Wednesday 25 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை

ரெண்டு பேரு வந்து சாபம் கொடுத்திட்டு போன உடனே ..தினம் காலையில எழுந்ததும் நா தொட்டு பார்க்கிறது என் தலைய தான்.நல்ல வேளை டோப்பா வைக்கிற அளவுக்கு நிலைமை மோசமாகலை ,அதோட புழுவும் வைக்கலை .
இப்ப கேசவர்த்தினிக்கு வருவோம் .கேசவர்த்தினி போட்டவுடனே என்னோட தல முடி மட்டுமில்ல இத கேட்டுட்டு போட்டுகிட்ட பக்கத்து வீட்டு பூஜா ...ஐயோ சாரி ,எங்க பக்கத்து வீடு பொண்ணு ரெண்டு பேருக்குமே எக்கச்சக்கமா கொட்டிப் போச்சு .இத சரி பண்ண முள்ள முள்ளால எடுக்கிற மாதிரி டாம்காலுக்கு மாறினோம் .தலையில தடவுனா யாருமே நம்ம பக்கத்துல நிக்க முடியாது .அப்படி ஒரு நறுமணம் ,நிறைய மூலிகை சேர்த்திருக்காங்கள் ல அதோட மகிமை .இதுல கொஞ்சம் பரவாயில்லை ....

இப்ப நா ஹையர் செகண்டரி வந்துட்டேன் .எல்லோரும் ஸ்டைலா ஒத்த ஜட போட்டுட்டு வரும் போது ,நா மட்டும் ரெண்டு ஜட தான் .அதே எண்ணெய் அதே மடிச்சு கட்டின அதே நுனி வரைக்கும் ரிப்பன் வச்ச அதே ஸ்டைலு தான். நமக்கு எப்பவும் சொல்லும் ஒண்ணு ஸ்டைலும் ஒண்ணு...:)கிளாசுல " ஒரு நாளிக்காவது ஒத்த ஜட போட்டுக்கிட்டு வாயேன் ன்னு "எத்தனையோ பேர் கேட்டும் ,ம்ஹூம் ...நாங்க மாற மாட்டோம் ல்ல . எங்க ஸ்கூலில ஒரு ஜியாகிரபி மிஸ் இருந்தாங்க .யாராவது ரிப்பன் இல்லாம வந்தா ,கையில இல்ல தரையில கிடக்கிற நாரு ,சனல் ன்னு எதையாவது கட்டி விட்டுருவாங்க .அன்னிக்கி பூரா அதோடயே திரியனும் .அதனால வேற ஸ்டைல் பண்றதுக்கு வாய்ப்பு குறைவு தான் .


ஸ்கூல் முடிச்சு ,காலேஜும் சேர்ந்தாச்சு .இங்க நெனைச்சாப்புல ஸ்டைல் பண்ணலாம் .முடியும் கனிசமா கொறஞ்சு தான் போச்சு (ரொம்ப படிச்சதால ?!?).இங்க நிறைய பேரு "முடிய ட்ரிம் பண்ணி விடு அடியில ஈவனா இல்ல ,"அப்படின்னு பல மாதிரியா தூபம் போட்டு பாத்தாங்க (ஒரு பொறாமை தான் ).ஆனா இப்படி ட்ரிம் பண்ணினவுங்க பல பேரோட கூந்தல் ஆப்பம் பங்கு போட்ட பூனை கதையில போல ஒண்ணுமில்லாம போனதை பார்த்திருந்த நான் ,அசரவே இல்ல .

அப்புறம் கல்யாணம் ஆச்சு .வீட்டுக்காரர் சொன்னாருன்னு ஒரு தடவை முடிய வெட்டிட்டேன் .ஒரு கொண்டை போடுறதுக்கு கூட ஒரு சுத்து வரலை .எங்க மாமியார் (அவங்களுக்கு மூணு மருமகள் ல எனக்கு தான் அவங்கள மாதிரி நீள கூந்தல் ன்னு கொஞ்சம் பெருமை ,அதான் ),எங்க சித்தின்னு (இவங்களுக்கு அவங்க பலம் +அழகு அவங்க கூந்தல்ல தான் இருக்குன்னு நெனப்பு ) நிறைய பேரு கிட்ட திட்டு வாங்கினது தான் மிச்சம் .அதுக்கப்புறம் தான் யார் என்ன சொன்னாலும் சரி முடி கிட்ட கூட கத்திரிகோல் கொண்டு போக கூடாதுன்னு சபதம் ? செஞ்சேன் .

