Wednesday 16 March 2011

ஜோத்பூர் -யார் பொறுப்பு ?

பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறப்பு என்று நமக்கு காலம் காலமாக சொல்லப்பட்டு வந்திருக்கிறது .உலகெங்கும் ஒவ்வொரு நிமிடமும் ஒரு பெண் கர்ப்பம் சம்பந்தப்பட்ட காரணங்களால் இறக்கிறாள் .
பல வளரும் மற்றும் ஏழை நாடுகளில் இன்னமும் பிரசவங்கள் வீடுகளிலேயே இதற்கென ஏதும் பயிற்சி இல்லாதவர்களாலேயே செய்யப்படுகிறது .பிரசவம் சம்பந்தப்பட்ட மரணங்களுக்கான காரணங்கள் பலவாக சொல்லப்பட்டாலும் சரியான பயிற்சி இன்றி செய்யப்படும் பிரசவங்களும் போதிய வசதிகள் இல்லாத இடத்தில் செய்யப்படும் பிரசவங்களும் முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது .


சமீபத்தில் ராஜஸ்தான் ஜோத்பூர், உமைட் மருத்துவமனையில் நிகழ்ந்துவிட்ட மரணங்கள் தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியவை .கடந்து மூன்று வாரங்களில் மட்டும் இந்த மருத்துவமனையில் பதினெட்டு பெண்கள் இறந்திருக்கின்றனர் .இதில் பதினேழு பேர் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டவர்கள் .ஒருவர் கருப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர் .இது தவிரவும் பச்சிளம் குழந்தைகள் மூன்று பேரும் பலியாகி இருக்கின்றனர் .

இறந்தவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சைக்கு பின் தீவிர ரத்தபோக்கு ஏற்பட்டு பின்னர் நிலைமை மோசமடைந்து மரணம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது .பதினாறு மரணங்கள் நிகழ்ந்து விட்ட பிறகே மாநில அரசு விழித்தெழுந்து காரணங்கள் கண்டறிய முற்பட்டிருக்கிறது .ஆரம்ப விசாரணையில் இந்த பெண்களுக்கு ஏற்றப்பட்ட ஐ வி ப்ளூயிட்ஸ் எனப்படும் குளுகோஸ் பாட்டில்களில் காளான் இருப்பது கண்டறியப்பட்டது .இதை தொடர்ந்து இந்த பாட்டில்களை சப்பளை செய்த இண்டோரை சேர்ந்த பேரென்டெரல் சர்ஜிகல் நிறுவனத்தின் கிடங்குகள் சோதனையிடப்பட்டு அங்கிருந்த பத்தாயிரம் பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன .அதன்பின் ஆறு மருத்துவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு விசாரணை செய்து கொண்டிருக்கிறது .மருத்துவமனையின் ஆபரேஷன் தியேட்டர்கள் மூடப்பட்டிருக்கின்றன .

மாநில அரசு இறந்தவர்களுக்கு இழப்பீடாக ஐந்து லட்சம் ரூபாய் அறிவித்திருக்கிறது

கொல்கத்தாவில் சோதனை செய்யப்பட பாட்டில்களில் மூன்றில் ஒன்றில் OD 0077 என்ற நச்சுப் பொருள் இருந்தது நிரூபிக்கப்பட்டிருந்தது .

இவையெல்லாம் நமது நாட்டு நடப்பின் விதிமுறைகள் படி சரியாக நடந்து கொண்டிருந்தாலும் ,பதில் காணப்படவேண்டிய கேள்விகள் இதில் நிறைய உண்டு .

1.ஆரம்ப நிலை விசாரணையிலேயே மருத்துவமனையில் பல குறைபாடுகள் ,குறிப்பாக ,ஆபரேஷன் தியேட்டர் பராமரிப்பு ,பணிபுரியும் மருத்துவர்களின் பயிற்சியின்மை ,சீனியர் மருத்துவர்கள் மேற்பார்வையிட வராதிருத்தல் போன்ற பல விஷயங்கள் சுட்டிக்காட்டப்பட்டும் மருத்துவமனை ஊழியர்கள் ஒருவர் மீது கூட இன்னமும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை ?

2.கெட்டு போயிருந்த ப்ளூயிட்ஸ் தான் காரணமென்றால் மற்ற அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு ஏன் எதுவும் நேரவில்லை ?இல்லை இது வெளியில் தெரியவில்லையா ?

3.தொடர்ந்து ஒரே வகையான மரணங்கள் ஏற்பட்ட போது ஏன் நிர்வாகம் உடனே காரணங்களை ஆராய்ந்து பார்க்கவில்லை ?

4.மருத்துவமனை சுகாதாரமும் அதன் மேற்பார்வையும் இத்தனை சீர்கெட்டு கிடக்கும் நிலையில் ,அதை தற்காலிகமாகவேனும் மூடாமல் தொடர்ந்து சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார்கள் ஏன் ?

5.ஏன் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை தரக்கூடாது ?

சிகிச்சை என்பது நோய்க்கு ஏற்றாற்போல் என்பது மாறிப்போய் நோயாளியிடம் இருக்கும் பணத்திற்கேற்றார் போல் என்று மாறிக் கொண்டிருக்கிறது .பணம் இருப்பவர்களுக்கு நல்ல ? உயர்தர சிகிச்சையும் இல்லாதவர்களுக்கு இருக்கும் பணத்திற்கு ஏற்றாற்போல் சிகிச்சை வழங்குவதும் நடைமுறையாகிவிட்டது .கார்பரேட் சலுகைகள் ,ஊழல் என்று லட்சக் கணக்கான கோடிகளை இழக்கும் அரசு எல்லோருக்கும் சமமான மருத்துவம் கிட்ட வேண்டும் என்பதில் ஏனோ பாராமுகமாக இருக்கிறது .

பெரும் பணக்காரர்களும் அரசியல்வாதிகளும் நட்சத்திர மருத்துவமனைகளில் போய் படுத்துக்கொள்கின்றனர் .வசதி இல்லாதவர்கள் அரசு மருத்துவமனைகளில் வேறு வழியின்றி தஞ்சம் புகுகின்றனர் .இதை சரி செய்ய அரசு மருத்துவமனைகளை மேம்படுத்துவதை விட்டுவிட்டு ,மாநில அரசு தனியாருக்கு காப்பீடு என்ற பெயரில் கோடிகளை இறைக்கிறது .நடுவண் அரசோ ,இந்தியாவை வல்லரசாக்கவும் பதவியில் உள்ளோர் எதிர்காலத்தை வளமாக்கவும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டிருக்கிறது.

ஜோத்பூரில், அலட்சியத்தால்,பல குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டிருக்கின்றனர் .இன்று வரையில் சரியான பதில் சொல்லவோ பொறுப்பேற்றுக் கொள்ளவோ எவரும் தயாராக இல்லை. இந்த மரணங்கள் ஒளிருவதாக நாம் பறைசாற்றிக் கொள்ளும் இந்தியாவில் அழிக்க முடியாத கறைகள் ,அவமானங்கள்.

Monday 14 March 2011

ஆன்ட்டி வைரஸ்

முதன் முதலாக எச் ஐ வி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு வரும் பலரும் கேட்கும் ஒரே கேள்வி இதுதான் ,"நோய் இல்லாம பண்ண மருந்து வந்திரும்ல ,எப்ப வரும் ?"இதை கேட்காத நோயாளிகள் கிடையவே கிடையாது .

இதோடு இது தொடர்பாக பத்திரிக்கைகளில் செய்திதாள்களில் வரும் அத்தனை செய்திகளையும் வெட்டி எடுத்துக் கொண்டும் வருவார்கள் ."இப்படி போட்டிருக்கிறதே ,இந்த மருந்து சாப்பிட்டு சரியாகும் என்று எழுதியிருக்கிறதே ?இது எங்கள் ஊரில் மிகவும் பிரபலமான பத்திரிகை ,இதில் போட்டிருந்தால் சரியாக இருக்கும் ,"என்றெல்லாம் நம்பிக்கையை மனதில் ஏந்திப் பிடித்துக் கொண்டு வருவார்கள் .

இன்னும் சிலர் ,நாங்கள் எச் ஐ விக்கு மட்டுமான பிரத்தியேக மருத்துவமனையாக இருப்பதால் நோய் ஒழிக்கும் மருந்து வந்தால் அது எங்கள் வருமானத்தை குறைக்கும் ,அதனால் நாங்கள் அதை கொடுக்காமல் போகக் கூடும் என்று முடிவு செய்துகொண்டு ,நாசூக்காக ,"அப்படி நோய் இல்லாமல் செய்வதற்கு மருந்து வந்தால் நீங்கள் கொடுப்பீர்கள் தானே? இந்த நோய்க்கு மருந்து வந்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள் ?" என்று கேட்டு வைப்பார்கள் ."வேறே நோய்க்கு வைத்தியம் பார்க்க போவோம் .ஆனால் உங்களுக்கு கண்டிப்பாக மருந்தை தருவோம் ,"என்று சளைக்காமல் நாங்களும் பதில் சொல்லுவோம் .

