Tuesday 18 March 2014

அன்புடைமை

இன்று  காலையில் நான் என் அறையில் உட்கார்ந்திருக்க அவசரமாய் வந்தார் அந்த மூதாட்டி .இவரின் மகனும் மருமகளும் என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்கள் . அவர்கள் இருவரும்  சிகிச்சைக்கு வருவார்கள் .இவர் எப்போதேனும் வருடம் ஒரு முறை போல வந்து போவார் ,இவர்களது உடல்நிலை குறித்து அறிந்து போக .இவர் தென் தமிழ்நாட்டு கிராம பகுதியை சேர்ந்தவர் .முன் கொசுவம்  வைத்து புடவை கட்டி அள்ளி முடிந்து கொண்டை  போட்டிருப்பார் எப்போதும் .

வந்தவர் வேகமாக ,"ரெண்டு தடவையும் வந்தப்ப நீ இல்லையாம் ,அதனால இந்த பாவி பைய டாக்டர் அம்மாவ  பாக்கவே முடியல .அவங்க வாரதே இல்லன்னு சொல்லிபுட்டான் .அவங்க இல்லைனா நா வரலைன்னு சொல்லியிருக்கேன் .நேத்து வந்து டிக்கெட் போட்டுட்டேன் சும்மா வாங்கன்னு சொல்றான் .சரி அம்மாளுக்குன்னு கொஞ்சம் வாழக்காய் ,அரிசி எடுத்து வச்சிருக்கேன்னு  சொல்ல ,அவுக இருக்குறதே இல்ல ,எல்லாத்தையும் சொமந்துட்டு போயி திரும்ப சொமந்துக்கிட்டு வரமுடியாதுன்னு சொல்லிட்டான் .போன தடவ இப்படித்தான் பனங்கிழங்கு எடுத்து வச்சு குருத்துவிட்டு போச்சு .நாச்சியா நீ  வாரமயே இருந்திட்டியே .இங்க வந்ததும் டாக்டரம்மா உள்ள தான் இருக்காங்க வேணும்னா போயி பேசிட்டு வான்னு சொல்றான் .

நாச்சியா ,எனக்கு உடம்பே முடியல .அடுத்த தடவையெல்லாம் வர முடியுதான்னு தெரியல .சாவறதுக்கு முன்னாடி ஒன்னைய பாத்திரனும்ன்னு நெனச்சேன் .இம்புட்டு  பெரிய தேங்கா ஏழு ,ஒரு கிலோ பச்சரிசி ,ஒரு தார வாழப்பழம்,வெளிய வச்சாலே பழுத்து போகும் .நல்ல நாட்டு பழம் .அம்புட்டும் எடுத்து வச்சேன் .நாச்சியா ,இல்லன்னு சொல்லி கொண்டு  வார முடியாம பண்ணிட்டானே படுபாவி .

இனிமேட்டு என்னால வர முடியாது .அய்யாவுக்கு வேற மேலுக்கு முடியல .நாச்சியா நீ எங்க ஊரு பக்கம் வந்தா கண்டிப்பா வீட்டுக்கு வரணும் .நீ ஸ்டேஷனுக்கு வந்து  ஒரு போன் மட்டும் போடு ,நா வந்து கூட்டியாறேன் .ஒனக்கு என்ன வேணுமோ சப்பாத்தி ,பூரி ,கேப்ப களி  நீ என்ன கேக்குறியோ செஞ்சு  தாரேன்   .நாச்சியா ,நீ கண்டிப்பா வரணும் ."




5 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

எளிமையானவர்களிடம்தான் அன்பு ஏராளமாக இருக்கிறது!

எம்.ரிஷான் ஷெரீப் said...

அன்பின் சகோதரி பூங்குழலி,

இம் மாதிரியான அன்பையெல்லாம் பணம் கொடுத்து ஒருபோதும் வாங்க முடியாது. நீங்கள் கொடுத்து வைத்தவர். தொடர்ந்து உங்களாலான சேவைகளை ஆற்றுங்கள் சகோதரி. நிச்சயம் அன்பு பல்கிப் பெருகும்.

வாழ்த்துக்கள் !

பூங்குழலி said...

நன்றி தனபாலன்

பூங்குழலி said...

உண்மைதான் தோழர் மபா

பூங்குழலி said...

நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் ரிஷான் ..இத்தகைய அன்பு கிடைப்பது நிகழ்காலங்களில் அரிதானதே