இதுக்கப்புறம் குழந்தை முகம் பார்க்கிறப்ப முடி கொட்டும் அப்படி இப்படிங்கற நிறைய மூட நம்பிக்கைகளைஎல்லாம் கூட தாண்டி என் முடி இன்னமும் அடர்த்தியா இல்லைன்னாலும் நீளமாவாவது இருக்கு .நல்ல வேளை நிறைய இருந்தப்பவே நல்லா ரெட்டை ஜடை போட்டு அனுபவிச்சாச்சு ன்னு தோணும் .இதுக்குன்னு பெரிசா எதையும் செய்யறது இல்லை .முடி வளரதுக்கு டிப்ஸ் ன்னு எங்காவது படிக்கும் போதெல்லாம் எனக்கு என்னோட தோல் டாக்டர் ஒரு தடவை சொன்னது தான் ஞாபகம் வரும் ,"நீ என்ன செஞ்சாலும் ,அது கொட்டனும் இருந்தா கொட்டி தான் தீரும் ."


என்னோட பேஷண்ட்ஸ் யாராவது ,எனக்கு ரொம்ப முடி கொட்டுது ஏதாவது மருந்து எழுதி கொடுங்க ன்னு சொன்னா ,நா சொல்ற ஒரே பதில் இதுதான் ,"அப்படி ஒரு மருந்து இருந்தா நானே சாப்பிட மாட்டேனா ?"

Wednesday 18 August 2010

உமா சங்கர் -நேர்மைக்கு தண்டனை


பொது வாழ்க்கையிலும் தனி வாழ்க்கையிலும் நேர்மை என்பது அவமானமாக போய்விட்ட இந்த காலத்தில் உமா சங்கர் போன்ற அதிகாரிகள் பழி வாங்கப்படுவது இயற்கை தான் .நேர்மை என்பது எந்த அரசுக்கும் ஒரு தீண்டத்தகாத விஷயமாகவும் நேர்மையான அதிகாரிகள் வேண்டாத சுமைகளாகவும் மாறிப் போய் வெகு காலமாகிறது . நேர்மையான அதிகாரிகள் விஷமிகளாகவும் ,பிழைக்க தெரியாதவர்களாகவும் ,பிறர் பிழைப்பை கெடுப்பவர்களாகவும் இங்கு கேலிக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

இவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகள் இவர்களின் உறுதியை சிதைக்க மட்டுமின்றி ,இவர்களை போல் பணியாற்ற முற்படும் பிறரையும் பலவீனப்படுத்தவே . Bureaucracy அரசின் வலது கரமாகவே செயல்படுகிறது .இதில் பலர் அரசையே ஆட்டி வைக்கும் திறன் படைத்தவர்களாக இருக்கிறார்கள் ."எஸ் மினிஸ்டர் (Yes Minister )" என்ற பிபிசி தொடர் ஒன்று உண்டு ,அதில் bureaucracy ஆட்சியாளர்களை எப்படி மறைமுகமாக ஆட்டுவிக்கிறது என்பதை
அப்பட்டமாக சித்தரித்திருப்பார்கள் .இதில் பொருந்தாத சிலர் ,ஆட்சிக்கும் அது சார்ந்து வாழ பழகிக் கொண்டிருக்கும் அதிகாரிகளுக்கும் தலைவலியாகிறார்கள்.

எது எப்படியானாலும் விசில் ப்ளோவர்ஸ் (Whistle blowers ) கொல்லப்படுகிறார்கள்
தவறை மறைக்க மட்டுமல்ல ,வேறு எவரும் அவ்வாறு துணியாதிருக்கவும். அதே போல் இது போன்ற வழக்குகள் ,வழிக்கு வராதவரை தட்டி வைக்க மட்டுமல்ல ,மற்றவரை அச்சுறுத்தவும் தான் ...


"அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை."
என்பதை நினைவில் கொண்டு இது போன்ற இழிவான நடவடிக்கைகளை நிறுத்தி ,உமா சங்கர் அவர்களை மீண்டும் உரியதொரு துறையில் பணியாற்ற அழைக்க வேண்டும் .

நன்றி -பதிவுலக நண்பர்கள்

Friday 13 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை

நா நாலு இல்ல அஞ்சு படிச்சப்ப ன்னு நெனைக்கிறேன் .மங்கி கிராப்ப விட்டு முடிய வளக்க ஆரம்பிச்சோம் .காலயில அனேகமா எனக்கு தல வாரி விடுறது பொன்னம்மாவா தான் இருக்கும் .ஜாடியிலிருந்த எண்ணெயில பாதி எண்ணெய கீழ கொட்டாம (ரொம்ப கஷ்டம் இது ) ரெண்டு கையிலேயும் ஏந்திக்கிட்டு வருவா .அப்படியே அத என்னோட நடு மண்டையில வச்சு தேச்சு விடுவா .அப்புறம் ஜடைய பின்ன ஆரம்பிப்பா .ஒவ்வொரு கால பின்னின்னப்புறமும் அத டைட் செய்வா பாருங்க , தல வலிக்கும் ,ஆனா பின்னல் மட்டும் கலையவே கலையாது .ஜடைய கழட்டி விட்டப்புறமும் கூட பின்னல் போட்டாப்லேயே இருக்கும் .

அப்புறம் தோள் அளவு மட்டுமே இருந்த என்னோட முடி வளந்து இடுப்பு வரைக்கும் வந்திருச்சி .ரெட்டை ஜடை போட்டுட்டு தான் ஸ்கூலுக்கு போவேன் .நுனி வரைக்கும் எண்ணெய் வச்சு ரிப்பன் வச்சு மடிச்சு கட்டி ....இது அந்த கால கதாநாயகிகளோட மட்டுமில்ல ,என்னோட ஸ்டைலும் கூட .என்னோட சண்டேக்கள் பலவும் என்னோட முடி பராமரிப்புக்கே செலவாச்சு .காலயில எண்ணெய் தேச்சு ,சீயக்கா வச்சு தேச்சு முடிய காயப் போட்டு , ஒரு நாள் போய்டும் .

இப்படியே நடந்துகிட்டு இருந்திச்சு .நா எட்டாவது படிக்கும் போது முடி இன்னமும் அடர்த்தியா இருந்தா நல்லா இருக்குமே ன்னு தோணிச்சு .எங்கம்மா சொன்னங்க ,"நாங்கெல்லாம் சின்ன வயசா இருந்தப்ப ,கேசவர்த்தினி எண்ணெய் தான் தேச்சோம் .அதுக்கப்புறம் தான் முடி அடத்தியா வளந்துச்சி ."இத நம்பி நானும் கேசவர்த்தினிய வாங்கி தேய்க்க ஆரம்பிச்சா முடி கத்தக்கத்தையா கொட்ட ஆரம்பிச்சிருச்சி .

அடுத்த இடுகையில முடியும் ...

Monday 9 August 2010

குதிரைவால் முதல் எலிவால் வரை




இதை எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை தான் .ஆனா பொறுமையா யோசிக்க இன்னிக்கு தான் நேரம் வந்திச்சு .சரியா யோசிக்காம அரைகுறையா எழுதக் கூடாது இல்லையா ?இத ஒரு தொடர் மாதிரி எழுதலாமா இல்ல சின்னதா முடிச்சிக்கலாமா ன்னு இன்னமும் முடிவு பண்ணல.எழுத எழுத பாத்துக்கலாம்ன்னு முடிவு செஞ்சிருக்கேன் .

சின்ன வயசுல இந்த ஃபேரி டேல்ஸ் படிக்கணும்ன்னா ரொம்ப பிடிக்கும் எனக்கு .அதேலேயும் குறிப்பா அந்த ரபுன்சல் கதை .படிக்கும் போதெல்லாம் ஒரு டவர் மேலேருந்து கூந்தல கீழ போடணும் ன்னா அது எவ்வளவு நீளமா இருந்திருக்கணும் ?அத பிடிச்சி மேலே ஏறனும் னா தல வலிக்காதா ?இல்ல அந்து போகாதா ?இதெல்லாம் எனக்கு வந்த சில சந்தேகம் தான் .