எல்லாருக்கும் நாங்கள் சொல்லும் பதில் அனேகமாக ,"ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன .கண்டிப்பாக அவை வெற்றி பெற்று மருந்து வரும் .அதற்கு இன்னமும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் வரை ஆகலாம் .அதுவரை உங்கள் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடுங்கள் ,தொடர்ந்து செக் அப்புக்கு வந்து கொண்டிருங்கள் "என்பதே .

போன மாதத்தில் வந்த ஒரு பெண் எல்லாம் கேட்டுவிட்டு சொன்னார் ,"கம்ப்யூட்டர்ல வைரஸ் வந்தா ஏதோ ஆன்ட்டி வைரஸ் சிடி போட்டு அத எடுத்திடுறாங்களே ,அதமாதிரி இதையும் அந்த மாதிரி ஏதாவது போட்டு எடுக்கக் கூடாதா ?"

Thursday 10 March 2011

தேர்தல் மேடை -1

இரண்டு நாட்களாக ஜெயா பிளஸில்? என்று நினைக்கிறேன் ,திரு நாஞ்சில் சம்பத் அவர்களின் மேடைப் பேச்சுகளை ஒளிபரப்பி வருகிறார்கள் .நான் பார்த்தது இரண்டு நாட்கள் தான் .ஏற்ற இறக்கத்துடன் எளிமையான வாதங்களுடன் தங்கு தடையில்லாமல் அழகான தமிழில் அவர் பேசுவது கேட்கவே அருமையாக இருக்கிறது .இவரை போன்ற மேடைப் பேச்சாளர்கள் இப்போது விரல்விட்டு எண்ணக் கூடியவர்களே இருப்பார்கள் .

இவரின் பேச்சில் நான் அதிகம் ரசித்த பகுதிகள்,

தன் பெயரை சொல்லாமல் வைகோவின் தம்பி சொல்கிறேன் என்று இவர் தன்னை விளித்துக் கொள்ளும் பாங்கு வித்தியாசமாக இருக்கிறது .

2ஜி ஊழல் பற்றி பேசும் போது ,"ஒரு லட்சம் எழுபத்தி ஆறாயிரம் கோடினா எனக்கு எழுதவே தெரியல .ஒரு சார்டர்ட் அக்கவுண்டன்ட் கிட்ட கேட்டேன் ,எண்பத்து அஞ்சாயிரம் கொடி பேருக்கு இந்த பணத்தை பிரிச்சு கொடுத்தா தலைக்கு எவ்வளவு வரும் ?ஆளுக்கு பத்தாயிரம் வரும்.
ஒரு பையர் இன்ஸ்பெக்டர் கிட்ட கேட்டேன் ,இத கொளுத்தணும் ன்னா எத்தனை நாளாகும்ன்னு ,இருபத்து ரெண்டு நாளாகும் .ஒரு பஸ் கம்பனி முதலாளி கிட்ட கேட்டேன் ,இந்த பணத்தை எல்லாம் எடுத்துகிட்டு வரணும் ன்னா எத்தனை வண்டி தேவைப்படும்ன்னு ,இருநூத்தி அம்பது வண்டி தேவைப்படும் .அத்தனையையும் ஒருத்தனே எடுத்துகிட்டு வந்துட்டான் .அதனால தான் அவன் பேரு ராஜாவாம் ."

தினகரன் பத்திரிகை அலுவலகத்தில் நடந்த கொலைகளையும் அது தொடர்பான பெரியவீட்டு சம்பவங்களையும் குறிப்பிட்டு ....இதயம் இனிக்கிறது கண்கள் பனிக்கிறது வரை ...."இவர் இதயம் இனிக்கனும் கண்கள் பனிக்கனும்ன்னா மூணு பேராவது சாகனும் ."

அவரின் விதவை தங்கை ;தங்கையின் பொருளாதார சூழல் என்று பேசிவிட்டு ,"நான் சொன்னேன் ,ஏனம்மா ,ரேஷன் அரிசி வாங்கி சமைக்க வேண்டியது தானே என்று ,அவள் சொன்னாள் அது சமைக்க முடியாது அண்ணா ,அதை சமைக்க வேண்டுமானால் அரை சிலிண்டர் கேஸ் காலியாகிவிடும் ."

எல்லாவற்றிற்கும் மேலாக ,"கலைஞர் சொல்கிறார், நான் அவரைப் பார்த்து பொறாமைப் படுகிறேனாம் .எதற்காக நான் பொறாமைப்படவேண்டும் ?அவருக்கு என்ன ஆறடி கூந்தலா இருக்கிறது நான் பொறாமைப்பட ?"

ஆனால் ராஜாவையும் கனிமொழியையும் இணைத்து பேசும் சில சிலேடை பேச்சுகளை இவர் தவிர்க்க வேண்டும் .நேரம் கிடைத்தால் கேட்டு மகிழுங்கள் .