Monday 23 May 2011

பாசவலை



கண்ணுக்குள்ள ஒன்ன வச்சி
கனின்னு பேரு வச்சு
ஆசையெல்லாம் சேத்து வச்சு
மகளே ஒன்ன வளத்து வச்சேன்

வார்த்தை ஒண்ணு நீ சொன்னா
கவிதையின்னு களிச்சிருந்தேன்
ஒயிலா நீயும் சிரிச்சப்ப
ஓவியம் போலன்னு ரசிச்சிருந்தேன்

அரசியல் வேல செய்ய வந்தா
அலஞ்சு திரிய வேணுமுன்னு
அலங்காம கவித பாட
அரங்கத்துக்கு அனுப்பி வச்சேன்

யாரு கண்ணு பட்டிருச்சோ
எவரு பாவம் வெரட்டிரிச்சோ
காணாத கொடுமையெல்லாம்
கண்டதென்ன கண்மணியே

ஒன் அரும தெறமயெல்லாம்
தமிழ்நாடு தாங்காதுன்னு
கட்டியம் அறிஞ்சு நானும்
தல நகரம் செயிக்க சொன்னேன்

ராசாத்தி ஒன் வரவ
ரணமில்லாம செஞ்சுவிட
ராசாவ ஆள் பாத்து
தோதாக அனுப்பி வச்சேன்

வலியில்லாம நோகாம
புள்ள ஒண்ணு பெத்தாப்புல
கண்ணு ஒன் வழியெல்லாம்
பூவாத்தான் விரிச்சு வச்சேன்

சங்கமம்ன்னு நீ சொன்னா
தலையாட்ட சம்மதிச்சேன்
செல்லமே நீ கைகாட்ட
நோட்டாக நெறச்சு வச்சேன்

அப்பா என் பேர் வெளங்க
டிவி ஒண்ணு ஆக்கி வச்ச
அதில நானும் ஒன்பங்க
துண்ட போட்டு பிடிச்சு வச்சேன்

ஒனக்காக எவரையும் தான்
முடிச்சு விட நானிருக்கேன்
முள் மேல தலகீழா
நடந்து வர காத்திருக்கேன்

இப்படி ஒண்ணு வாருமின்னு
அறியாம நானிருந்தேன்
என்னை கேக்க யாருன்னு
தைரியமா தானிருந்தேன்

சீமைக்கு போனவங்க
சேதி பாத்து சொல்லலையே
செயிலில் களி திங்கனுமின்னு
கனவில் கூட நெனைக்கலியே

என்னருமை கண்மணியே
கண்ணு மட்டும் கலங்காதே
இந்த நெலம வந்துதுன்னு
தைரியமும் கொறையாதே

கட்டுமரமா நா மாறி
ஒன்ன கர செத்திடுவேன்
ராசாவதான் பணயம் வச்சு
ஒன் தலைய காத்திடுவேன்


ஏழு மல கடல் தாண்டி
ஒன்ன மீக்க வந்திடுவேன்
மதுர வீரன் போல நானும்
அசராம போர் தொடுப்பேன்

கேஸ எல்லாம் தூசாக
தூள் தூளா தகர்த்திடுவேன்
கவலையெல்லாம் மறந்துபுட்டு
கண்ணுறங்கு என்மகளே

Monday 16 May 2011

அன்புள்ள கலைஞருக்கு ,

அன்புள்ள கலைஞருக்கு ,

எல்லோரும் உங்களுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் நானும் எழுதுவதற்காக வருந்துகிறேன் .ஆனாலும் விவரம் தெரிந்த நாள் முதலே தலைவர் என்றால் நீங்கள் மட்டும் என்று வரையறுக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவள் என்பதால் உங்களிடம் எனக்கு கொஞ்சம் உரிமை அதிகம் உண்டு தானே .

