Friday 15 April 2011

எங்கூரு ...

போன வாரத்தின் சுவாரசியம் இது .ஒரு நோயாளி ,இதுவரை எங்கள் மருத்துவமனையில் வேறு மருத்துவர்களையே பார்த்து வந்தவர் .இந்த முறை என்னை பார்க்க வந்தார் .அதிமுக கரை வேட்டி கட்டியிருந்தார் .தீவிர கட்சிக்காரராக இருக்கிறாரே என்று, சும்மா பேச்சு கொடுத்தேன் .


"என்ன உங்கம்மா இந்த தடவை ஜெயிச்சுருவாங்களா ?"என்று கேட்டதற்கு "ஆமாம் மாறி மாறி வரலையா ?அப்படி பாத்தா ,அம்மா தான இந்த தடவ ஜெயிக்கணும் ?என்று கேட்டார் ."அது சரிதான் ,நிலவரம் எப்படியிருக்கு?"என்றதும் .எலெக் ஷன் கமிஷன் கெடுபிடியா இருக்குறதால அம்மா ஜெயிக்க நெறைய சான்ஸ் இருக்கு .இல்லைன்னா செரமம் தான் ."இதற்கு நாங்கள் ,"சரி ஒங்கம்மா ஜெயிச்சாப்புல பெருசா என்ன செஞ்சுருவாங்க ?"என்று வம்பளக்க ,கோபமான அவர் ,"படிச்சவுங்க ,நீங்க இப்படி சொல்லலாமா ?கருணாநிதி குடும்பத்துக்குன்னு அரசியல்ல இருக்காரு .இந்தம்மாவுக்கு குடும்பமா குட்டியா ?ஊருக்காக அரசியல்ல இருக்குது !அத போயி ..."


அவர் கிளம்பும் போது ,"சரி ஒங்கம்மா ஜெயிச்சவுடன் எங்களுக்கு சுவீட் எடுத்துட்டு வாங்க "என்ற போது ,"கண்டிப்பா கொண்டு வரேன், நீங்களும் மறக்காம வோட்ட போடுங்க ." "ஒங்க தொகுதி எது ?" மதுரையா மதுரைக்கு பக்கத்துலையா ?"மதுரைக்கு பக்கத்துல தான் ,ஓட்டுக்கு மூவாயிரம் ரூவா கொடுத்தாங்களே ,அந்த ஊரு தான் .திருமங்கலம் ."


Wednesday 13 April 2011

இன்று தேர்தல்

வாக்குப்பதிவு துவங்கிவிட்டது.எசன்ஷியல் சர்வீசாக மருத்துவமனை இருக்கிறதால ,இன்னைக்கி லீவு இல்ல (இல்லைனாலும் ரொம்ப குறைவாதான் லீவு தருவாங்க-நாளைக்கு நாளனைக்கு கூட லீவு இல்லைன்னா பாத்துக்கோங்க ).வெளிய கூட சொல்ல முடியாது .உடனே மருத்துவர்கள் சேவை செய்ய வேண்டும் ன்னு கொடி பிடிச்சிகிட்டு கிளம்பிடுவாங்க .அவசரம்ன்னு வரவங்களுக்கு பார்க்கிறதுக்கு மருத்துவர் இருக்கனும்ங்கறது நியாயம் தான்,ஆனா மத்தவங்க ?ஒரு வேலையும் இல்லாம கும்மி அடிக்க வேண்டியது தான் .கரென்ட் ,நெட் எல்லாம் வேஸ்ட் .இப்பக் கூட நாலு மருத்துவர்கள் இருக்கோம் .வந்த நோயாளிகள் ?மூச்சைப் பிடிச்சிக்கோங்க ...ஏழு பேர் .


வெளிய என்ன நடக்குதுன்னு தெரியல .விறுவிறுப்பா வாக்குப்பதிவு நடந்திட்டு இருக்கும்ன்னு நெனைக்கிறேன் .மத்தியானம் பெர்மிஷன் கொடுத்திருக்காங்க .ஆனா மத்தியானம் போனா ஒங்க வோட்டே இருக்காதுன்னு பயமுறுத்துறாங்க .சில பேர் இந்த தடவ அப்படியெல்லாம் பண்ண முடியாதுன்னு சொல்றாங்க .போய் பாத்தா தெரியும் .என்னோட வோட்டு இல்லன்னா அங்கேயே தர்ணா பண்ணலாம்ன்னு இருக்கேன் .விளம்பரமாவது கிடைக்கும் .


