Tuesday 20 March 2012

கூடங்குளம்

கூடங்குளம் ,ஆறு மாதகாலமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டே தான் இருக்கிறது .அணு உலைகளுக்கு எதிரான மக்களின் குரலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே தான் இருக்கிறது .


காரைக்குடி வரை வந்து ,சிதம்பரம் புகழ் பாடிச் சென்ற பிரதமருக்கு இந்த பிரச்சனை குறித்து வாய்திறக்க மாஸ்கோ போக வேண்டியிருந்தது .தன்  அமெரிக்க முதலாளிகளை குளிப்பாட்டி வைத்திருந்த பிரதமர் அன்று  மாஸ்கோவில் ,தனக்கு ரஷ்யாவிலும் முதலாளிகள் இருப்பதை வெளிப்படுத்தினார் .


மத்திய அமைச்சர் நாராயணசாமியோ ஏதோ கவுன்ட் டவுன் சொல்லிக் கொண்டே இருந்தார் .இறுதியில் இந்த விஷயத்தில் நேர்மையாக பேசியது இவர் ஒருவரே .


கூடங்குளம் பாதுகாப்பானது என்று ஒரு தரப்பும்  பாதுகாப்பில்லாதது என்று மறுதரப்பும் வாதிட்டுக் கொண்டே இருக்கின்றன .மக்கள் மத்தியில் இது குறித்து ஒரு தீர்க்கப்படாத அச்சம் இருந்துகொண்டே இருப்பதன் விளைவாக போராட்டங்கள்( ஆரம்ப காலங்களில் பெரும் ஊடக ஆதரவு கிடைக்காத போதும் )நடந்து கொண்டே இருக்கின்றன .இதில் ஏதும் வன்முறை நிகழ்ந்ததாக தெரியவில்லை .


இதில் முதல் வன்முறையாக அரசு வெளிநாட்டு ஆதரவு என்று பெரும் பூச்சாண்டி காட்டியது .இதுவரை அறியப்படாத  ? உண்மையாக தன்னார்வ நிறுவனங்களுக்கு பெரும் தொகை வருவதாக அரசு கூறியது.வெளிநாட்டு நிதியை பெறுவதற்கென்றே இங்கு பலர் தன்னார்வ நிறுவனங்களை பேப்பர் வரையிலேனும் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இதுவரை தெரிந்து கொள்ளாமலா இருந்தது இந்த அரசு ?

முதல்வரோ ஒரு அசாதாரண மின்வெட்டை அமல்படுத்தினார்  .பின்னர்  சாதகமாகவே அறிக்கை தர உருவாக்கப்பட்ட ஒரு குழுவை அமைத்து அதன் அறிக்கையை பெற்றுக் கொண்டார்  .ஒப்புக்கு ஆதரவாளர்களையும் சந்தித்தார் .இடைத் தேர்தல் வேலைக்கு  மொத்த மந்திரி சபையையும் அனுப்பிவிட்டு ,அது முடியும் வரை காத்திருந்தார்  .

இடைத்தேர்தல் முடிந்த மறுநாளே போராட்ட ஆதரவு குழுவினர் கைது செய்யப்படுகின்றனர் .அதைவிட கொடுங்கோன்மையாக சுற்றுவட்டார கிராமங்களில் 144  அமலாக்கப்படுகிறது .ஊரிலிருந்து வெளியேறும் வழிகள் சீல் வைக்கப்படுகின்றன .


முதல்வர் அவர்களே ,


1.உங்கள் குழு அறிக்கை தந்தபடி, அணு உலை பாதுகாப்பானது என்றால் அதை மக்களுக்கு எடுத்து சொல்லாமல் எதற்காக அடக்கு முறையை ஏவிவிட்டீர்கள் ?


2.மக்களை இது குறித்து சந்திக்க நீங்கள்  தொடர்ந்து  மறுப்பது ஏன் ?


3.போராட்டக் குழுவினரை கைது செய்தது கூட நியாயமில்லை என்றாலும் போர்க்களம் போல போலீசையும் ராணுவத்தையும் மக்களுக்கு எதிராக ஏன் குவித்தீர்கள் ?


4.விலைவாசி உயர்வை டிவியில் வந்து தேனை குழைத்து சொன்ன நீங்கள் இத்தனை பெரிய விஷயத்தில் மக்களுக்கு ஒரு வெறும் அறிக்கையுடன் ஏன் முடித்துக் கொண்டீர்கள் ?


5.உங்கள் குழுவினரின் அறிக்கை உங்களுக்கு சரியென தோன்றியிருந்தால் அதை சொல்ல சங்கரன்கோவில் தேர்தல் முடியும் வரை காத்திருந்தது எத்தனை மலின அரசியல் ?


6 .எதற்கு இழப்பீடு போல திடீரென இத்தனை கோடிகளை ஒதுக்கினீர்கள் ?நன்மை பயக்கும் ஒரு திட்டத்தின் பலனாளிகளுக்கு இவை எதற்காக ?