பூசாரி குடும்பத்தில் பிறந்தும் பேரறிஞர் அண்ணாவாலும் உங்களாலும் ஈர்க்கப்பட்டு மஞ்சள் துண்டு அணிந்த உங்களின் அபிமானியாக இன்று வரையிலும் நாத்திகராக இருப்பவர் என் அப்பா . ஜெயா டிவியில் பாடல் ஒளிபரப்பைக் கூட காண சகியாதவர்.நீங்கள் முனாகாவன்னா வாக இருந்து, கலைஞராகி, தமிழின தலைவர் மற்றும் வாயில் எச்சில் போல் வந்து கொண்டே இருக்கும் பட்டங்கள் அளவும் நீங்கள் பேர் பெற்றதை பார்த்து பெருமை கொண்டவர் .நள்ளிரவில் நீங்கள் கைது செய்யப்பட காட்சிகளை கண்டு கதறி அழுதவர் . எம் ஜி ஆர் அசைக்க முடியாத மன்னாதி மன்னராக கோலோச்சிய என்னுடைய சிறு வயதில் கருணாநிதி என்று சொன்ன போது கலைஞர் என்று சொல் என்று கண்டிக்கப்பட்டவள் நான் .

புரட்சி தலைவர் மறைந்து (உங்களை தமிழின தலைவர் என்று சொல்லும் போது அவரை புரட்சி தலைவர் என்று சொல்லலாம் தானே ) நீங்கள் முதல்வரான போது தெருவெங்கும் உங்கள் பேரை சொல்லிக் கொண்டு ஊர்வலம் போன பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை எனக்கு நினைவிருக்கிறது ,ஆட்சி இல்லாத போதும் கட்சியை கட்டிக்காத்த உங்களின் ஆளுமையை பத்திரிக்கைகள் சிலாகித்து எழுதியதும் ...ஆனாலும் மாறி மாறி ஆட்சியில் இருந்தும் இன்று எதிர்கட்சியாக கூட இல்லாமால் போகுமாறு உங்களை கைவிட்டு எங்கு போனார்கள் ?அரசியல் சாணக்கியர் என்று சொல்லப்படும் உங்களின் சாணக்கியம் தோற்றது ஏன் ?

அண்ணாவிற்கு நெருக்கமாக இருந்த சம்பத் விலக அவரிடத்தை பிடித்துக் கொண்டீர்கள் .பின்னர் உங்கள் மகன் முக முத்துவை எம் ஜி ஆரை போல் வேடம் புனைய செய்தீர்கள் .அது பலிக்காமல் போனது .இதில் மனக்கசப்புகள் அதிகமாக இதயக்கனியை வண்டு துளைத்துவிட்டதாக சொல்லி உங்களின் அருமை நண்பராக இருந்த எம் ஜி ஆரை வெளியேற்றினீர்கள் (இதற்கான உண்மை காரணத்தை என்றாவது மக்கள் அறியக் கூடும் ).அதன் பலனாக பல ஆண்டுகள் ஆட்சியை நெருங்க முடியாமல் அவதிப்பட்டீர்கள் . செத்தும் கொடுத்தான் சீதக்காதி ,அது போல் எம்ஜி ஆர் இறந்தும் உங்களுக்கு முதல்வர் பதவியை தந்திருக்கிறார் என்று காளிமுத்து சொன்னார் ..நிஜம் தானே .அன்றும் உங்களுக்கு உங்கள் குடும்பம் முக்கியமாகவும் உங்கள் மருமகன் மாறன் மட்டுமே அறிவாளியாகவும் இருந்தனர் .


சில ஆண்டுகள் சென்ற பின் ஸ்டாலினை முன்னேற்ற தடையாக இருந்த வைகோவை ஏதோ காரணங்கள் சொல்லி மதிமுகவை உண்டாக்கினீர்கள் .சரி அதன் பிறகு தான் அவருக்கு வழி காலியானதே என்று சும்மா இருக்கவில்லை .அவரை இன்றளவும் காக்க வைத்திருக்கிறீர்கள் (இளவரசர் சார்லசுக்கு அடுத்தப்படியாக பட்டத்திற்கு அதிக காலம் காத்திருக்கும் யுவராஜர் இவர்தான் ).பிறகு மெதுவாக மூக்கை உள்ளே நுழைத்த அழகிரியை வெளியே நிறுத்தாமல் அவரையும் அதிகார மையம் ஆக்கினீர்கள் .உங்கள் ஆரம்ப கால அரசியல் தோழர் தா கிருஷ்ணன் கொலையுண்ட போதேனும் அவரை அப்புறப்படுத்தி இருக்கலாம் .வழக்கை நீங்கள் கையாண்ட விதம் பார்த்து நாடே வாய் பிளந்து நின்றது .