நா பிறந்தப்போ, என்னைய வந்து பாக்கறதுக்கு முன்னாடியே ,நா பிறக்கறதுக்கு முன்னாடியே அதுவும் கூட தப்பு ,கல்யாணத்துக்கு முன்னாடியே என்னோட பேர ,முடிவு செஞ்சாங்க எங்கப்பா .ஒரு வேளை பார்த்திருந்தா வேற பேரு வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன் .ஏன்னா நா பிறந்தப்ப என்னோட தலையில இருந்ததே நாலு முடி தான் .அப்ப இந்த பேர் பொருத்தம் இடிக்குமே !பெயர் ராசியோ என்னமோ பூங்குழலி ன்னு பேரு வச்ச நேரம் என்னோட நாலு முடி நிஜமாவே கூந்தாலாயிருச்சு . இதுக்கு பார்பர் அடிச்ச மூணு மொட்டையும் கூட காரணமாயிருக்கலாம் (நாங்க பகுத்தறிவாளருங்க) .http://poongulali.blogspot.com/2008/08/blog-post.html.


கொஞ்சம் வெவரம் தெரியுற வயசு வரைக்கும் என்னோட முடிய அதிக நீளமா வளர விடாம கட் செஞ்சே வச்சாங்க எங்கம்மா.தோளுக்கு கொஞ்சம் மேல வரைக்கும் இருந்தது அதோட நீளம் .முன்னாடி அந்த காலத்து மங்கி கிராப் .இத என்னோட எதித்த வீட்டு ஆண்ட்டியே கட் பண்ணி விடுவாங்க (பியூட்டி பார்லரெல்லாம் சினிமா ஸ்டார்ஸ் மட்டும் போற இடமாயிருந்துது அப்ப ). இதுல நடுவுல கொஞ்ச நாள் ஜட போடுற அளவு வளந்து போன
என்னோட முடிய என்னோட சித்தியும் அம்மாவும் ஜடையோட நா அழ அழ கட் பண்ண ( child abuse ?)இன்னிக்கி வரைக்கும் என் முடி கோணல் மாணல் தான். என்னோட முடிய என்ன நீளத்துல வச்சிக்கனும்ன்னு முடிவு பண்ண எனக்கு உரிமை இருக்குன்னு கூட தெரியாத மண்டாயிருந்திருக்கேன்.

இப்படி மண்டையில மங்கி கிராப்பும் மனசுல ஜட ஆசையும் வச்சுக்கிட்டு நா இருந்த காலத்துல தான் பொன்னம்மா வந்தா எங்க வீட்டுல வேலை பாக்க .

இப்ப யோசிச்சு பாத்ததுல இத ரெண்டு மூணு பாகமா பிரிச்சு எழுதலாம் ன்னு நினைக்கிறேன் .ஏன்னா இது என்னோட நீள கூந்தல் பத்தின நீள கதையில்லையா ?



Wednesday 4 August 2010

என் கோலங்கள்


சின்னதும் இல்லாமல்
பெரிதாகவும் இல்லாமல்
சரியானதாக இருந்த
என் வீட்டு வாசலில்
கம்பீரமாய் கொலுவிருந்தன
என் கோலங்கள்

புள்ளிகள்
புள்ளிகள் சீண்டி அகன்றும்
குறுக்கே ஓடியும் விளையாடும் கோடுகளென
வாசல் முழுக்கவும்
களித்துக் கிடந்தன

மயில்களின் ஆட்டம்
குயில்களின் கானம்
யானைகளின் ஊர்வலம் என
நித்தம் திருவிழாவாக
இறுமாந்திருந்தது என் வாசலும்

எவர் கண்பட்டதோ
இன்று கையளவாகப் போனது
என் வாசல்
எவர் வீட்டு வாசலில்
ஒண்டுவதென இடம் தேடி
கலங்கி அலைகின்றன
அனாதைகள் போல்
என் கோலங்கள்