Tuesday 20 July 2010

பாட்டியும் பேனும்

பாட்டி இறக்கும் போது அவருக்கு வயது தொண்ணூறை நெருங்கியோ தாண்டியோ இருந்திருக்கும் .ஆனால் அந்த வயதிலும் பாட்டிக்கு தலையில் கத்தையாக வெள்ளையாக ஒன்றிரண்டு கருப்பாகவும் கூட முடி இருந்தது .இதை குறித்து கொஞ்சம் பெருமை தான் பாட்டிக்கு.நீளமுடி இல்லாதவர்கள் எவரேனும் பூ வைத்திருப்பதைப் பார்த்தால் ,"அதுல பூவ அவ ஆணி அடிச்சு தான் மாட்டனும் ளா'"என்பார் நக்கலாக .



குளித்ததும் எண்ணெய் வைத்தது சீவி ,நுனியில் கொண்டை போட்டுக் கொண்டு விடுவார் .இதில் இன்னொரு சிக்கல் இருந்தது .பாட்டியின் கூந்தலில் எப்போதும் குடி இருந்தன நிறைய பேன்கள்.ஒல்லியாக இருந்த என் பாட்டிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் குண்டு குண்டாக மூட்டை பூச்சி அளவில் .





மதியான வேளைகளில் "பேன் இழுப்பது" என்னுடைய பொறுப்பாகி போனது.நான் சோபாவில் உட்கார்ந்து கொள்ள பாட்டி கீழே உட்கார்ந்து கொள்வார் .பேனை பிடிப்பது சுலபமாக இருந்தாலும் அவற்றை கொல்லுவது அத்தனை சுலபமாக இல்லை .நகத்தில் வைத்தது நசுக்கியவுடன் ,கையையே வெட்டியது போல ரத்தம் தெறிக்கும் .இது கொஞ்சம் அருவருப்பாக இருந்ததால் ,இதற்கு மாற்றாக இன்னொரு வழியை கையாண்டோம் .பேன் பார்க்க ஆரம்பிக்கும் முன்னமே ஒரு பழைய மக்கில் மண்ணெண்ணெய் வைத்துக் கொள்வோம் .பேனைப் பிடித்து அதில் போட்டுவிடுவோம் .இது கொஞ்ச காலம் தொடர்ந்தது .





ஒரு முறை ,ஊரிலிருந்து வந்திருந்தார் பாட்டி .வழக்கம் போலவே பட்டர் பிஸ்கட் +இருமல்+பேனுடன் .எக்கச்சக்கமான பேன் .இதைப் பார்த்த, என் வீட்டில் அப்போது பணி செய்து கொண்டிருந்த பெண் சொன்னார் ,"அம்மா ,இது சாவுப் பேன் .அதான் இப்படி அப்பி போயி கெடக்குது "என்று (இதன் பின் இரண்டு வருடமாவது பாட்டி உயிரோடு இருந்தார்) . பேன் சீப்பு வைத்து சீவி சீவி கை வலித்தது தான் மிச்சம் .பேன் குறைந்தாற் போல் தெரியவில்லை .


அம்மா உடனே மெடிக்கர் (பேன் ஷாம்பூ ?) வாங்கி பாட்டியின் தலைமுடியை நன்றாக அலசிவிட்டார் .இதுவே பாட்டியின் வாழ்க்கையில் முதல் ஷாம்பூ பாத்தாக இருக்க வேண்டும் .தலை துடைத்து கொண்டிருந்த பாட்டியிடம் ," என்ன பாட்டி,குளிச்சாச்சா ?"என்று நான் கேட்டவுடன் ,"எதையோ போட்டு ஒங்கம்மா தேச்சுபுட்டா ளா எம்முடிஎல்லாம் ஒண்ணுமில்லாம ஓடாப் போச்சு ....பூரா முடியும் போச்சுப் போ "என்றார் கோபமாக ..


No comments: