Thursday 28 October 2010

என்னவென்று சொல்ல

ஒரே குடும்பத்தில் மூன்று பேருக்கு எச்.ஐ.வி .அப்பா ,அம்மா ,மகன் என்று ..போன மாதத்தில் இவர்கள் வந்த போது ஒரு துக்க செய்தியும் காத்திருந்தது .இவர்களின் ஒரே மகள் ,நோய் விட்டுவைத்தது இந்த சிறுமியை மட்டும் தான் ,ஒரு சாலை விபத்தில் இறந்து போனாள் .

"அவ ஒருத்திக்கு தான் மேடம் ,நோய் இல்லாம இருந்துது .இவளாவது நல்லா இருக்காளேன்னு தான் எப்பவும் மனச தேத்திக்குவேன் .இப்ப அவளும் போயிட்டா .நாம இல்லாம போய்ட்டா கூட அவளுக்கு வேணுமேன்னு இருபத்து ஐஞ்சு பவுன் சேத்து வச்சேன் ,மேடம் .இந்த கஷ்டம் போதாதுன்னு எங்க மாமியார் வேற ,இனிமேல் அந்த நக ஒனக்கு எதுக்குன்னு ,என் நாத்தனாருக்கு கொடுக்க சொல்லுது ,"என்று ஏதேதோ சொல்லி சொல்லி அழுது கொண்டே இருந்தார் .தேறுதல் சொல்ல கூட வார்த்தைகளின்றி அமைதியாக இருந்தோம் .

Tuesday 26 October 2010

ஒரு இரவு



ஒரு இரவு
நாள்களுக்கு இடையே கிடந்தது
முந்தைய நாளும்
பிந்தின நாளும்
இரண்டும் ஒன்றே
இப்போது
எது இரவோ
அது இங்கிருந்தது

மெதுவாக
இரவு -
விழித்திருந்து கழிக்கப்பட வேண்டியதாக
கரையில் மணல்கள் போல்
கவனத்தில் எளிதில் புலப்படாது
இனியும் இரவாக -
இல்லாத வரைக்கும்


A Night — there lay the Days between —
— Emily Dickinson


A Night — there lay the Days between —
The Day that was Before —
And Day that was Behind — were one —
And now — ’twas Night — was here —

Slow — Night — that must be watched away —
As Grains upon a shore —
Too imperceptible to note —
Till it be night — no more —

Thursday 21 October 2010

என்ன விலை அழகே

ஆறே வாரத்தில் மின்னிடும் சிகப்பழகு !,
அப்ப எங்கூரு எருமை மாட்டுக்கு பூசுங்களேன் ,ஆறு வாரத்துல கூட வேண்டாம் ,ஆறு மாசத்துலேயாவது செகப்பாகுதான்னு பாப்போமே !!!!!!"
இது ஒரு பட்டிமன்றத்துல கேட்டது .

ஒரு நாள் ,வேண்டாம், ஒரு மணி நேரம் டி வி பாத்தா அதுல எத்தனை அழகு பொருட்கள் விளம்பரம் ?நீண்ட கூந்தலுக்கு ,பளபளப்பான கூந்தலுக்கு ஆரோக்கியமான கூந்தலுக்கு ,ஆரோக்கியம் +பொலிவான கூந்தலுக்கு ன்னு தொடங்கி சிகப்பழகுக்கு ன்னு ஆசை காட்டி ,சரும பராமரிப்புக்கு ன்னு எத்தனை எத்தனையோ .பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கு கூடத் தான் (வழுக்கை தலையில இருக்கிற நாலு முடிய நாலு மணிநேரம் செட் பண்றவுங்க அவுங்கன்னு விளம்பரம் பண்றவங்களுக்கு தெரியாதா என்ன ?)

அழகா இருக்கணும்ங்கறது எல்லாருக்கும் ஆசைதான் .இல்லைன்னு அடிச்சு சொல்றவுங்க கண்டிப்பா பொய் சொல்றாங்க .."என்ன விலை அழகே",அழகுக்கு மறுபெயர் பெண்ணாலிருந்து.."நெறைய கவிஞர்கள் பாடினது அழகைத்தான் (அவள் அப்படி ஒன்றும் அழகில்லை ன்னு எழுதினவரை தவிர்த்து ).பெண்ணியம் ,அடுக்களை மட்டுமே பெண்களுக்கா ?பெண்கள் அலங்காரப் பதுமைகளா ?அப்படினெல்லாம் எழுதிட்டு அழகு குறிப்புக்கள் +சமையல் குறிப்புகள் இல்லாத பெண்கள் பத்திரிக்கை தான் இருக்கா ?

