Thursday 17 February 2011

செய்திகள் வாசிப்பது ...

பிரதமரின் பரபரப்பு பேட்டி

உப்பு சப்பில்லாமல் போரடிக்கும் கல்லூரி லெக்சர் போல இருந்தது .நான் "நொண்டி வாத்து" பிரதமர் இல்லை என்ற தனது நம்பிக்கையையும் தான் பதவி காலம் முழுக்க பதவியில் எப்பாடுபட்டேனும் ஒட்டிக் கொண்டிருக்க முடிவு செய்திருப்பதையும் தவிர வேறு எதையும் தெளிவாக சொல்லாமல் முடித்துக் கொண்டார் பிரதமர் .
இதை உடனே எல்லா தொலைக்காட்சிகளும் அக்குவேறு
ஆணிவேறாக பிரித்து போட்டு விவாதித்தார்கள் .

ஜெயா ..ராஜா மீது பிரதமர் குற்றச்சாட்டு என்றது
கலைஞர் /சன் ..நான் சரியாக பார்க்கவில்லை ..அவர்கள் இந்த பேட்டியை அதிகம் கண்டுகொண்டதாக தெரியவில்லை.
என் டி டி வி ...இதில் பிரணாய் ராயும் விக்கிரமும் விவாதித்தார்கள் ..வழக்கமாக இத்தகைய விவாதங்களில் பங்கேற்கும் அரசியல் தலைவர்களை டைம்ஸ் நவ்வும் சி என் என் னும் ஆக்கிரமித்தது காரணமாக இருக்கலாம் .பிரதமர் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு நன்றாக பதில் அளித்ததாகவும் (நம் நாட்டின் விலைவாசியும் பொருளாதாரமும் இருக்கும் நிலையில் நம் பிரதமர் ஒரு பொருளாதார மேதை என்பதே நமக்கு மறந்து போகிறது ),மற்ற கேள்விகளை சாமர்த்தியமாக கையாண்டதாகவும் பிரணாய் கூறினார் .அவர் போட்ட மார்க் பத்திற்கு மூன்றாக இருக்கலாம் .
டைம்ஸ் நவ்வில் அர்னப் ,காரசாரமாக விவாதத்தை நடத்திக் கொண்டிருந்தார் .நடிகர் திலகம் கோலோச்சிய காலத்து முகபாவங்களுடன் அவர் விவாதங்கள் நடத்தும் பாங்கே தனி ஸ்டைல் தான் .ஸ்பெக்டிரம் அலைக்கற்றையை குறைவான விலைக்கு விற்றதை மானியங்களுடன் ஒப்பிட்டு பிரதமர் பேசியது இங்கு கடுமையாக விவாதிக்கப்பட்டது .இதனுடன் வழக்கமான மசாலாக்கள் சேர்க்கப்பட்டன .
சி என் என் னிற்கு போனால் அங்கும் மனிஷ் திவாரியும் ,வினோத் மேத்தாவும் இருந்தனர் .ஆளை விடுங்க சாமி என்று டி வியை அணைத்துப் போட்டேன் .

கண்டனக் கவிதை :
சேனல் சேனலாக தாவிக் கொண்டிருக்கையில் ஜெயா டிவியில் ஏதோ வனவிலங்கு வார விழா கவிதை போன்ற ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார்கள் .பன்னி ,யானை என்று மாறி மாறி வந்து கொண்டிருந்தது .அந்த கவிதையை முழுவதுமாக கேட்டிருந்தால் இவை இரண்டையும் பற்றி ஒரு கட்டுரையே எழுதியிருக்கலாம். கொஞ்ச நேரம் போன பின் தான் தெரிந்தது "தத்தாரி" என்று முரசொலியில் ஏதாவது வந்திருக்கும் போல ,அதற்கு பதிலடியாக இந்த கவிதை .கடைசியில் "........வாழும் பன்றிகளை விட ,யானையாய் இருப்பதே மேல் "என்று முடிந்தது கவிதை ?அதைவிட பெரிய ஆச்சரியம் இதை இயற்றிய கவிஞர் நமது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமாம் .ஓஹோ ! !(ஜாக்கிரதையா இருங்க ஓ பி, உங்களுக்கும் கலைமாமணி விருது கொடுத்திரப் போறாங்க )தேர்தல் நெருங்க இன்னமும் யார்யாரின் வெளியிடப்படாத திறமைகள் எல்லாம் வெளிவருமோ !

