டே சமாளிச்சு,இப்ப ஊர்க்காரங்க எல்லாருமா சேந்து ,கட்டாயமா கோயிலுக்கு போன எடத்துல கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க .கல்யாணம் பண்ணிட்டா  அந்த பொண்ண நல்லாவே வச்சுக்கல ,என்னன்னு கேக்க  போன என்ன அடிச்சு வெரட்டீட்டங்க .எங்க அம்மாவும் செத்து போச்சு ,அண்ணன் தம்பியும் பேசுறதில்ல .என்னன்னு கேக்குறதுக்கு யாருமில்ல .இப்ப சொத்தும் இல்லன்னு சொல்லிட்டாங்க .பொழைக்க வெளியூர் போயிருக்காங்க .எம்புள்ளைய எங்கிட்ட பேச விடுறதில்ல .ஒங்ககிட்ட பேசுனா நா கேட்டேன்னு சொல்லுங்க .கொழந்த மட்டும் வேண்டாம்ன்னு சொல்லுங்கம்மா .நானும் என் புள்ளையும் இந்த நோய வச்சுட்டு படுற கஷ்டம் போதும் .இவ ஒரு கொழந்த பெத்தா அத பாக்குறதுக்கு எனக்கு தெம்பும் இல்ல எம்புள்ளைக்கு வயசும் இல்ல ....