சரி இதோடு முடிந்ததா ?தயாநிதி மாறன் ,கனிமொழி என்று இருவரையும் களமிறக்கினீர்கள்.(ஏனோ கயல்விழி மட்டும் இன்னமும் பதவியில்லாமல் இருக்கிறார் . )இவர்கள் எல்லாருக்கும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்கள் என்பதை விட ஏதேனும் தகுதி இருக்கிறதா ?எஞ்சிவிட்ட உங்கள் மற்ற மகன் மகள் பேரன் பேத்தி எல்லோரையும் திரையுலகம் நோக்கி திருப்பிவிட்டீர்கள் .இதை நியாயப்படுத்த உங்கள் சக நண்பர்கள் மற்றும் ஜால்ராக்கள் பிள்ளைகளையும் வளர்க்க விட்டீர்கள் .யாரையும் யாரும் கேள்வி கேட்க முடியாது இல்லையா ?உங்கள் சாமர்த்தியம் ஊர் அறிந்தது தானே ?

இவற்றையெல்லாம் கூட நாங்கள் பொறுத்துக் கொண்டிருப்போம் நீங்கள் இதற்கான காரணங்களை பணிவோடு கூறியிருந்தால் ..ஆனால் கேட்ட போதெல்லாம் "என் குடும்பத்தினர் பிழைக்க கூடாதா ?என் மனைவி மலடாக இருக்க வேண்டுமா ?"என்ற ஆணவங்களை பதிலாக்கினீர்கள்.அலைகற்றை பற்றியும் ஈழம் பற்றியும் அதிகம் பேசியாகிவிட்டது .

இவை எல்லாம் ஆன பின்னும் கூட பணம் வாக்கு பெட்டிகளை நிரப்பும் என்ற வக்கிர கணக்கோடு காத்திருந்தீர்கள் .தட் வாஸ் தீ அன்கைண்டஸ்ட் கட் அப் ஆல்.இன்றளவும் ஓயாத உங்களின் உழைப்பும் ,தெவிட்டாத உங்களின் தமிழும் ,நகைச்சுவை மிளிரும் உங்களின் பேச்சும் என்றளவும் மறக்க முடியாதவை .மூன்று தலைமுறைக்கு தமிழ் கற்றுத் தந்த ஆசான் நீங்கள் .திமுக என்றாலே திரு . முக எனும் ஆளுமை நீங்கள் .

இனி என்றுமே நீங்கள் மீண்டும் முதல்வாராகும் வாய்ப்பு இல்லை என்றான அந்த மாலை பொழுதில் ,"மக்கள் எனக்கு நல்ல ஓய்வை தந்திருக்கிறார்கள் "என்று நீங்கள் புன்னகையோடு கூறி நகர்ந்த போது மனதின் ஒரு ஓரத்தில் ஒரு கீறல் தோன்றி மறைந்தது நிஜம் .

பணிவன்புடன் ,
பூங்குழலி

Wednesday 11 May 2011

சுட்டி

சில வருடங்களுக்கு முன் ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .வீட்டை எதிர்த்து காதல் திருமணம் ,மனைவியின் கர்ப்பம் அதோடு இருவருக்கும் எச் ஐ வி இருப்பது தெரிய வர ஏகப்பட்ட குழப்பத்தில் இருந்தார்கள் .பின்னர் மகன் பிறந்து ,வீட்டில் சமாதானமாகி இன்று நன்றாக இருக்கிறார்கள் .

போன வாரத்தில் பரிசோதனைக்காக வந்திருந்தார்கள் .அவர்களின் நான்கு வயது மகனின் குறும்புத்தனத்தில் மருத்துவமனையே அல்லோகலபட்டுக் கொண்டிருந்தது .என் அறையின் உள்ளே வந்ததும் ,"அப்பா ஒனக்கு ஊசி தான் . எங்கப்பாவுக்கு ஊசி போடுங்க .வீட்டில ஒரே சேட்ட .அம்மாவுக்கு வேண்டாம் ."பேசிக் கொண்டே இருந்தான் .ரைம்ஸ் சொன்னான் .அதட்ட முயன்ற அவன் அப்பாவை கண்டுகொள்ளாமல் ஒவ்வொன்றாக விசாரித்துக் கொண்டே இருந்தான் .

வெளியே கிளம்பும் போது ,வெள்ளை கோட் அணிந்திருந்த என்னை சட்டென்ற குனிந்து பார்த்துவிட்டு சொன்னான் ,"என்ன நீங்க சுரிதார் போட்டிருக்கீங்க ?நீங்கல்லாம் பொடவ தான கட்டனும் ?"