கனிமொழி கைது :
வீடு திரும்பிக் கொண்டிருக்கும் போது ,
ஸ்பெக்டிரம்-ராஜாவே காரணம் பிரதமர் பேட்டி ...
கனிமொழி கைது ...
திமுகவினர் திடீர் ஆர்ப்பாட்டம்
என்று ஒரு மாலை நாள் இதழின் விளம்பரம் ,கொஞ்சம் விஷமத்தனமாகவே சொல்லிக் கொண்டிருந்தது .ஆர்வமாக டிவியை பார்த்தால் ,மீனவர்களுக்காக ஆர்ப்பாட்டமாம் .டில்லியிலிருந்து சுஷ்மா ஸ்வராஜே வந்து போயாகி விட்டது .இவர் இப்போது தான் விழித்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்ய கிளம்பியிருக்கிறார் (இவரும் கொடநாடு போல எங்காவது போய் தூங்கிவிடுவாரோ ?)இந்த ஆர்ப்பாட்டமே ஒரு தமாஷ் என்றால் அதற்கு கைது அதைவிட பெரிய தமாஷ் . மகள் ஆர்ப்பாட்டம் செய்கிறார் ,அப்பா +அண்ணன் கைது செய்கிறார்கள் .புல்லரிக்கிறது ..ஆயிரம் தான் சொன்னாலும் மனுநீதி சோழர் பரம்பரை இல்லையா ?

இதை தவிரவும் அனில் அம்பானி நேற்று சி பி ஐ யின் முன் ஆஜராகி மூன்று மணி நேரம் விசாரிக்கப்பட்டது ,ரத்தன் டாட்டா தாத்தாவுக்கு அதாவது உதயநிதியின் தாத்தாவுக்கு எழுதியதாக சொல்லப்படும் கடிதம் ,தேவாஸ் -தங்கள் ஒப்பந்தம் சட்டப்படி செல்லுபடியாகும் ,அதை மதிக்கும் கடமை அரசிற்கு இருக்கிறது என்று சொன்னது ,இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தை வென்றது ,மற்றும் சிலபல விபத்துகள் +கொலைகள் பற்றிய செய்திகளும் நேற்றும் பேசப்பட்டன .

Friday 11 February 2011

ஒன்று எங்கள் ஜாதியே

இந்த பெரியவர் பல நாட்களாக சிகிச்சைக்கு வருபவர் தான் .சொந்த ஊர் ஆந்திரா .என்ன சொன்னாலும் சரியென கேட்டுக் கொள்வார் ."நீ என்ன சொல்றியோ ,அத நான் கேட்டுக்குறேன் ,நீ எப்ப ஆஸ்பத்திரிக்கு வரணும்ன்னு சொல்றியோ அப்ப வரேன்,வீட்டில எனக்கொண்ணும் வேல இல்ல .பொண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணி கொடுத்தாச்சி .அதனால நா எப்பவும் ப்ரீ தான் ."ஒவ்வொரு தடவையும் இதை சொல்லாமல் போக மாட்டார்


போன வாரம் வந்தவர், போகும் போது திடீரென ,"நீ பிராமினா ?"என்று கேட்டார் .நான் ஒண்ணும் சொல்லாமல் சிரித்த போது ,"பிராமினா ?ரெட்டியா ?நாயுடுவா ?"என்று மீண்டும் கேட்டார் .


