Wednesday 28 July 2010

என் கனவு



பல நாட்கள் ஆகிப் போனது
என் கனவை நான் மறந்தே போனேன்
ஆனால் அப்போது அங்கிருந்தது அது
என் முன்னால்
சூரியன் போல பிரகாசமாய்
என் கனவு

அப்புறம் அந்த சுவர் எழுந்தது
மெள்ள எழுந்தது
மெள்ளவே
எனக்கும் என் கனவிற்கும் நடுவே
எழுந்து கொண்டே இருந்தது
வானம் தட்டும் மட்டும்
அந்த சுவர்

நிழல்
நான் கருப்பாக இருக்கிறேன்
நான் அந்த நிழலுள் உறைந்துக் கிடக்கிறேன்
என் கனவின் வெளிச்சம்
இனி என்முன் இல்லை
என் மேல்
வெறும் தடிச்சுவர்
வெறும் நிழல்


என் கைகளே
என் கரிய கைகளே
சுவரை உடைத்து வெளியேறுங்கள்
என் கனவை கண்டெடுங்கள்
உதவுங்கள்
இந்த இருட்டை சிதைக்க
இந்த இரவை நொறுக்க
இந்த நிழலை உடைக்க
ஓராயிரம் சூரிய வெளிச்சங்களாக
சுழலும் ஓராயிரம் சூரியக் கனவுகளாக



It was a long time ago ...
By Langston Hughes

It was a long time ago.
I have almost forgotten my dream.
But it was there then,
In front of me,
Bright like a sun--
My dream.
And then the wall rose,
Rose slowly,
Slowly,
Between me and my dream.
Rose until it touched the sky--
The wall.Shadow.
I am black.
I lie down in the shadow.
No longer the light of my dream before me,
Above me.
Only the thick wall.
Only the shadow.
My hands!
My dark hands!
Break through the wall!
Find my dream!
Help me to shatter this darkness,
To smash this night,
To break this shadow
Into a thousand lights of sun,
Into a thousand whirling dreams Of sun!

Tuesday 27 July 2010

விழிப்புணர்வு

சில சமயங்களில் நோயாளிகளுக்கு இருக்கும் விழிப்புணர்வு மருத்துவர்களுக்கு இருப்பதில்லை .நேற்று நடந்தது இது .வெகு நாட்கள் கழித்து சிகிச்சைக்கென வந்திருந்தார் ஒருவர் .


முந்தைய வாரத்தில் பைக்கிலிருந்து விழுந்ததில் அடிப்பட்டு தையல் போடப்பட்டதாக சொன்னார் ."பைக்கில போயிட்டிருந்தப்ப பின்னாலிருந்து வண்டிக்காரன் தட்டிவிட்டுட்டான் .அங்கேயே ஒரு ஆஸ்பத்திரியில மூளைக்கு வயித்துக்கு எல்லாம் ஸ்கேன் எடுத்து பாத்துட்டாங்க .எல்லாமே நல்லா இருக்கு .உள்காயம் எதுவுமில்லன்னு சொல்லிட்டாங்க .பின் மண்டையில மட்டும் தையல் போட்டாங்க .

அதுல பாருங்க ,முதல்ல அடிப்பட்டு தலையில ரத்தம் வந்திச்சு .அப்ப வந்து பாத்த டாக்டர் கையில க்ளவுஸ் போடல .வெறுங் கையோட தான் பாத்தார் .தையல் போட்ட டாக்டர் க்ளவுஸ் போட்டிருந்தார் .எனக்கோ சங்கடமா போச்சு .ஆனா எச்.ஐ.வி ன்னு சொன்னா வெளிய அனுப்பிடுவாங்களோன்னு பயமா வேற இருந்திச்சு .சொல்லவும் முடியல .கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரினாலும் பரவாயில்ல .தனியார் தான் .எத்தனையோ மருந்து ,பஞ்சு எல்லாம் எழுதி கொடுத்தாங்க .அதோட ரெண்டு க்ளவுஸ் எழுதி கொடுத்திருந்தா வாங்கிக் கொடுத்திருக்க மாட்டோமா ?

