Tuesday 28 December 2010

அவள் -அவன்- அது

ஒரு இளம் பெண் .பல வருடங்களாக சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் .ஆதரவுக்கு வயதான பெற்றோர் மட்டும் .கணவர் வேறு திருமணம் செய்து இரண்டு குழந்தைகளுடன் சந்தோஷமாக இருக்கிறார் . வைத்திய செலவுக்குக் கூட பல நேரங்களில் பணம் கிடையாது .முடிந்தவரையில் அங்கும் இங்குமாக இலவசமாக கொடுத்து வருகிறோம் ."புருஷனும் இல்லை ,பிள்ளைகளும் இல்லை "என்பதே எப்போதும் இவரின் ஒரே குறை .

போன மாதம் திடீரென்று தான் கணவரோடு வந்தார் .கேட்ட போது ,கணவருக்கு ஏதோ தொந்தரவு இருப்பதாகவும் ,அந்தப் பெண் இங்கே தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் சிபாரிசுக்கு அழைத்து வந்ததாகவும் தெரிந்தது ."இத்தனை நாள் ஒன்றுமே பார்க்கவில்லை ,இப்போது மட்டும் சிபாரிசுக்கு பொண்டாட்டி தேவையாகிறது ",என்று சொன்ன போது ,"எனக்கு அவளைப் பிடிக்கும் அவளுக்கும் என்னைப் பிடிக்கும் ",
என்றார் கணவர் .

இதெல்லாம் சரியான பிறகு மீண்டும் ஒருநாள் இருவரும் வந்தனர் .இப்போது "எனக்கு குழந்தை வேண்டும் "என்றார் அந்த பெண் .எதற்கு திடீரென்று இந்த ஆசை என்ற போது "என் அம்மா அப்பாவையே பார்த்துக் கொண்டிருக்கிறேன் .குழந்தை இருந்தால் ஆதரவாக இருக்கும் .என்னை எந்த விசேஷத்திற்கும் சேர்ப்பதில்லை .அதுவும் சரியாகும் ." "உனக்கென்று ஆதரவுக்கு எவருமே இல்லை .மருந்து வாங்கவும் பணம் இல்லை ,இந்த குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் ?","யாராவது பார்ப்பார்கள் .....?"

கணவரை அழைத்து பேசிய போது ,"ஆமாம் குழந்தை வேண்டும் என்று
சொல்கிறாள் ."குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள் ?நீங்கள் பார்த்துக் கொள்வீர்களா ?""எனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கின்றன .என்னால் பார்க்க முடியாது .அவள் அம்மா அப்பாவை அழைத்துக் கேட்டுக் கொள்ளுங்கள் .பார்ப்பார்களா என்று ....."

Monday 27 December 2010

பாட்டியின் சீலைகள்

நான் சிறு பிள்ளையாக இருந்த போது பாட்டி புடவை என்று ஒன்றிருக்கும் எங்கள் வீட்டில் .இரவில் அதை போர்த்திக் கொண்டு தான் நான் தூங்குவேன் .இது அம்மாவின் புடவை தான் என்றாலும் ,பாட்டி இதை ஒருமுறை கட்டியிருந்ததால் அது பாட்டி புடவையாயிற்று .

ஊர் பக்க வழக்கப்படி பின் கொசுவம் வைத்த சீலையை தான் கட்டியிருப்பார் பாட்டி .சாதாரண புடவைகளை விட நீளமும் அதிகமாக இருக்கும் இது .அதிலும் பளிச் நிறங்கள் தான் பெரும்பாலும் உடுத்துவார் ,தன் நிறத்தை எடுப்பாக காட்டும் என்பதால் .பாட்டி கடைக்கு போய் புடவை வாங்கிப் பார்த்ததாக நினைவில்லை .பிள்ளைகள் எடுத்து தரும் புடவைகளை உடுத்திக் கொள்வார் ,அதை பற்றிய ஒன்றிரண்டு காமென்ட்டுகளோடு ..அதில் அதிகம் அப்பா எடுத்துக் கொடுத்ததாக இருக்கும் .இந்த புடவை, வாங்கி வந்தவுடன் எவருக்கென்று என் இரண்டு அத்தைகளுள் பாகம் பிரிக்கப்படும் .சில நேரம் ,அத்தையுடைய பழைய புடவையையும் பாட்டி உடுத்தியிருப்பார் .
மஞ்சள் நிறப் புடவைகளை பாட்டி உடுத்தி பார்த்ததில்லை .

