Sunday 7 September 2014

மங்கையராய் பிறந்திட

என்னுடன்  பணிபுரியும் பெண்ணொருத்தி .அவளின் மகள்   போன வருடத்தில் பூப்பெய்தினாள் .சொல்வழக்கில் சொல்வதானால் சற்றே மதமதவென்று இருக்கும் உடல் அமைப்பு . ஆனாலும் சிறுமி .நேற்று பள்ளிக்கு சென்று வந்தவள் வீட்டில் அம்மாவிடம் "எனக்கு ஆபரேஷன்  செஞ்சுடும்மா "என்று சொல்லியிருக்கிறாள் .என்ன ஆபரேஷன் என்றால் மார்பை அகற்றி விடும் ஆபரேஷனாம் !

எதற்கு என்று விசாரித்தால் தினமும் பள்ளியில் ஆசிரியர்கள் இவள் உடல் அமைப்பை  பற்றி விமர்சித்தப்படி இருந்திருக்கிறார்கள் .அதிலும் பள்ளி பிள்ளைகளுக்கே உரிய  மூட்டை போன்ற பையை இவள் சுமந்துவர , "ஒழுங்கா நட " என்ற கண்டிப்புகள் வேறு .பாவம் குழந்தை பயந்து போய் , தானாக யோசித்து குழம்பி ஆபரேஷன் முடிவிற்கு வந்திருக்கிறாள் .

 ஒரு சிறுமியின்  ,"எனக்கு மட்டும்  ஏம்மா இப்படி இருக்கு ?" என்ற கேள்வியை ஒரு யதார்த்த தெளிவான பதிலாக்காமல் அதை ஒரு குற்ற உணர்ச்சியாக மாற்றிய அந்த ஆசிரியர்கள்   கடும் கண்டனத்துக்குரியவர்கள் . பட்டங்கள் ஆளவும்  சட்டங்கள் செய்யவும் பெண்கள் வந்துவிட்ட இன்றைய உலகத்தில் பெண் உடல் சார்ந்த பிம்பங்களை ஆசிரியர்களே இன்னமும் கெட்டியாக பிடித்துக்கொண்டிருப்பது எத்தனை இழிநிலை .

ஒரு சிறுமியின் மனதை சிதைத்து தேவையற்ற  குழப்பங்களை உண்டாக்கிவிட்டிருக்கிறார்கள் .இதை தெளிவுபடுத்திக்  கொள்ளும் வாய்ப்பு இவளை  போல எல்லா சிறுமிகளுக்கும் வாய்ப்பதல்ல .


எல்லா பாலியல் வன்முறைகளுக்கும் பெண்ணின் உடலையும் உடுப்பையும் குற்றம் சாட்டிவிட்டு  நிஜக் குற்றவாளிகளை தொடர்ந்து தப்பிக்க விட்டுக் கொண்டே இருக்கிறோம் .பள்ளியளவில்  பெண் உடல் சார்ந்த சரியான  அறிவும்   அது பெருமைக்குரியது  என்ற நிஜமும்  பெண்களுக்கும் ஆண்களுக்கும்  உணர்த்தப்பட வேண்டும் .அதைவிடவும் முக்கியமாக பெண்ணுடல் ஒரு  கவர்ச்சி பொருளல்ல என்ற  தெளிவும் .ஆனால் ,நாம் முதலில் கற்பிக்க வேண்டியது நமது ஆசிரியர்களுக்கு தான் போலும்


அதுவரையில் ....
பெண் என்றால் மார்பும் சதையும் இன்னபிறவும் ..........





10 comments:

துளசி கோபால் said...

நம் சமூகம் எப்போதான் திருந்துமோ:-((((((

காரிகன் said...

ஆணாதிக்கம் என்ற நமது பண்பாட்டின் நீட்சியே இது போன்ற பக்குவமற்ற பார்வைகள் என்று தோன்றுகிறது.

பூங்குழலி said...

ஆசிரியர்களின் பார்வையே இப்படி இருந்தால் சமூகம் எப்படி மாறும் துளசி ?

பூங்குழலி said...

உண்மைதான் காரிகன் ...பெண்ணின் உடலே எல்லா குற்றங்களுக்கும் காரணம் போலும்

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உடலைத் தாண்டி யோசிக்கத் தெரியாத சமூகம்.. கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே இப்படி என்றால்.... :(

ezhil said...

படிக்கும் போதே வருத்தமாய் இருக்கிறது...குழந்தையை அந்த அளவிற்கு சிந்திக்கத் தூண்டியிருக்காங்கன்னா எவ்வளவு கொடுமையான விமர்சனமாயிருக்கணும் அது...

பூங்குழலி said...

உண்மைதான் கிரேஸ் ..இது பெண் என்று மட்டுமல்ல .பெண் குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிக்கிறது என்பது மிக வருத்தமே . இது ஒரு வகை வன்முறையே

பூங்குழலி said...

ஆமாம் எழில் ... குழந்தையை இவர்கள் தொடர்ந்து விமர்சித்திருக்க வேண்டும் .இன்னும் எத்தனை குழந்தைகளோ ?

பால கணேஷ் said...

கடவுளே... ஆசிரியர்களே இந்த லட்சணத்தில் என்றால் மற்றவர்களை என்ன சொல்ல..? உடல் சார்ந்தே பெண்களைப் பார்க்கிற பழக்கத்தை இனிவரும் தலைமுறைகளிலாவது மாற்றிவிட முடியுமான்னு தெரியல....

பூங்குழலி said...

ஆசிரியர்களே உணரவில்லை என்றால் -மிகவும் வேதனையான விஷயம் கணேஷ்