நீங்களாச்சும் ஒங்க ஆஸ்பத்திரியிலிருந்து எல்லா டாக்டருக்கும் ஒரு லெட்டர் எழுதுங்களேன் .எந்த பேஷன்டா இருந்தாலும் க்ளவுஸ் போட்டு தான் பாக்கணும் ன்னு .ஏன்னா யாருக்கு நோய் இருக்கு அந்த அவசரத்துல பாக்க முடியுமா ?"

Tuesday 20 July 2010

பாட்டியும் பேனும்

பாட்டி இறக்கும் போது அவருக்கு வயது தொண்ணூறை நெருங்கியோ தாண்டியோ இருந்திருக்கும் .ஆனால் அந்த வயதிலும் பாட்டிக்கு தலையில் கத்தையாக வெள்ளையாக ஒன்றிரண்டு கருப்பாகவும் கூட முடி இருந்தது .இதை குறித்து கொஞ்சம் பெருமை தான் பாட்டிக்கு.நீளமுடி இல்லாதவர்கள் எவரேனும் பூ வைத்திருப்பதைப் பார்த்தால் ,"அதுல பூவ அவ ஆணி அடிச்சு தான் மாட்டனும் ளா'"என்பார் நக்கலாக .



குளித்ததும் எண்ணெய் வைத்தது சீவி ,நுனியில் கொண்டை போட்டுக் கொண்டு விடுவார் .இதில் இன்னொரு சிக்கல் இருந்தது .பாட்டியின் கூந்தலில் எப்போதும் குடி இருந்தன நிறைய பேன்கள்.ஒல்லியாக இருந்த என் பாட்டிக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் குண்டு குண்டாக மூட்டை பூச்சி அளவில் .





மதியான வேளைகளில் "பேன் இழுப்பது" என்னுடைய பொறுப்பாகி போனது.நான் சோபாவில் உட்கார்ந்து கொள்ள பாட்டி கீழே உட்கார்ந்து கொள்வார் .பேனை பிடிப்பது சுலபமாக இருந்தாலும் அவற்றை கொல்லுவது அத்தனை சுலபமாக இல்லை .நகத்தில் வைத்தது நசுக்கியவுடன் ,கையையே வெட்டியது போல ரத்தம் தெறிக்கும் .இது கொஞ்சம் அருவருப்பாக இருந்ததால் ,இதற்கு மாற்றாக இன்னொரு வழியை கையாண்டோம் .பேன் பார்க்க ஆரம்பிக்கும் முன்னமே ஒரு பழைய மக்கில் மண்ணெண்ணெய் வைத்துக் கொள்வோம் .பேனைப் பிடித்து அதில் போட்டுவிடுவோம் .இது கொஞ்ச காலம் தொடர்ந்தது .





ஒரு முறை ,ஊரிலிருந்து வந்திருந்தார் பாட்டி .வழக்கம் போலவே பட்டர் பிஸ்கட் +இருமல்+பேனுடன் .எக்கச்சக்கமான பேன் .இதைப் பார்த்த, என் வீட்டில் அப்போது பணி செய்து கொண்டிருந்த பெண் சொன்னார் ,"அம்மா ,இது சாவுப் பேன் .அதான் இப்படி அப்பி போயி கெடக்குது "என்று (இதன் பின் இரண்டு வருடமாவது பாட்டி உயிரோடு இருந்தார்) . பேன் சீப்பு வைத்து சீவி சீவி கை வலித்தது தான் மிச்சம் .பேன் குறைந்தாற் போல் தெரியவில்லை .


அம்மா உடனே மெடிக்கர் (பேன் ஷாம்பூ ?) வாங்கி பாட்டியின் தலைமுடியை நன்றாக அலசிவிட்டார் .இதுவே பாட்டியின் வாழ்க்கையில் முதல் ஷாம்பூ பாத்தாக இருக்க வேண்டும் .தலை துடைத்து கொண்டிருந்த பாட்டியிடம் ," என்ன பாட்டி,குளிச்சாச்சா ?"என்று நான் கேட்டவுடன் ,"எதையோ போட்டு ஒங்கம்மா தேச்சுபுட்டா ளா எம்முடிஎல்லாம் ஒண்ணுமில்லாம ஓடாப் போச்சு ....பூரா முடியும் போச்சுப் போ "என்றார் கோபமாக ..

