Monday 31 October 2011

மழை

                                                              





இந்நாளில் ,
என்னுடன் கண்ணாமூச்சி
விளையாடுகிறது மழை
மேகங்களுள் ஒளிவதும்
வெளியே தெரிவதுமாக ...

மின்னலென சிரித்து
பரிகாசம் செய்கிறது
வானவில்லை அழித்துவிட்டு
அழுவதாக நடிக்கிறது

குடைக்குள் ஒளிவதும்
வெளியே வருவதுமாக
கண்ணாமூச்சி விளையாடுகிறேன்
மழையுடன் நானும்

நான் ஏமாந்த
பொழுதொன்றில்
ஹோவென சிரித்து
என்னை இறுகப் பிடித்தது மழை

சினந்ததாய் போக்குக் காட்டி
சிலிர்த்து நனைகிறேன்
கால்வரை கிச்சலம் காட்டி
கண்ணைக் கட்டுகிறது

"மழை பொழிந்து கொண்டே இருக்கும்"
எங்கோ பாடுகிறது
எவரின் வானொலியோ ..
உடல் ?
அட ,நனைந்து கொண்டே தான் இருக்கட்டுமே !



படத்திற்கு நன்றி :http://photobucket.com/images/girl+in+rain/

Tuesday 25 October 2011

மழை








உரத்த குரலில்
என்னை அழைக்கிறது மழை
சின்ன தூறலாய்
சிணுங்கிப் பார்த்து  
பெரும் துளியாய்
செல்ல சண்டை செய்து
பெரிய மழையாய்
இப்போது
கோபம் காட்டுகிறது .

எது செய்வதென்று தெரியாமல்
தவிக்கிறேன் நான் ...
கதவடைத்து காது பொத்தி
காணாதது போலிருக்கிறேன்
ஜன்னலில் ஆங்காரமாய்
அடிக்கிறது மழை .
தேநீர் கோப்பையுடன்
கவனியாதது போலிருக்கிறேன்
படி தாண்டி வருவேனென
அழிச்சாட்டியம் செய்கிறது.

உரத்த குரலில் அழைத்தபடியே
இன்னமும்
பெய்து கொண்டே இருக்கிறது மழை .
இனி தவிர்க்க முடியாதென
கதவை திறந்து
தெருவில் வந்து
தயக்கமாய் கால் நனைக்கிறேன்
ஜில்லென பாய்ந்து
என்னை ஆலிங்கனம் செய்து
உச்சி முகர்ந்தது  மழை ....




படத்திற்கு நன்றி :http://www.ghulmil.com/latest-animated-fantasy-wallpapers/animated-3d-girl-in-rain-wallpaper/

Sunday 9 October 2011

ஆலோசனை


நன்கு பரிச்சயமான நோயாளி தான் .தொடர்ந்து சிகிச்சைக்கு வருபவர் .மாத்திரைகளை சமீபத்தில் மாற்றியிருந்தேன் .

உடல் நலம் பற்றி பேசிக் கொண்டே இருக்கையில் ,"எனக்கு வரவர அதிகமா கோவம் வருது .வீட்டிலேயும் எங்கிட்ட வேல பாக்கிறவங்க கிட்டேயும் ரொம்பவே கோபப்படுறேன் .யாராவது நா சொன்னத சொன்னபடி செய்யலைன்னா நெறைய கோவம் வருது .இது புது மாத்திரையாலா ?எப்படி இந்த கோவத்த கொறைக்கலாம்  ? "என்றவுடன்  ." யார்கிட்டயாவது அடி வாங்கினா கோவம் தானா கொறையும் "என்றேன் விளையாட்டாக .


கண்ணில் நீர் வரும்வரை சிரித்தவர் ,"நா சாவற வரைக்கும் இத மறக்க மாட்டேன் "என்று சொல்லிவிட்டு போனார் .

Wednesday 5 October 2011

என் மௌனம்








சொற்களால் நிரம்பியிருக்கின்றன

என் மௌனங்கள்

சொற்கள் தவிர்த்து

சில புன்னகைகளும்

கேலி சிரிப்புகளும் கோபங்களாலும் கூட




பல நேரங்களில்

பல்லிடுக்குகளில் வழியே

மௌனம் தப்பி

வெளியேறுகின்றன சொற்கள் .



சில இக்கட்டுகளில்

பயந்தோடும் சொற்கள்

தொண்டைக்குழியில் பதுங்கி

மௌனத்தில் ஒளிகின்றன .



கதவுகள் அடைத்து

சாவி தொலைத்து

அவற்றை சிறை வைத்திருக்கிறது

மௌனம் .



விழுங்கப்பட்ட சொற்கள்

வேதனையில்

மௌனம் பிராண்டிக் களைக்கின்றன .



ஓய்ந்து போய்

மீண்டும் மீண்டும்

மௌனத்தில் கரைகின்றன .



என்றேனும் ஒருநாளில்

பேரிரைச்சலாய்

அவை சிறை தகர்க்கக் கூடும் .

அந்நாளில்

வெடித்து வெளியேறும்

சொற்களுடன் என் மௌனமும் .....