7.மக்களிடம் பேச தேவையில்லை என்ற அகங்காரத்தை உங்களுக்கு தொடர்ந்து தருவது யார் ?


8.மக்கள் ,வாழ்வு நிலை போராட்டம் போன்றதான ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது 500     கோடியை பிடித்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் எங்கள் முதல்வரே ,பசியால் வாடிய தன் மக்களிடம் "EAT  CAKE " என்று சொன்ன பிரஞ்சு பேரரசி மேரி அன்டோனியெட்டுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம் ? 

Wednesday 7 March 2012

ராசா மகன்












பாராளும் பரம்பரைக்கு 

ஒருத்தனாக பொறந்த மகன்

ராசாத்தி ராசன் மகன்

மகராசன் கொள்ளுப்பேரன்


கன்னத்துல காத்து பட்டா 

கல்லு போல கன்னிப் போகும்

மேலுலத் தான் வெயிலு பட்டா

தோலெல்லாம்  வெடிச்சு  போகும் 



தங்க தட்டில் ரொட்டி தின்னு

நோட்டுல தான் கை தொடச்சி

பூ பாதம் நோகுமின்னு

கைமேல நடந்த தொர



அரண்மனை சொகத்த விட்டு

தெருவோட திரிஞ்சதென்ன

ஆளு சேன அம்பாரி

அத்துபுட்டு போனதென்ன   



உம்முன்னா ஓடி வர

நூறு பேரு இருக்கையில

வெறும் பய வீட்டிலெல்லாம்

சேவகம் தான் செஞ்சதென்ன



வகைக்கு ஒண்ணா தான்

சோறு பொங்கி கெடக்கையிலே

பட்டி தொட்டி பல திரிஞ்சி

பழைய கஞ்சி குடிச்சதென்ன



குடிசைக்கு தான் போனதென்ன

கடகண்ணி கண்டதென்ன

கண்ட பய தோள்மேல

கைபோட்டு நின்னதென்ன



ஆளில்லா சீமையில

அரசாள வந்த மகன்

மன்னரின்னு பட்டம் கட்டி

ஆள வந்த சீமதொர



செவத்த தோலு கருகருக்க

சேரிக்குள்ள போனதென்ன

சீமசென்ட் வாசன போய்

வியர்வ கண்ட கோலமென்ன




எடுபட்ட பயல்வளுக்கு

பெருமையெல்லாம் தெரியலையே

வீடு தேடி வந்து நின்ன

மவராசன் மனம் வெளங்கலியே



ஆகாச வெமானமெல்லாம்

வரிச கட்டி காத்திருக்க

அழுக்கான ரயில் ஏறி

போனபோதும் புரியலையே



கூட்டமா வந்து நின்னு

கூடித்தானே பாத்தாங்க

போட்டோவுல நெருக்கமாதான்

பல்லிளிச்சி நின்னாங்க



வீட்டுக்குள்ள வந்தப்ப 

கூழூத்த மறுக்கலையே 

கயத்து கட்டில் இழுத்துபோட்டு 

வீசி விட சொனங்கலையே 


வீடு வரை வந்தவுக 

வீதிவரை வாரலியே

வீதியில நின்னவுக 

பூத்து போயி சேரலையே 


போயி சேந்த பயலெல்லாம் 

மாத்தி போட்ட சோகமென்ன  

கஞ்சி ஊட்டி விட்டுபுட்டு

கைகழுவி போனதென்ன 


என்ன செஞ்சு என்ன செய்ய 

எங்க போயி சொல்லி அழ 

முச்சந்தியில் நிக்க வச்சு 

மூக்கறுத்தா ,எத சிந்த 



சொல்லி சொல்லி மாளலியே 

மனசு சொம எறங்கலியே 

மவராசன் அழகு மொகம்

காண மனம் பொறுக்கலியே 


சொரிஞ்சிவிட்ட முதுகெல்லாம் 

செரங்காத்தான் அப்பிடனும் 

கஞ்சி  போட்ட கைமொத்தம்  

வெளங்காம போயிரனும்


வோட்டு போட்ட பெரியவுக 

வேக்காட்டில் வெந்திடனும்

மாத்தி போட்ட மைனரெல்லாம் 

மக்கித் தான் போயிரனும் 


அரும தொர  மானமிப்ப 

கடசரக்கு ஆனதென்ன 

கண்ட பய பல்லுபட்டு 

பெரும கெட்டு போனதென்ன 


அழுதழுது  ஓஞ்சாலும்

போக வேற வழியுமில்ல 

அஞ்சு வருசம் ஆகும் முன்னே 

அங்க ஆள சாரமில்ல 


ஆத்தாளும்  அக்காளும்

அருமையான மச்சினரும்  

கண்ணுபட்டு வந்த  கொற 

காணாம போனதுன்னு 




மன்னருன்னு மகுடம் கட்டி 

அரசாள  பாத்திருங்க 

சீராக தோது செஞ்சி 


சிங்-காசனம் ஏத்திருங்க ....