Wednesday 14 July 2010

அம்மாவின் ஆர்ப்பாட்டம்

நினைத்தபடியே செம்மொழி மாநாடு நடந்த அதே கோவையில் பெரிய அளவில் கூட்டத்தை சேர்த்து காண்பித்தார் அ .தி.மு.க தலைவி ஜெயலலிதா .தொலைகாட்சியில் பார்த்தவரையில் கண்ணெட்டும் அல்லது காமெரா எட்டும் வரையிலும் தலைகளே தெரிந்தன .இவையெல்லாம் ஓட்டுகளாக மாறுமா என்பது ஒரு பக்கம் இருக்க ,இதில் சில விஷயங்கள் பளிச்சென்று மனதில் பதிந்தன .

1.மகளிர் அணியின் (குத்?)ஆட்டம் .இதை ஜெயா டிவி பெரிதாக காண்பிக்கவில்லை என்றாலும் தமிழன் டிவியில் முக்கியமாக காண்பித்தார்கள் .

2.வழக்கம் போலவே மூலவரான எம்.ஜி.ஆர் மிஸ்ஸிங் .எங்கோ ஏனோ தானோ என்று அவர் முகம் தெரிந்தது. என்று திருந்துவார்களோ தெரியவில்லை .

3.ஏனோ கூட்டம் கொஞ்சம் கூட கலர்புல்லாக இல்லை .இவ்வளவு கூட்டம் சேர்க்க செலவழித்தவர்கள் ,அம்மா படம் போட்ட தொப்பி ,டி.ஷர்ட் (ஓரிருவர் அணிந்திருந்தனர் ) ,பானர்ஸ் என்று இன்னம் கொஞ்சம் செலவழித்திருந்தால் தொலைக்காட்சியில் பார்க்க நன்றாக இருந்திருக்கும் .

4.எல்லோருக்கும் மேடையில் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன .இந்த மட்டுக்கும் மாற்றம் தான் .ஆனால் உட்கார்ந்திருந்தவர்கள் யாருமே இயல்பாக இல்லை .கொஞ்சம் இறுக்கமாகவே இருந்தார்கள் .(கட்சி தாவலாம்ன்னு நெனைச்சுக்கிட்டு இருந்தா ,இவ்வளவு கூட்டம் வந்திருக்கே என்று யோசித்திருப்பார்களோ ?)

5.அம்மாவின் பேச்சு .ஆர்ப்பாட்டத்தின் ஹைலைட்டாக இருக்க வேண்டிய இது ரொம்ப ஏமாற்றமாக இருந்தது .மீண்டும் அரைத்த மாவையே அரைத்தார் .எத்தனையோ முறை எத்தனையோ பத்திரிக்கைகள் ,தொலைக்காட்சிகள் என்று எல்லோருமே பலமுறை கேட்ட விஷயங்கள் தான் .பேச்சு ஸ்டைல் வேறு அறிக்கை போலவே இருந்தது (அறிக்கை எழுதுற ஆளையே வச்சு பேச்சும் எழுதுனா இந்த கதி தான் .ஆள மாத்துங்க ).வகுப்பில் பாடம் நடத்தும் இழுவை ஆசிரியர் லெக்சர் போல இருந்தது இந்த பேருரை .
இத்தனை கூட்டம் கிடைக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டமாக ,இன்னமும் மக்களை சுண்டி இழுக்கும் படி ஆரவாரமாக பேச வேண்டாமா ?ஏனோ இவர் எல்லா மேடைகளிலும் இப்படியே வழவழா கொழ கொழாவென்றே பேசுகிறார் (கலைஞர் அளவிற்கு இல்லையென்றாலும் ஸ்டாலின் அளவிற்காவது பேச வேண்டாமா ?)
ஒரு எம்.ஜி.ஆர் பாட்டாவது பாடியிருக்கலாம் (திருவளர் செல்வியோ ,நான் தேடிய தலைவியோ என்ற பாட்டையாவது )
இறுதியில் இவர் பேசிய தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சுக்கு நல்ல வரவேற்பு.