திரும்ப திரும்ப கேட்கவும் எரிச்சலும் கோபமும் வந்துவிட்டது எனக்கு ."நான் என்னவாக இருந்தால் என்ன ?அதை நான் சொன்னாலும் உங்களுக்கு எப்படி புரியும் ?"என்று கேட்டவுடன் ,"அதில்லம்மா ,எங்க ஊரில எனக்கு நிறைய கோழிக்கறி கிடைக்கும்.நல்லா சுத்தம் பண்ணி ஐஸ் போட்டு கொண்டு வந்தா ,அப்படியே இருக்கும் .டேஸ்ட்டும் அவ்வளவு நல்லா இருக்கும் .என் பொண்டாட்டி டாக்டருக்கு கொண்டு போங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கா .நா தான் சாப்பிடுவாங்களோ என்னவோ ,நா கேட்டுக்கிட்டு வரேன் ன்னு சொல்லிட்டு வந்தேன் .அதான் அப்படி கேட்டேன் ,"என்று அவர் சொல்லவும் அடக்க மாட்டாமல் சிரிப்பு வந்துவிட்டது எனக்கு ."உங்களுக்கு தெரியவேண்டியது நான் வெஜிடேரியனா இல்லை நான்-வெஜிடேரியனா என்பது தான் ,நான் ரெட்டியா ,பிராமினா என்பது இல்லை .நான் கண்டிப்பாக நான் -வெஜிடேரியன் தான் ,"என்று சொல்லி அனுப்பி வைத்தேன் .



Thursday 10 February 2011

தேர்தல் ஸ்பெஷல் -1



மகராணி போல நானும்
ஊர் மெச்ச வாழ்ந்திருந்தேன்
மந்திரிங்க துதிபாட
ஆரவாரமாய் தானிருந்தேன்

எந்த கொள்ளி கண்ணு பட்டோ
கத மாறிப் போச்சுதிங்கே
தலையில் உதிர்ந்த முடிகூட
ஓடித்தான் போச்சுதங்கே

அறிக்கை எழுதி படிச்சாலும்
பகல் பொழுதே போகலியே
சி எம் மா இல்லாம
கண் உறக்கம் போதலையே


போயசு தோட்டத்தில
பல நாளு தூக்கமில்ல
பையனூறு போய் படுத்தா
கண் உறக்கம் கொள்ளவில்ல

கொடநாடு போனதில
உச்சி மண்ட குளுந்து போச்சு
கண்ண மூடி உறங்கையில
வெளி ஒலகம் மறந்து போச்சு

அட கண் முழிச்சு பாக்கையில
வருஷம் நாலு ஓடி போச்சு
பொசுக்குன்னுதான் அல போல
ஊர் நெலம மாறிப் போச்சு

லட்ச்சமாம் கோடியாம்
லட்ச்சத்தில கோடியாம்
தெருக்கோடி காணா கேடிஎல்லாம்
கோடியில பொரளுறாங்க

சுடுக்காட்டில் சில கோடி
தங்கமா சில கோடி
ஆயிரம் கூட தேறலையே
மனசும் தான் ஆறலையே

எங்க போயி வெசனப்பட
எவரிடத்தில் போய் நிக்க
பாவி மக வாயிகிட்ட
ஒரு லட்சம்கோடி வாய்க்கலையே

தேர்தல் இப்ப வந்திருச்சி
வாய்க்கு வேல வந்திருச்சி
கோடி மேல கோடியெல்லாம்
வாய்க்கும் வேள வந்திருச்சி

வானம் முட்ட மேட போட்டு
கலர் கலரா லைட்டு போட்டு
காது கிழிய செட்டு போட்டு
டிவியில லைவ்வு போட்டு

கால் கடுக்க நிக்கனுமே
கையைத்தான் ஆட்டனுமே
தலைவர் பேர் சொல்லணுமே
வாய் வலிக்க பேசணுமே