வேட்பாளரை தேர்ந்தெடுக்கறது கட்சிக்கு கூட சுலபம் தான் போலிருக்கு .பல சி களுடைய பெரும்பான்மை சாதியை சேர்ந்தவரா இருந்தா போதுமாமே ?(பெரியாரா ?யாருங்க அவரு ?தாடி வச்ச சத்தியராஜ் மாதிரி இருப்பாரே ?) நமக்கு தான் எரியற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல ? கொள்ளின்னு கண்டுபிடிக்க கஷ்டமா இருக்கு .இப்படியிருக்கேன்னு ஓட்டே போடாம விட்டிரலாம்ன்னா மனசாட்சி வருத்தப்படும் போலிருக்கு .


அய்யா கட்சிக்கு போடலாம்ன்னா எலெக்க்ஷனுக்கு அப்புறம் வடிவேலுவை முதல்வரக்கிடுவாங்களோ ன்னு பயமாயிருக்கு .அப்புறம், திருமதி ஸ்டாலின் வெயில கூட பட்டுபுடவ கட்டிக்கிட்டு ஓட்டு கேக்குறாங்க ,வயித்தெரிச்சலா இருக்கு .சரி இவங்கள விட்டுட்டு அம்மாவுக்கு போடலாம்ன்னா தலைநகரை கொடநாட்டுக்கு மாத்திடுவாங்களோன்னு யோசிக்க வேண்டியிருக்கு .கேப்டன் கட்சியில அவங்க வீட்டுக்காரம்மா நின்னிருந்தா கண்டிப்பா அவங்களுக்கு போட்டிருக்கலாம் .இந்த குழப்பம் போதாதுன்னு காங்கிரஸ் ,பி ஜே பி எல்லாம் வேற போட்டியிடறாங்களாமே ?சொல்லவே இல்ல ..


என்னோட தொகுதி மைலாப்பூர் .இங்கே காங்கிரஸ் சார்பா நடந்த பலே வேலையெல்லாம் பார்த்தப்புறம் ..(இது மாதிரி ஒரு களவாணி தலைவர் எந்த கட்சிக்கும் கொடுத்து வைக்கல ) 49 ௦ போடலாமான்னு பாக்கறேன் ,அதையும் போட்டு பாக்க வேண்டாமா .எங்கேயோ எழுதணுமாமே ?பி ஜே பி சார்பில வானதி மட்டும் தான் எங்க ஏரியாவில வோட்டு கேட்டு வந்தாங்க .மத்தவங்க கண்டுக்கல ,அதையும் யோசிக்க வேண்டியிருக்கு .அப்புறம் அவங்க பேரும் என்னோட பேரும் பொன்னியின் செல்வன் பேரா வேற இருக்கு .இதுவும் கொஞ்சம் சென்டிமென்ட்டா இருக்கு .அதிமுகவில ராஜலட்சுமி ன்னு ஒருத்தங்க நிக்கறாங்க .ரொம்ப அமைதியானவங்க போல .சத்தமே காணோம் .எங்கம்மா பேரும் அவங்க பேரும் ஒண்ணா இருக்கு .இப்படி பல குழப்பத்துல இருக்கேன் .பேசாம டிப் டிப் டிப் போட்டு பாக்கலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன் .வாத்தியார் ஐயோ ஸாரி புரட்சிதலைவர் மட்டும் உயிரோட இருந்திருந்தா .........ம்


Tuesday 12 April 2011

தேர்தல் ஸ்பெஷல் -2



கண் மூடி தெறக்கும் முன்னே
கனவு போல போச்சுதையா
பொசுக்குன்னு தான் நாள் குறிச்சு
பொது தேர்தல் வந்ததைய்யா

வெறப்பா தான் நின்னு நின்னு
காலு தேஞ்சு போச்சுதய்யா
கும்பிட்டு தான் நின்னதில
கை மரத்து போச்சுதையா


இளிச்சிக்கிட்டே இருந்ததில
வாய் கோணி இழுத்திருக்கு
கத்தி கத்தி பேசி பேசி
தொண்ட சுளுக்கி போய் கெடக்கு


சீட்டு கேட்டு போன போது
சிட்டாத்தான் நானிருந்தேன்
மனுதாக்கல் செய்யும் போதும்
தெம்பாத்தான் நானிருந்தேன்