6.இதற்கு உடனே தி மு க தரப்பு ,ஆட்சி மாறும் என்று கணிக்க இவர் என்ன ஆக்டபஸ் பாலா என்று சமயோசிதமாக கேட்டு வைத்தார்கள் .(நல்லாத்தான் யோசிக்கிறாங்க.பகுத்தறிவு தான் இதுக்கு காரணம் போல )

7.எல்லா தேசிய தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டத்தை முக்கிய செய்தியாக காண்பித்தார்கள் .(அம்மா வெளிய வந்ததே அவுங்களுக்கு செய்தி தான் ...)

8.அடுத்தது என்ன ...ஆவலாக இருக்கிறது .அம்மா கொடநாடு போயாச்சா ?

Saturday 10 July 2010

அம்மா என்று ...

இறந்து போனவர்களைப் பற்றிய செய்திகளை அதிகம் சுமந்து வரக்கூடாது என்றே பல நேரங்களில் நினைக்கிறேன் .ஆனால் அருகிலிருந்து பார்க்கும் போது சில மரணங்கள் அதிகம் பாதிப்பது நிஜம் .

நேற்று ஒரு பெண்ணை கொண்டு வந்து சேர்த்தார்கள் .உடன் ஒரு பெண் ,அவரின் மகள் ,வயது பதினெட்டு இருக்கும் .இந்த பெண்ணே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.உன்னுடன் துணைக்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்ட போது ,என் தம்பி இருக்கிறான் என்று சொன்னாள்,அவனின் வயது பத்து இருக்கும் .இவர்களை அழைத்து வந்த சித்தப்பா ,செலவுக்கான பணத்தை இந்த சிறுவனிடம் கொடுத்து விட்டு ,இன்னமும் பணம் ஏற்பாடு செய்து வர ஊருக்கு சென்றிருக்கிறார் .

நோயாளியோ மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார் .நோயாளியின் உடல் நலம் மோசமாக இருக்கிறது என்பதை தெரிவித்து விட்டோம் என்று உறவினர்களிடம் கையெழுத்து வாங்கும் வழக்கம் உண்டு (DIL).இவர்களிடம் எதை சொல்வது என்று யோசித்துவிட்டு ,சீரியசாகவே இருக்கிறது நிலைமை என்று மட்டும் சொல்லி வைத்தோம் ."ஏதாவது செய்யுங்க ,எங்கப்பாவும் கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி செத்து போயிட்டார் .இப்ப எனக்கு அம்மாவும் இல்லாம போயிடுவாங்க போலிருக்கு "என்று சொல்லி ஓவென்று அழுதாள் அந்த பெண் .

இன்று அதிகாலையில் அவளின் அம்மா இறந்து போனார் .இருந்ததோ இந்த பெண்ணும் அவள் தம்பியும் .அவள் சித்தப்பா வந்து சேரவே ஒரு மணி ஆயிற்று .தொலைபேசியில் செய்தி சொல்லிய போது ,இவர்களில் சித்தப்பா குழந்தைகளிடம் சொல்லி விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ளவே ,இருவரையும் கொஞ்ச நேரம் வெளியிலேயே உட்கார வைத்திருந்தோம் .

ஆனாலும் சிறிது நேரத்தில் விளங்கி விடவே ,சிறிது நேரம் அழுது விட்டு ,ஒன்றுமே பேசாமல் எங்களை கடந்து போனாள் அந்த பெண் .வேறு நோயாளிகளுடன் வந்தவர்கள் ஆறுதல் சொல்லி ஏதோ சாப்பிட வாங்கித் தந்தார்கள் .சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்திருந்தாள்.ஆம்புலன்சில் ஏற்றி போகும் வரையும் ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியுடனே கிளம்பி போனாள் .மனம் வாடிப் போனோம் எல்லோருமே .

Wednesday 7 July 2010

கற்பகசித்தர்

ஒவ்வொரு காலகட்டத்திலும் ஜோசியர்கள் ஒவ்வொரு பரிகாரம் சொல்கிறார்கள் .ஒரு காலத்தில் நாகதோஷ பரிகாரம் வெகு பிரசித்தியாக இருந்தது .அதை செய்ய காளஹஸ்திக்கு எல்லோரும் போனார்கள் ,போகிறார்கள் .பின்பு ,ஏதோ முன்னோர் வழிபாடு சரியில்லை என எல்லோரும் திதி திவசம் என்று காக்கைகளை பிடித்துக் கொண்டிருந்தார்கள் .பின்னர் ஆரம்பித்தது குல தெய்வ வழிபாடு .இந்த காலகட்டத்தில் தான் அம்மாவுக்கு நாங்கள் குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது சங்கடமாக போனது .