படிக்கட்டுல ஓடி வந்தா பின்னாலேயே துள்ளி வர கூந்தல் ,மூச்சு பட்டாலே சிவக்கிற நிறம் ,பக்கத்துல நின்னா எதிர இருக்கவுங்க முகம் காட்டுற கண்ணாடி சருமம், இது எல்லாமே எட்ட துடிக்கிற ஆசைகள் தான் .சாத்தியமாகுதோ இல்லையோ முயற்சியாவது பண்ணாம யாராவது இருந்திருக்காங்களா என்ன?
நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப ,பயத்தம் பருப்பு மாவு தேச்சு குளி,இல்ல கடலை மாவு தேச்சு குளி இதுதான் உச்சகட்ட அழகு குறிப்பா இருக்கும் .ஸ்கூல என் கிளாஸ் மேட் ஒருத்தி ஐய்ப்ரோ பண்ணிட்டு வந்துட்டா ,எச்.எம் வரைக்கும் கூப்பிட்டு திட்டி பெரிய பிரச்சனை ஆச்சு அப்ப .அப்புறம் காலேஜ் வந்தப்ப
பியூட்டி பார்லருக்கு எல்லாரும் போகலாம் .,அது ஒண்ணும் தப்பில்லைங்கற அளவுக்கு பியூட்டி பார்லர் சகஜமாச்சுன்னு ன்னு சொல்றத விட அத்தியாவசியமானதாச்சு .

முதல் முதல்ல ஐய்ப்ரோ பண்றதுக்கு தான் பியூட்டி பார்லர் போயிருந்தேன் .ரொம்பவே கூச்சமா இருந்துச்சு .த்ரெடிங் பண்ணின உடனே கண்ணிலிருந்து தண்ணியா கொட்டிச்சு (கண்ணிலே நீர் எதற்கு ?த்ரெடிங்கப்போ அழுவதற்கு?),எரிச்சல் வேற .வீட்டுக்கு போனவுடனே ஐஸ் வைங்க ன்னு சொல்லி அனுப்பினாங்க .வீட்டுக்கு வந்து பாத்தா புருவம் வடிவமா நளினமா இருந்துச்சி .முகமே பளிச்சுன்னு களை எடுத்த மாதிரி இருந்துச்சி . அப்புறம் பேஷியல் ,ஸ்கால்ப் மசாஜ் ன்னு பியூட்டி பார்லர் நல்லா பழக்கமான இடமாயிருச்சி .

முன்னெல்லாம் பியூட்டி பார்லர் போனா ,நாம சொன்னத செஞ்சுட்டு விட்டுருவாங்க .பேஷியல் பண்ணா முகம் இன்னும் பளிச்சுன்னு இருக்குமேனெல்லாம் லேசா சொல்லிப் பாத்துட்டு தான் .இப்பெல்லாம் ,என்ன செய்யனும்ன்னு முடிவு பண்ணாம உள்ள போறவுங்க கத கந்தல் தான் .முதல்ல ஹோட்டல் மாதிரி ஒரு மெனு கார்ட் கொடுக்குறாங்க .பேஷியல்ல பத்து வகை ,பெடிக்யூர்ல நாலுன்னு படிச்சாலே கண்ணக் கட்டிரும் .அதிலேயும் ரேட் குறைவா ஒண்ண சொல்லிட்டோம்ன்னா உடனே அது உங்களுக்கு சூட் ஆகாது மேடம் ன்னு ஏதாவது தலைய சுத்த வைக்கிற விலையில ஒண்ண சொல்லுவாங்க .