பாட்டி எப்போதுமே ரொம்ப மெலிந்து தான் இருப்பார் .ஓயாத உடல் உழைப்பு காரணமாக மெலிந்திருக்கலாமோ என்று யோசித்த போது ,பாட்டியை வசதியான காலங்களில் சிறு பிள்ளையாக பார்த்த அத்தையும் ,"அம்மா ,எப்பவும் மெலிஞ்ச ஒடம்பு தான் ",என்று கூறி விட்டார் .வயது அதிகமான காலத்தில் இந்த உடல்வாகு சிரமப்படுத்தியது .இன்னமும் அவர் மெலிந்து போக புடவை இடுப்பில் நிற்கவில்லை .புடவையின் எடையும் சுமக்க முடியாததாயிற்று .சில சமயம் பாட்டி நடக்க ,புடவை பின்னாலேயே உருவிக் கொண்டு வால் போல வரும் .இறுதி சில மாதங்களில் ,இதை கட்டவும் முடியவில்லை .
பெரியப்பா ,"பாவாடை சட்டை மாதிரி தைச்சு தரேன் போட்டுக்கோ " என்று சொன்ன போது பிடிவாதமாக மறுத்துவிட்டார் .

ஒரு தடவை எங்கள் வீட்டில் தங்கியிருந்த போது ,புடவை உருவிக் கொண்டு வந்தது .இதை உடுத்தியிருந்ததன் சிரமம் காரணமாக புடவையிலேயே கொஞ்சம் ஆய் வேறு பட்டுவிட்டது .இனி இது சரிவராது என்று முடிவு செய்த போது ,ஏற்றுக் கொள்ள மனம் இல்லாவிட்டாலும் உண்மை புரிந்தே இருந்தது பாட்டிக்கு .நான் ,அம்மா ,அப்பா எல்லோரும் வற்புறுத்தியதன் பேரில் நைட்டி அணிய ஒப்புக் கொண்டார் .அதுவும் அம்மாவின் நைட்டியைக் கொடுத்த போது ஒரே பிடியாக முடியவே முடியாது என்று சொல்லிவிட்டார் .பின்னர் சமாதானம் செய்து என்னுடைய நைட்டியை போட சொன்ன போது ,ஒத்துக் கொண்டார் .நீல நிறத்தில் கருப்பு புள்ளிகள் போட்ட என் நைட்டி தான் பாட்டி முதன்முதலில் அணிந்தது .இதிலிருந்து இறக்கும் வரை நைட்டி தான் .

இறந்த போது வெறும் எலும்புகள் மட்டுமே மிச்சம் இருந்தன பாட்டியின் உடலில் .இரண்டு புடவைகளை ஒன்றன் மேல் ஒன்றாக சுற்றி வைக்கவேண்டியிருந்தது .அதில் ஒன்று என் அண்ணன் திருமணத்திற்கு பாட்டிக்கு வாங்கி என் அக்காவின் பங்குக்கு போன புடவை .ஆனாலும் , இறுதி ஊர்வலத்திற்கு ,பாட்டி எப்போதும் விரும்பிய பளிச்சென்ற வெந்தய கலரில் சிவப்பு பார்டர் போட்ட பட்டுப் புடவையை வாங்கி வந்தார்கள் அவருடைய தம்பி மக்கள் ,தாய் வீட்டின் கடைசி சீராக ....