எங்கள் அப்பா வீட்டிலோ எல்லோரும் நாத்திகர்கள் .இதில் எங்கள் குல தெய்வம் கருப்பஸ்தர் என்று எப்போதோ எங்கள் அத்தை சொன்னதாக ஞாபகம் .இதுவே தப்பாகி அவர் பெயர் கற்பகசித்தன் என்று தெரிய வந்தது .தெரிய வந்ததும் அம்மா செய்த முதல் காரியம் அவருக்கு வெள்ளியில் கிரீடம் செய்து வைத்தது.அதோடு எங்களை விட்டுவிடவில்லை கற்பகசித்தர் .அவரின் மேல் அம்மாவிற்கு ஏற்பட்ட பரிவு அவருக்கு உற்சாகமளித்திருக்க வேண்டும் .

அங்கிங்கே விசாரித்ததில் கற்பகசித்தரைப் பற்றிய இன்னமும் பல செய்திகள் தெரிய வந்தன .அவரின் பூர்வீகம் ,அவரின் சொந்த ஊர் ,அவர் சார்ந்த சாபம் ,அது மட்டுமல்ல அவர் எங்களின் குல தெய்வம் மட்டுமல்ல ,எங்களின் மூதாதையரும் கூட என்பதும் .இதையெல்லாம் அம்மா பக்தி பரவசத்துடன் சேகரித்துக் கொண்டிருக்க ,அப்பா இதையெல்லாம் ஒரு புத்தகமாக எழுதினார் ,"ஆலடி கண்ட கற்பகசித்தன் " என்று பெயரிட்டு .இதை இந்த ஆண்டு ஆலடிப்பட்டி வைத்தியலிங்கச் சாமி கோவில் சித்திரை திருவிழாவின் போது வெளியிட்டோம் .அதோடு அனைவருக்கும் இலவசமாக ஒரு புத்தகம் கொடுத்தும் ஆயிற்று .ஊர் வரலாற்றை பதிவு செய்ததோடு அல்லாமல் அதை தன் ஊரிலேயே வெளியிட்ட சந்தோசம் அப்பாவிற்கு.

Monday 5 July 2010

பிறந்தநாள் அன்றும் இன்றும்

காலயில ஸ்கூல் அசெம்பிளி முடிஞ்சவுடனே ஒரு அறிவிப்பு செய்வாங்க ."ஆல் தி பர்த்டே சில்டிரன் கம் பார்வர்ட் ."எல்லோரும் வந்தவுடனே ,"ஹாப்பி பர்த்டே "பாட்டு ,மொத்த ஸ்கூலும் பாடும். எங்க ஸ்கூல்ல வித்தியாசமா ,பர்த்டே கொண்டாடுறவுங்க ,"ஐ தாங்க யூ ஐ டூ" ன்னு திரும்பிப் பாடனும்.இது முடிஞ்சப்புறம் ,எச்.எம் ,டீச்சர்ஸ் எல்லாருக்கும் சாக்லேட் ,அப்புறம் வகுப்புல கூட படிக்கிறவுங்களுக்கு (இதுல ரொம்ப நெருங்கிய தோழிகளுக்கு ,"நீ இன்னும் ரெண்டு எடுத்துகோடீ "ன்னு ஸ்பெஷல் கவனிப்பு ). இது தவிர வழக்கம் போல புது டிரெஸ் (என் தம்பியோட பிறந்தநாள் பொங்கலுக்கு ரெண்டு நாள் கழிச்சு வரும் ,அதுனால அவனுக்கு புது டிரெஸ் கூட பல தடவை கிடையாது ),வீட்டுல பாயாசம் இல்ல கேசரி ,கோயில் +அர்ச்சனை . பிறந்தநாளுக்கு கேக் வெட்டினவுங்க எல்லோரும் கோடீஸ்வரரா தெரிவாங்க .என் வகுப்பு தோழி ஒருத்தி வருஷா வருஷம் பட்டுப்பாவாடை கட்டிட்டு தான் வருவா ,அடேயப்பா ன்னு நெனச்சுக்கிட்டு இருந்தா ஒரே பாவடைய தான் டக் பிரிச்சு கட்டிட்டு வந்திருக்கான்னு அப்புறம் புரிஞ்சுது .