இது போதாதுன்னு ஸ்கின் லைட்டனிங் ,வார்ட் ரிமூவல்ன்னு காஸ்மெட்டாலஜிஸ்ட் செய்ய வேண்டியதெல்லாம் இவங்களே செய்யறாங்க .விதவிதமான கிரீம்கள் விற்பனை வேற . இப்ப புதுசா யூனிசெக்ஸ் சலூன் வேற வந்திருக்கு .நேத்து டி நகர் பக்கம் ஹேர் ஸ்டூடியோ ஒண்ணு இருந்துச்சி .இப்படியே போனா ,ஹேர் ,ஹான்ட் ,புட்ன்னு தனித்தனியா ஸ்டூடியோ ஆரம்பிச்சுடுவாங்க போல .டி வியில வேற நிறைய பியூட்டிஷியன்ஸ் வந்து லைவா சந்தேகத்திற்கு பதில் சொல்றாங்க .சில பல இல்லத்தரசிகள் வேற பியூட்டிஷியன் கோர்ஸ் படிச்சிகிட்டு வீட்டிலேயே சின்னதா பார்லர் ?? நடத்துறாங்க .

பிரைட்டல்ல நல்ல வருமானம்ன்னு நினைக்கிறேன் .மூணு நாளைக்கு கல்யாணப் பொண்ண குத்தகைக்கு எடுத்துக்குறாங்க .மெகந்தி லிருந்து நெத்தி சுட்டி வரைக்கும் வைச்சு விடுறாங்க .சும்மா சொல்லக் கூடாது ,நல்லாவே அலங்காரம் செஞ்சு விடுறாங்க ,உடைக்கு ஏத்த மாதிரி ,பொண்ணுக்கு ஏத்த மாதிரின்னு .
மொத்தத்துல பாத்தா பியூட்டி பார்லர் நடத்துறவங்களுக்கு ஓரளவு நல்ல வருமானம் தான் போலிருக்கு .

இப்ப, என்ன விலை அழகேன்னு கேட்டா ?"உங்க வசதிக்கு ஏற்ற விலையில கிடைக்குது ன்னு சொல்லத் தோணுது "(ஹப்பா ,டைட்டில சொல்லியாச்சு )

Tuesday 19 October 2010

மதுரையில் அம்மா

ஒரு வழியாக அம்மாவின் மதுரை திக் விஜயம் முடிந்தது .கொலை மிரட்டல் கடிதம் ,போன் என எப்படியோ இந்த கூட்டத்திற்கு ஒரு நல்ல விளம்பரம் முன்னமே கிடைத்திருந்தது .நல்ல கூட்டம் தான் .ஆனால் இவையெல்லாம் வரப்போகும் ஓட்டுகளா தெரியவில்லை .அமைச்சர் நெப்போலியன் கார் வேறு தாக்கப்பட்டது இருவருக்கும் செய்தி கிடைக்க ஏதுவாக போனது

பளிச்சென்று பதிந்தவை

அம்மாவின் நரை இல்லா தலை .
கரை வைத்த சேலை (மாங்காய் பார்டர் )-ரொம்ப சுமார்.
மேட்ச் இல்லாத கருப்பு கலர் வாட்ச்.

எம்.ஜி.ஆர் பேர் சொல்லப்பட்ட போதும் ,அவர் பாடல்கள் சொல்லப்பட்ட போதும் விசில், கைதட்டல் அதிகம் கேட்டது.

அழகிரி பற்றி (ஏற்கெனவே சொன்னதாக இருந்தாலும்) நிறைய்ய்ய்ய்ய்ய்ய்யய்ய பேசியது .
அவர் அஞ்சாநெஞ்சன் அல்ல ,நானே அஞ்சாதவள் -கூல்.

லீலாவதி கொலை முதற்கொண்டு பேசியது -அகழ்வாராய்ச்சி துறையில யாரும் உரை எழுதித் தராங்களா ?

மதுரையை மீட்பேன் +மதுரைக்கு சுதந்திரம் வாங்கித் தருவேன் -மதுரையை மீட்கப்போகும் சுந்தர மீனாட்சி ?

எங்களுக்கும் உள்ளே ஆள் இருக்கிறார்கள் -ஓஹோ!

கின்னஸ் ரெகார்ட் கூட்டம் -?!?!?!?

ஸ்டாலினே மதுரைக்கு விசா வாங்கிட்டு தான் வரணும் -பளிச்:)

நான் ஆணையிட்டால் ,பாட்டை அந்த வரிகளை விட்டுவிட்டு மேற்கோள் காட்டியது .