கண்ணுல தான் வெரல விட்டு
கமிஷன் தண்ணி காட்டும் வர
மல்லுவேட்டி மைனர் போல
மொறப்பா தான் நானிருந்தேன்

அஞ்சு வருஷம் ஊருக்குள்ள
வாராம நானிருந்தேன்
கார் போகிற போக்கில தான்
தொகுதியையே பார்த்திருந்தேன்


காது குத்து வச்சப்போ
கட்சிகாரனின்னு மதிக்கலையே
ஆஸ்பத்திரியில இருந்தப்ப
அவசரமின்னு நெனைக்கலையே


வீடெல்லாம் வெள்ளத்தில
வெறகு போல மெதக்கையில
வீட்டுக்குள்ள ஏசி போட்டு
வெதுவெதுப்பா தான் இருந்தேன்


பதவியில பத்திரமா
பவுசாக இருந்த வர
ஆளுன்னு தெரியலையே
அவன் தேவைன்னு புரியலையே


இப்ப தெருக்குள்ள நான் போனா
ரோட்ட வெட்டி போட்டிருக்கான்
வோட்டு கேட்டு தான் போனா
வராதேன்னு போர்டு வைக்கான்


நோட்ட மட்டும் எடுத்து விட்டா
வோட்டு போட வருவானுன்னு
துட்ட எடுத்து போகையில
தேர்தல் கமிஷன் சீலு வைக்கான்


பணமுன்னு அழுவேன்னா
பதவின்னு அழுவேன்னா
என்னத்த நான் செய்ய
என் பாடு எங்க சொல்ல


கோடியாக கொட்டி வச்சு
சீட்டு வாங்கி வந்திருக்கேன்
தலைவர் பேரன் கொள்ளுப்பேரன்
வரை கால பிடிச்சி தொங்கியிருக்கேன்


நாலு பக்கம் நான் அழுது
வேட்பாளர் ஆகியிருக்கேன்
நெனைப்பு கெட்ட ஜனங்க கிட்ட
என்னன்னு சொல்லிடுவேன்


சொமையோட இருந்துபுட்டா
சொமக்குறது கஷ்டமில்ல
சொகுசாக இருந்துவிட்டா
சொமக்குறது சுலபமில்ல


பதவி பறி போச்சுதுன்னா
ஒரு நாயும் மதிக்காது
கட்சி ஆபிஸ் தரையிலதான்
குந்த இடம் கிடைக்காது


என் நெலம புரிஞ்சுக்கிட்டு
வோட்ட கொஞ்சம் போட்டிருங்க
செய்யாம போனதையெல்லாம்
பெரிய மனசு பண்ணி மறந்துருங்க


எம் எல் ஏ ஆகிபுட்டா
பெரிய மினிஸ்டர் ஆகிடுவேன்
தீராத ஒங்க கொற
அப்ப நானும் தீத்து வைப்பேன்


தாய்மாரே அய்யாக்களே
வோட்டிருக்கும் தொரமாரே
கண்தொறந்து பாருமையா
வோட்டத்தான் போடுமையா


Wednesday 6 April 2011

தேர்தல் மேடை -2

எல்லா கட்சிகளும் சொந்தமாக தொலைக்காட்சி வைத்துக் கொண்டு அவரவர் சொந்த கொள்கைகளை பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள் .சும்மா சொல்லக் கூடாது தலைவர்களோ அவர்களின் ஆஸ்தான எழுத்தாளர்களோ ,தெரியவில்லை சிறப்பாகவே சிந்திக்கிறார்கள் .கேட்டதில் பிடித்தவை சில .


"தலைவர்கள் தொண்டர்களை ஏமாற்றுவார்கள் ஆனால் மனைவிமார்களை ஏமாற்றும் பழக்கத்தை முதல்முதலாக தங்கபாலு தொடங்கி வைத்திருக்கிறார்." --- வேற யாரு ! ஈ .வி .கே .எஸ்.இளங்கோவன் தான் .


"வெள்ளையனே வெளியேறு போல இது கொள்ளையனே வெளியேறு போராட்டம் "--புரட்சியாக ஜெயலலிதா .


"கரும்பு தோட்டத்திற்கு யானையை காவல் வைக்கலாமா ?கொய்யா தோட்டத்துக்கு குரங்கை காவல் வைக்கலாமா ?அதனால தான் சொல்றேன் ,மக்களே ,கலைஞர முதல்வராக்காதீங்க "---விஜயகாந்த் .