அப்புறம் காலேஜ் வந்தப்ப தான் ,கிரீட்டிங் கார்டு எல்லாம் பெரிசா வந்திச்சு .இருக்கிற நாலு கடையில தேடி ,மனச தொடுற கண்ண பிழியுற மாதிரி விஷயமா எழுதியிருக்கிற கார்டை வாங்கிக் கொடுக்கிறதே ஒரு பெரிய ஹாபியா இருந்துது .இது பத்தாதுன்னு நாமளே கலர் பண்ணி ,கூட நாலு லைன் எழுதி...யாருக்காவது பிறந்தநாள் ,வந்தாலே நம்மளோட கலை ஆர்வம் கரை புரண்டிரும் (அப்படி வந்த சில கார்டு இன்னும் கூட எங்கிட்ட உண்டு ,கொடுத்த தோழிகள் கூட தான் தொடர்பு இல்லாம போச்சு ) .காலேஜுல ஒரே ஒரு தடவ என் தோழிகளுக்கு டிரீட் கொடுத்தேன் .ஒண்ணும் பெரிசா இல்ல ஒரு ஐஞ்சு பேருக்கு காலேஜுக்குள்ளேயே கூல் டிரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்தேன் .அப்பவும் நா குடிச்ச பாட்டில் ஒடஞ்சி அதுக்குள்ளே ரெண்டு எறும்பு வேற செத்துக் கெடந்தது .கடைக்காரர் பயந்து போயி இன்னொன்ன ப்ரீயா கொடுத்தார் (பரிசா கொடுத்தார் ?).

இப்பவெல்லாம் நம்ம பிறந்தநாளை யாராவது ஞாபகம் வச்சுகிட்டு போன் பண்ணினா கூட சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான் .சில பேர் ,இத நினைவு படுத்த வலைத்தளங்கள் இருக்காமே ,அங்கிருந்து சொல்லிடறாங்க .சில கடையில எழுதி வச்சுட்டு வந்தா ,ஞாபகமா கார்ட் அனுப்பிடறாங்க .வீட்டுல இருக்கவுங்க அடிச்சி பிடிச்சி நாள் முடியறதுக்குள்ள எப்படியோ ஞாபகம் வந்து ,திட்டு வாங்குறதுக்குள்ள வாழ்த்தி எஸ்கேப் ஆறாங்க .

இது என்னோட பிறந்தநாள் பிளாஷ்பேக் . ஆனா நா சொல்ல வந்த மேட்டர் வேற .இப்ப பாத்தா பிறந்தநாள் கொண்டடலைனா பிள்ளைகளுக்கே தாழ்வு மனப்பான்மை வந்திரும் போல .என்னோட அபார்ட்மென்டுல நாப்பத்தி எட்டு வீடு இருக்கு ,இதுல ஒரு இருவது குட்டிகளுக்கு வயசு பத்துக்கு கீழ .மாசத்துக்கு ஒரு பிறந்தநாள் பார்ட்டியாவது வருது .இதுல ஒருத்தர் வைக்கிறாங்கன்னே மத்தவங்களும் வைக்க வேண்டியதா இருக்கு .போன வருஷம் என்னோட மகனுக்கு பார்ட்டி வச்சப்ப ,வந்த பிள்ளைகள் கிட்ட ,"ஏதாவது கேம் விளையாடலாம் ,என்ன கேம் நீங்களே சொல்லுங்க "ன்னு சொன்னவுடனே , ஒரு குட்டி வேகமா சொல்லிச்சு ,"ஆண்ட்டி என்ன ரிடர்ன் கிப்ட்டுன்னு கெஸ் பண்ணலாம் ."இப்படி ஒரு விளையாட்டா ? ன்னு யோசிக்கிறவுங்களுக்கு எல்லாம் ,ரிடர்ன் கிப்ட் இல்லாம பார்ட்டி வச்சா ,பிள்ளைகளே பார்ட்டிய பாய்காட் பண்ணிடும்.