ஜெயா டி வி புகழ் -அவர்கள் மட்டும் தான் கழக செய்திகளைப் போடுகிறார்கள் (அதை தவிர வேறு எதை போடுகிறார்கள் என்று சொல்லியிருந்தால் நல்லா இருந்திருக்கும் )
ஊடகங்கள் நமக்கு என்றுமே சாதகமாக இல்லை

சிறுபடத் தயாரிப்பாளர்கள் சங்கடத்தில் இருப்பது ..புதுசு.

கோவையில் ஐந்து கிமீ முன்பே வாகனத்தை நிறுத்தினார்கள் ,திருச்சியில் பத்து கிமீ ,இன்று வாகனங்களை உள்ளே விட்டுவிட்டு ட்ராபிக் ஜாமாக்கி விட்டார்கள் (ஹி ஹி)
ஏர்போர்ட்டிலிருந்து இங்கு வர பதினைந்து நிமிடங்கள் தான் ஆகும் (சைரன் வச்ச காரில் ,இசட் கிளாஸ் செக்யூரிட்டியோட வந்தா அவ்வளவு நேரம் தான் ஆகும் ),இன்றைக்கோ இரண்டு மணிநேரம் ஆகியது -சந்தோசம் -கழகக் கண்மணிகளின் வரவேற்பு ,வருத்தம் -ஆளுங் கட்சியின் சதி -இதில் எது ?

கூட்டணி கணக்கு +கதை

ப்ளாஷ் நியூஸ் :

இப்போது வந்த செய்தி -மதுரையில் நாலு மணியிலிருந்து கரென்ட் இல்லை (எத்தனை மாசமாவோ ?)பவர் கட் ( அதனாலென்ன ஜெயா டிவியில் இன்னமும் பத்து நாட்களுக்கு போடலாமே ?)-வரும் தேர்தலில் தி மு கவின் பவரைக் கட் செய்யுங்கள் .பஞ்ச்

Saturday 9 October 2010

எந்திரன்

ஒருவழியாக எந்திரன் பாத்தாச்சு.பாத்துட்டு அத பத்தி எழுதலைன்னா எப்படி ?அதான் இந்த பதிவு .

ஆச்சரியங்கள்
சிட்டி ரஜினி ...கலக்கல்ன்னு மட்டும் சொல்லிட்டா பத்தாது .அதுவும் அந்த மேன்னு ஆடு மாதிரி ...அனுமதி கிடைச்சிருந்தா விசில் அடிச்சிருக்கலாம் .
வசி ரஜினி .நிறைய காட்சிகளில் ஸ்மார்ட் +ட்ரிம் (ஸ்பெஷல் எபெக்ட்ஸ்?)
ரொம்ப நாளைக்கு அப்புறம் தியேட்டருல பரபரப்பா நிறைய கூட்டம் ..நன்றி :ரஜினி +ஐஸ் + திகட்ட வைத்த மார்க்கெட்டிங்
இன்ட்ரோ பாட்டு இல்லாத ரஜினி அறிமுகம் ,(சிடியில் எஸ்.பிபி குரலில் வந்த பாடலை கேட்டப்ப இது இன்ட்ரோவா இருக்க முடியாதே தோணிச்சு .ஆனா சென்டிமென்ட் வாழ்க )
கடைசி சண்டை காட்சிகள் +ஸ்பெஷல் எபெக்ட்ஸ்

ஏமாற்றங்கள்
பாடல்கள்
கிளிமஞ்சாரோ பாட்டுக்கு ஆடுனத பத்தி சன் டிவியில ரஜினி பேசிகிட்டே இருந்தார் .ஆனா படத்துல பாத்தா ...பாத்தா ...பாத்து தெரிஞ்சுக்கோங்க
ஐஸ் காஸ்ட்யூம்ஸ் +மேக்கப் ..இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம் .
வில்லன் டேனி ..பாழடைந்த பில்டிங்கில் விடியோ கேம்ஸை போட்டுக் காட்டி ,கட்டுகட்டாக பணம் வாங்கி ...கொடுமைடா சாமி .. ?
ரஜினி ஐஸ் வர நிறைய கட்சிகள் ரெண்டு பேரையும் தனித்தனியா வச்சு எடுத்த மாதிரியே இருக்கு ?கெமிஸ்ட்ரி ?
என்னதான் ஐஸ்வர்யா ராயே காதலியா கெடச்சாலும் இப்படியா ஒரு ஆள் கூட கண்காணிப்புக்கு இல்லாம ரெண்டு நாள் தன்னோட ரோபோவ அனுப்பி விடுவார் ஒரு சயன்டிஸ்ட் ?