"கொலை செய்வதும் கலையப்பா ,கொள்ளை அடிப்பதும் கலையப்பா ,மந்திரிகுமாரியில இவர் எழுதுன வசனம் தான்"--விஜயகாந்த் .


"எனக்கு எதிரி என்று சொல்ல மாட்டேன் ,எதிர்ப்பாளர் என்றும் சொல்ல மாட்டேன் ,என்னைப் பிடிக்காதவர் ,அவ்வளவு தான் "---ஜெ பற்றி உருக்கமாக கலைஞர் .


"என் மடியில் தவழ்ந்த குழந்தை இளங்கோவன் "---சென்டிமென்ட்டாக கலைஞர் .


"இலவசம் தேவை தான் .ஆனால் எவை இலவசமாக தேவை தெரியுமா ?இலவச கல்வி தேவை ,இலவச தண்ணீர் தேவை ,நல்ல ரோடுகள் தேவை .."---- ஜெயிக்க போவதில்லை என்ற தன்னம்பிக்கையில் யாதவ சபை தலைவர் தேவநாதன் யாதவ் .


கலைஞர் டிவியில் இப்போதெல்லாம் ஸ்டாலினை விட கனிமொழியைவிட ஏன் கலைஞரை விடவும் கூட வடிவேலுவை தான் அதிகம் காண்பிக்கிறார்கள் .இந்த தேர்தலே விஜயகாந்திற்கும் வடிவேலுக்கும் நடக்கும் சொந்த தகராறைப் போல காட்டுகிறார்கள் .


பிரேமலதா விஜயகாந்த் சுலபமாக புரியும் படி சுற்றி சுற்றி பேசுகிறார் .ஆனால் இந்த வெயிலில் எப்படித்தான் அத்தனை நீள கை வைத்த சட்டை போட்டிருக்கிறாரோ தெரியவில்லை .பார்க்கும் போதே வேர்க்கிறது .


அம்மாவின் வண்டிதான் இந்த தேர்தலின் ஹைலைட் .ஆனால் அவர் வைத்துக் கொண்டு படிக்கும் பெரிய எழுத்து நல்லதங்காள் கதை வகை குறிப்புகள் சரி தமாஷ் .அப்புறம் பக்கத்து மேட்டில் வேட்பாளர்கள் வரிசையாக நிற்பதும் ஜெ பேர் சொல்லும் போது உள்ளேன் அம்மா சொல்வதும் ....:))) .


Tuesday 5 April 2011

முன்பொரு காலத்தில் தேர்தல் .....

முன்பெல்லாம் தேர்தல் என்பது திருவிழா போல் இருந்தது .படங்கள் மாற்றப்படும் போது ஒரு தட்டியை மாட்டு வண்டியில் வைத்து கொண்டு வழி நெடுக துண்டு சீட்டு கொடுத்துக் கொண்டு போவார்கள் ,தேர்தல் நேரத்தில் கும்பிட்டபடியே இந்த தட்டிகளில் ஊர்வலம் வருவார் வேட்பாளர். அதன் பிறகு அவரின் உறவினர்கள் பலரும் வீடு வீடாக வந்து வாக்கு கேட்பார்கள் .



பல இடங்களில் பெண்கள் வந்து ஆரத்தி எடுத்து வசூல் செய்து கொண்டு போவார்கள் .இதிலும் முன்பெல்லாம் அவர்கள் ஆதரிக்கும் வேட்பாளர்களுக்கு மட்டுமே ஆரத்தி. பின்பு எல்லாருக்கும் எடுத்து பணத்தை பிராக்கெட் பண்ணுவது வழக்கமாகிப் போனது .ஊருக்குள் நுழையும் போதே ஓட்டு விழுமா விழாதா என்று தெரிந்து விடுமாம் .


ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டி ,சுவரெல்லாம் சித்திரம் தீட்டி திரும்பும் இடமெல்லாம் கட்சியின் சின்னங்களாக இருக்கும்.மற்ற கட்சிகளை கிண்டல் செய்தும் தங்கள் கட்சியின் சின்னத்தை விளம்பரப்படுத்தியும் ஒரு இளைஞர் கூட்டம் பாட்டு பாடி ஓட்டு கேட்டு வரும் ("போடுங்கம்மா ஓட்டு ,ரெட்டை இலையைப் பார்த்து இல்லை உதயசூரியனைப் பார்த்து ", "காமராஜர் ஹிந்தி படிக்கணும் ,கக்கன்ஜியும் சேர்ந்து படிக்கணும் "-இது இந்தி எதிர்ப்பு போராட்டம் போது ) .கட்சியின் முக்கிய தலைவர்கள் பேசும் நாட்களில் அக்கம் பக்கம் ஊர்களிலிருந்து எல்லாம் வந்து சேர்வார்கள் அவர்களின் பேச்சைக் கேட்க .


