Thursday 18 August 2011

அனுபவம் புதுமை

அப்பாவோட சொந்த ஊரு ஆலடிப்பட்டி .அம்மாவோட அம்மா (ஆச்சி ),தாத்தா ,மாமா எல்லாரும் இருந்தது திருநெல்வேலியில .எங்க பெரிய பெரியப்பா அடிக்கடி ஊருக்கு போயிட்டு வந்துட்டு இருந்ததால அவரோட லக்கேஜோட சேத்து என்னையும் அனுப்பிவிட்டுருவாங்க .அங்க ஸ்டேஷனில என்னோட பெரிய மாமாவோ தாத்தாவோ வந்து கூட்டிட்டு போவாங்க .அங்க ஏதோ ஒரு பாலர்வாடிக்கு அப்பப்ப போயிட்டு வந்த நெனப்பிருக்கு .அதோட டீச்சர் டேபிள் மேலேயே உட்கார்ந்திட்டு இருந்ததும் ஜன்னல் வழியா டிரைன்ன பார்த்தும் புகைமூட்டத்துக்கு பின்னால லேசா தெரியுது .




ஆச்சி வீடு திருநெல்வேலி ஜங்ஷனில இருந்துது .வீடு என்னவோ நல்லவீடு தான் .ஆனா அன்றைய நிலவரப்படி டாய்லெட் கிடையாது .தனியறையில் கல்ல நட்டுவச்சி எறும்பா மேயும் ,அது பேரு ஐயோ, கக்கூஸ் .இது தவிர திண்ணையை தொட்டு சாக்கடை ஓடும் .இதுதான் பலபேருக்கு கழிவறையா இருந்திச்சு .இத சுத்தி எப்பவும் பன்னிங்க ,நம்ம சூப்பர் ஸ்டார் சொன்ன மாதிரி, கூட்டம் கூட்டமா சுத்திட்டு இருக்கும் .அதுங்களுக்கு அந்த சாக்கடை தான் பைவ் ஸ்டார் ஹோட்டல் .இப்ப எதுக்காக இந்த கதைன்னு மூக்கை மூடிக்கிட்டு கேக்குறவங்களுக்கு ,மேட்டரை சொல்றேன் .



வழக்கம் போல எங்க தாத்தா வீட்டுல நான் இருக்கேன் .என் அம்மா ,அப்பா ,தம்பி மெட்ராசில .அன்னைக்கு காலையில நெல்லையில எங்கம்மாவும் என் தம்பியும் ஊருக்கு வராங்க .இதுக்காக காலையிலேயே எங்க சித்தி என்னைய குளிப்பாட்டி ,மேக்கப் போட்டு ரெடி பண்ணி வச்சிருந்தாங்க .கொஞ்ச நேரத்தில ஆட்டோ ? சத்தம் கேட்டதும் ,எங்க சித்தி "குழலி கண்ணு ,அம்மா வந்தாச்சு "ன்னு சத்தம் குடுத்தாங்க .இந்த அலெர்ட் வந்த உடனே நா வேகமா கிட்சனை தாண்டி ,பெட்ரூமை தாண்டி ,திண்ணையை தாண்டி ஓஓஓஓஓஓஓ.......... டி வந்து பொத்துன்னு விழுந்தேன், சாக்கடையில ....நான் விழ பன்னியோட புல் மீல்ஸ்  ஒண்ணு  அடிச்சிக்கிட்டு வர டைமிங் சரியா இருந்துச்சி ...



எங்கம்மா என்னைய சாக்கடையிலிருந்து தூக்கி அப்படியே பின் வாசல் வழியா கொண்டு போயி தண்ணிய மேல ஊத்தி கழுவி ...அன்னையோட என்னோட நாடாறு மாசம் காடாறு மாசம் முடிவுக்கு வந்துது .