இது கூட பரவாயில்ல ,ஸ்கூல கூட படிக்கிறவங்களுக்கு கிப்ட் கொடுக்கறது ஒரு பேஷனாகி வருது .ஆளாளுக்கு என்னென்னவோ கொடுக்கறாங்க .ரெண்டு நட்ராஜ் பென்சில ,ஒரு ரப்பர் இத செல்லோ டேப்புல ஒட்டி கொடுக்கிறதுல இருந்து என்னென்னவோ .போன வாரம் என் பையன் வகுப்புல ஒரு பையன் கொடுத்தது என்ன தெரியுமா ?அவன் பேர் போட்ட சின்ன பேன்சி பேக் ஒண்ணு.வகுப்புல மொத்தம் நாப்பத்தி ஐஞ்சு பிள்ளைங்க ,ஒரு பை அம்பது ரூபாயின்னு வச்சா கூட ,கண்ண கட்டுது சாமி.


ஸ்கூல் இதெல்லாம் தடை பண்ணனும் .மூணாங் கிளாசுல இப்படி பெரிசா கொடுக்கிறவன் பணக்காரன் ,சின்னதா கொடுக்கிறவன் கஞ்சன் .கொடுக்காதவன் ஏழைன்னு இல்ல தப்பு பூவர் ன்னு ,பிள்ளைங்க அரிச்சுவடி படிச்சா .....எங்க போயி முடியும் ?

Saturday 3 July 2010

மாநாடு முடிஞ்சி போச்சு

மாநாடும் முடிஞ்சி போச்சி
வந்த சனம் கலஞ்சி போச்சி
ஊரெல்லாம் வெறிச்சுன்னு தான்
வெறுங்காடா மாறிப்போச்சு

வானம் முட்டும் பந்தலென்ன
கண்ண கட்டும் லைட்டும் என்ன
பாட்டென்ன வேட்டென்ன
பவுசான பேச்சென்ன

கும்மிக்கு ஒரு கூட்டம்
கோலாட்டம் ஒரு கூட்டம்
சொகுசாத்தான் பேசிப் போக
சொகம்கண்ட கூட்டமொண்ணு

எவரெவரோ வந்தாக
எங்கிருந்தோ வந்தாக
வட கண்ட எலி போல
விரும்பித் தான் வந்தாக

வடக்கிலிருந்து வந்தாக
தெக்கு சீமைக்காரர் வந்தாக
அட வெள்ளையும் சொள்ளையுமா
தொரமாரு வந்தாக

கொலுவிருக்கும் சாமியெல்லாம்
தெருவேறி வந்தாக
பட்டுத்துணி சரசரக்க
பவுசாதான் வந்தாக

பேர் சொல்ல வாழ்ந்தவுக
தெருவோட போகையில
கிலோமீட்டர் நீள மேடையிலே
ஒரு குடும்பமாக வந்தாக

பாடி பதவி பெற
புலவரெல்லாம் வந்தாக
எழுத கை கூசுதய்யா
எத எதையோ சொன்னாக

கொழஞ்சித்தான் பேசினாக
குனிஞ்சித்தான் நடந்தாக
தமிழ் வளக்க ஆசயினு
தர பாத்து சொன்னாக

மினிக்கித்தான் திரிஞ்சவுக
மிதிபட்டு வலிச்சாலும்
அம்மான்னு கத்தாம
அய்யான்னே அழுதாங்க

இவுக ஆடிய ஆட்டத்தில்
தமிழ் வளந்து போச்சுதய்யா
ராக்கெட்டுல போனாப்புல
சிலர் மெதப்பேறிப் போச்சுதய்யா

பட்டணத்து பலகையிலே
தமிழ் மணம் தான் வீசுதையா
கோயமுத்தூர் சீமையிலே
குப்ப தமிழ் பேசுதையா

தமிழ்த்தாயி மேலெல்லாம்
வெறுந் தகடு மின்னுதய்யா
அவ காதில தான் வச்ச பூவு
கொண்ட வர மணக்குதையா