தேர்தல் கமிஷன் திடீரென்று இவையெல்லாம் மக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும் பின் ஏதேதோ காரணங்களுக்காகவும் தேர்தல் சீர்திருத்தங்களை கொண்டு வந்தது .இதன் பின் சுவர்களில் படம் வரைவது போஸ்டர் ஒட்டுவது தடை செய்யப்பட்டது .சத்தமாக பிரச்சாரம் செய்வது ,நடு இரவு பிரச்சாரம் செய்வது போன்றவையும் நிறுத்தப்பட்டன .எங்கேனும் ஏதேனும் அண்ணா ,கலைஞர் ,எம் ஜி ஆர் என்று யாராவது ஒலி நாடாக்களில் பேசிக்கொண்டே இருப்பார்கள் .எம் ஜி ஆர் எல்லா பட்டி தொட்டிகளிலும் தத்துவபாடல்களும் அவ்வப்போது காதல் பாடல்களும் பாடிக் கொண்டே இருப்பார் .அனைவரையும் ஆப் செய்தது தேர்தல் ஆணையம் .


செலவுகளும் நிறைய கண்காணிக்கப்பட்டன .ஆனால் அதிசயமாக போஸ்டர்கள் காணாமல் போனது போல் பணம் காணாமல் போகவில்லை .அண்டர்கிரவுண்ட் போனது .அங்கங்கே சாராயம் ,நிறைய இடங்களில் பிரியாணி ,பூத்திற்கு பணம் ,ஆரத்திக்கு பணம் என்று சில்லறைகளாக செலவழிந்து கொண்டிருந்த பணம் ,பாதாளம் வரை பாய்ந்து ஓடத் துவங்கியது .பூத்திற்கு பணம் என்பது போய் ஒவ்வொரு ஓட்டிற்கும் பணம் (பொன்னான வாக்குகள் இல்லையா சும்மா போடா முடியுமா )என்றானது .


தற்சமயம் எல்லா கட்சிகளும் ஆளுக்கொரு தொலைகாட்சி வேறு வைத்திருக்கிறார்கள் .விளம்பர இடைவெளியின் போதெல்லாம் தலைவர்கள் வந்து தலைக்காட்டுகிறார்கள் ,பேசியதையே திரும்ப திரும்ப பேசுகிறார்கள் .ஆனாலும் மனப்பாடம் ஆகாமல் துண்டு சீட்டுகளில் இருந்தும் பெரிய அட்டைகளில் இருந்தும் படிக்கிறார்கள் .அப்புறம் கிராபிக்ஸ் வேறு ,எம் ஜி ஆர் விஜயகாந்தாகிறார் (எம் ஜி ஆரின் ஆன்மா அவரை மன்னிக்கட்டும் ) .அவரவர் செய்தி தொலைக்காட்சிகளில் தலைமையின் ஆணைக்குட்பட்ட விரிவா ஆஆஆஆஆன அலசல்கள் .அப்புறம் பாடல்கள் அதற்கு தலைவர்களில் நடிப்பு .


இப்படியாக டிவி பொட்டிகளுக்குள் அடங்கிப் போன தேர்தல் நிறைய களையிழந்து தான் போனது .கோடி லட்சம் என்று பிடிபடுவதையும் எல்லா கட்சிகளிலும் உள்குத்து நடந்து போட்டி வேட்பாளர்கள் நிற்பதையும் தவிர சுவாரசியமாக எதுவும் இல்லை .சுவர்களில் படம் வரைந்தால் , கமிஷனே ஆள் வைத்து வெள்ளை அடிக்கிறது .எதிர்கட்சிகள் கிழிக்க வேண்டிய போஸ்டர்களையும் கூட தேர்தல் கமிஷனே கிழிக்கிறது .மக்கள் காலை எழுந்தவுடன் வீட்டு வாசலில் கவரில் பணமோ சேலையோ கிடக்கும் என்ற ஆசையில் தேர்தல் நேரத்திலும் வழக்கம் போலவே தூங்கப் போகிறார்கள் .