முக்கிய செய்திகள் :
ஐஸோட நடிக்கணும்ங்கற ரஜினியோட படையப்பா காலத்து ஆசை நிறைவேறியிருக்கு
நிறைய பேர கை கழுவி விட்ட ஒரு ப்ராஜெக்ட்ட ஷங்கர் ஒரு வழியா முடிச்சு காட்டிட்டாரு

மொத்தத்துல சொல்ல ஒண்ணும் பெருசா இல்ல ...ரொம்ப எதிர்பார்ப்பு இல்லாம போனா ஒரு தடவ ஜாலியா பாத்துட்டு வரலாம்

Wednesday 6 October 2010

அம்மா என்றால் அன்பு

சிகிச்சைக்கென தினமும் சமூகத்தின் பல நிலைகளிலிருந்தும் ஏன் நாட்டின் பல பக்கங்களிலிருந்தும் சில நேரங்களில் வெளி நாட்டிலிருந்தும் கூட நோயாளிகள் வருகிறார்கள் .எச்.ஐ.விக்கென மட்டுமே சிகிச்சை தரும் மையங்கள் குறைவாக இருப்பதும் உள்ளூரில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் .இதில் ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் .

ஆண்கள் அனேகமாக ,டாக்டர் என்று கொஞ்சம் அசால்ட்டாகவே பேசுவார்கள் .பெண்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தாலும் பின்னர் வெகு சகஜமாக வீட்டில் ஒருவருடன் பேசுவது போலவே பேசுவார்கள் .அனேகமாக அம்மா என்றே அனைவரும் கூப்பிடுவார்கள் ."என்னம்மா சொல்றீங்க ?அம்மா என்ன சொல்றாங்களோ அத நா செஞ்சுக்கறேன் ன்னு சொல்லிட்டேன்ம்மா ",இப்படி அன்பையும் நம்பிக்கையையும் சேர்த்தே பொழிபவர்கள் பலர் .வெகு சிலர் மேடம் என்று அழைப்பார்கள் .

இன்னும் சிலரோ அக்கா என்று சொல்லி மாய்ந்து போவார்கள் ."இவரு கிட்ட நா அப்பவே சொன்னேக்கா ,அக்கா கண்டிப்பா கேப்பாங்கன்னு ,நீங்க இன்னிக்கி இருக்கீங்களோ இல்லையோன்னு பயந்துகிட்டே வந்தேன் க்கா ."இப்படி மூச்சுக்கு நூறு அக்கா சொல்லி பேசுவார்கள் .கொஞ்சம் ஸ்டைலாக சிலர் சிஸ்டர் என்று சொல்லிப் பார்ப்பார்கள் .

ஒரு பெண் வருவார் .கர்ப்பமாக இருந்த போது முதன்முதலாக சிகிச்சைக்கு வந்தார் .எப்போதும் "டீச்சர் " என்றே சொல்வார் ."இல்ல டீச்சர் ,ஆமா டீச்சர் "என்று எல்லா வாக்கியங்களின் முடிவிலும் ஒரு டீச்சர் இருக்கும் .அதை விட ,நாம் என்ன கேட்டாலும் எழுந்து நின்று தான் பதில் சொல்வார் .கர்ப்பமாக இருக்கும் போது, படுக்க வைத்து சோதித்துக் கொண்டிருக்கும் போது ,நாம் ஏதாவது கேட்டுவிட்டால் ,உடனே டபாரென்று எழுந்துவிடுவார் .கையைக் கட்டிக் கொண்டு "இல்ல டீச்சர் ..."என்று ஆரம்பிப்பார் .கேட்ட போது பள்ளிகூடத்தில் ஒரு ஆசிரியர் எழுந்து நின்று பதில் சொல்லாததற்கு தண்டனை கொடுத்ததன் பலன் இது .சடாரென்று இவர் எழுந்து நிற்கும் போதெல்லாம் நிறைய வேடிக்கையாகவும் கொஞ்சம் பயமாகவும் இருக்கும் எங்களுக்கு .