கூட்டணிய சேக்கனுமே
பல பேர பாக்கணுமே
ஆளுக்கு இத்தனைன்னு
பேரத்த முடிக்கன்னுமே

என்னத்த சொல்லிகிட
பல சோலி பாக்கணுமே
கண்டவங்க மொகம் பாத்து
பல்லிளிச்சு பேசணுமே

ஊர் ஊரா போகணுமே
காருல தான் திரியனுமே
குப்பை கொட்டி விட்டாப்புல
நோட்டத்தான் கொட்டனுமே



எத்தன தான் வேல பாக்க
எப்படி நான் பாடு பட
சேதி வெளங்க வார வர
சங்கடம்தான் எங்க சொல்ல

ஜெயிச்சு தான் வந்துபுட்டா
ஜோராத்தான் இருந்திடலாம்
அட தோத்துத்தான் போச்சுதுன்னா
கொடநாட்டில் ஒறங்கிடலாம்




Tuesday 8 February 2011

மூன்று மீனவர்கள்



மூன்று மீனவர்கள் கடலுக்கு போனார்கள், மேற்கு நோக்கி
மேற்கு நோக்கி போனார்கள் ,சூரியன் மறையும் நேரம்
தன்னை மிக நேசித்தவளை தத்தம் நினைவில் நிறுத்தி
ஊர் தாண்டும் வரை சிறுவர்களும் பார்த்து நின்றார்கள்
ஏனெனில், ஆண்கள் உழைக்க வேண்டும்,
பெண்கள் அழ வேண்டும்
ஈட்டிட சொற்பமே ஆனால் காத்திட அநேகர்
அழிவாய் முனங்கிக் கொண்டிருந்தாலும்


மூன்று மனைவிகள் பார்த்திருந்தார்கள் ,கலங்கரை விளக்கத்தில்
,சூரியன் குறைய தங்கள் விளக்குகள் தூண்டி
மழைபொழிவை பார்த்தார்கள், வரும் புயலைப் பார்த்தார்கள்
இரவுப்புயல் ,கரடுமுரடாய், புழுதியாய் உருண்டு வந்தது.
ஆனால் ஆண்கள் உழைக்க வேண்டும், பெண்கள் அழ வேண்டும்
புயல்கள் அறிவிப்பற்றதாக இருந்தாலும் நீர் ஆழமாகவும்
அழிவாயும் முனங்கிக் கொண்டிருந்தாலும்

மூன்று பிணங்கள் ஒளிரும் மணல்மேல் கிடந்தன
காலைச் சுடரில் அலைகள் வடியும் போது
கைபிசைந்து பெண்கள் கதறி அழுகிறார்கள்
இனி வீடு வாராது போனவர்களுக்காக
ஏனெனில் ஆண்கள் உழைக்க வேண்டும்,
பெண்கள் அழ வேண்டும்
விரைவில் முடிந்தால் விரைந்து உறங்கலாம்
பிரியாவிடை அழிவாய்க்கும்,
அதன் முனகலுக்கும்


The Three Fishers


THREE fishers went sailing away to the West,
Away to the West as the sun went down;
Each thought on the woman who loved him the best;
And the children stood watching them out of the town;
For men must work, and women must weep,
And there's little to earn, and many to keep,
Though the harbor bar be moaning.




Three wives sat up in the lighthouse tower,
And they trimmed the lamps as the sun went down;
They looked at the squall, and they looked at the shower,
And the night-rack came rolling up ragged and brown.
But men must work, and women must weep,
Though storms be sudden, and waters deep,
And the harbor bar be moaning.




Three corpses lay out on the shining sands
In the morning gleam as the tide went down,
And the women are weeping and wringing their hands
For those who will never come home to the town;
For men must work, and women must weep,
And the sooner it's over, the sooner to sleep;
And good-by to the bar and its moaning.




Charles Kingsley


harbour bar என்பதற்கு அழிவாய்
என்ற பொருளை இந்த தளம் சொன்னது நன்றி :eeehttp://dsal.uchicago.edu/cgi-bin/philologic/contextualize.pl?p.0.tamillex.1669202