Wednesday 30 June 2010

எச்சம்


மரங்கள் அடர்ந்த தெருவில்
பறவைகளின் பேரிரைச்சல் கேட்காவிட்டாலும்
அவற்றின் மெல்லிய கீச்சுக் குரல்களேனும்
கேட்டுக் கொண்டே தான் இருக்கும்

அவ்வழியே கடக்கும் போது
பலர் மீதில்லாவிட்டாலும்
சிலர் மீதேனும்
அவை மென்று கழித்ததன்
எச்சம் படக்கூடும்

அதை "சீ" என்று துடைத்துவிட்டே
கடப்பவர் பலரெனினும்
நின்று அப்பறவைகளின் மேல்
கல்லெறிந்து போகிறவர்களும் உண்டு
ஏதென்று அறியாமல் பறவைகளும்
பேரிரைச்சல் எழுப்பி அடங்கும்
கல்லெறிய முடியாமல் ....

Friday 11 June 2010

நம்பிக்கை

நேற்று வழக்கமான பரிசோதனைகளுக்காக ஒருவர் வந்தார் ,ஏகப்பட்ட இனிப்புகள் ,பழங்கள் +சந்தோஷத்துடன் .பல வருஷமாகவே சிகிச்சைக்கு வந்து கொண்டிருப்பவர் தான் .முதலில் வந்த போது மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார் .சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் நன்கு முன்னேறி இப்போது நன்றாக இருக்கிறார் .

"எனக்கு மொதல்ல எச்.ஐ.வி இருக்குன்னு சொன்னப்ப ,செத்துரலாம்ன்னு நெனச்சேன் .அப்புறம் ,அட்மிட் ஆகணும்ன்னு சொன்னப்ப ,அதுக்கெல்லாம் செலவாகுமே அது வீண் தானே ன்னு நெனைச்சேன் .நாம செத்தாவது போய்ட்டா இந்த செலவாவது மிச்சப்படுமே ன்னு கூட நெனச்சேன் .ஆனா இங்க வந்த பிறகு ,இங்க வேல பாக்குற எல்லாரும் தைரியம் சொன்னீங்க ,என்ன அன்பா நடத்துனீங்க.அதுக்கப்புறம் தான் உயிர் வாழணும்ன்னு நெனைப்பே வந்தது .அப்பக் கூட, என்னோட ரெண்டு பொண்ணுக்கும் கல்யாணம் பண்ற வரைக்கும் இருந்தா போதும்ன்னு நெனச்சேன்.போன மாசம் என் பெரிய பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிட்டேன் .அடுத்த மாசம் சின்ன பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் .இப்ப நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் .அதுக்கு தான் ஒங்களுக்கு ஸ்வீட் ,எங்க ஊரு மாம்பழம் எல்லாம் வாங்கிட்டு வந்தேன் ."

Thursday 3 June 2010

சொல்வதற்கு ஒன்றுமில்லை

பிரசவ கால சிறப்பு சிகிச்சைக்காக எங்களிடம் வந்த பெண் இவர் .எப்போதும் படபடவென்று பேசிக் கொண்டே இருப்பார் .சில வாரங்களுக்கு முன் குழந்தைக்கு ஹெச் .ஐ.வி இருக்கிறதா என்று கண்டறிய ரத்த பரிசோதனை செய்யப்பட்டது .இதில் குழந்தைக்கும் நோய் இருப்பது தெரியவந்தது .

நேற்று வயிற்றுபோக்கு இருப்பதாக சொல்லி குழந்தையை தூக்கிக்கொண்டு வந்திருந்தார் .பரிசோதனை முடிவுகளை இதுவரையிலும் இவரிடம் தெரிவிக்கவில்லை .குழந்தைகள் நல மருத்துவரிடம் குழந்தையை அனுப்பி வைத்தோம் .போகும் முன்னர் ,"டெஸ்ட் எடுத்தீங்களே ரிசல்ட் வந்துவிட்டதா ?"என்று கேட்ட போது நீங்கள் போய் வருவதற்குள் வாங்கி வைக்கிறோம் என்று சொல்லி அனுப்பி வைத்தோம் .

மருத்துவர் பார்த்துவிட்டு இன்னமும் சில பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும் என்று சொன்னார் .வேறு மருத்துவரிடம் அனுப்பும் படியும் பரிந்துரைத்திருந்தார் .அதற்கு முன் சொல்லிவிடலாம் என முடிவு செய்து அழைத்து உட்கார வைத்து மெதுவாக ,குழந்தைக்கும் நோய் இருக்கிறது என்று சொன்னோம் .ஆனால் மீண்டும் ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும் .அதிலும் பாசிடிவாக வந்துவிட்டால் நோய் இருப்பது உறுதியாகிவிடும் என்பதையும் சொன்னோம் .


ஆண்ட்டி ,ஆண்ட்டி என்று அதுவரையும் கூட ஓயாது பேசிக் கொண்டே இருந்தவர் ,அதன் பின் கொஞ்ச நேரம் எதுவுமே பேசவில்லை .அமைதியாகவே உட்கார்ந்திருந்தார் ."எங்க மாமியார் கூட வந்திருக்காங்க ஆண்ட்டி ,அவங்க கேப்பாங்க ரிசல்ட் என்ன ஆச்சுன்னு .ஹெச்.ஐ.வி இருக்குன்னு சொன்னா திரும்பவும் எதுக்கு கூட்டிட்டி வரணும்ன்னு கொழந்தைய டிரீட்மென்ட்டுக்கே கூட்டிட்டு வர விட மாட்டாங்க .டிரீட்மென்ட்டுக்கும் இங்க தானே வரணும் ?நா என்ன சொல்லட்டும் ஆண்ட்டி ?நோய் இல்லன்னு சொல்லிறவா ?அடுத்த தடவ டெஸ்ட் செஞ்ச தானே நிச்சயமா தெரியும் ?ஆனா அடுத்த தடவையும் பாசிட்டிவா வரலாம் தானே ?அப்ப நா என்ன சொல்லட்டும் ?அவங்க எல்லாரும் கேப்பாங்க ஆண்ட்டி?"

நாங்கள் சொன்னோம் ,ரிசல்ட் வரவில்லையென சொல்லி வையுங்கள் .உறுதி செய்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என ."நா அப்படியே சொல்லிடுறேன் .ஒங்க கிட்ட கேட்டா நீங்களும் அப்படியே சொல்லுங்க ."என்று சொல்லிவிட்டு சென்றார்.

பேச்சின் ஊடே அப்படியே உறைந்து போன அவர் முகமும் கண்ணீரை கட்டுபடுத்திக் கொண்டே அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்த அவர் தெளிவும் இன்னமும் மனதை வாட்டுகின்றன .மாமியாருக்கு
விஷயம் தெரிந்துவிடும் என்பதால் கூட அவர் அழாமல் இருந்திருக்கக்கூடும் .

Tuesday 1 June 2010

அறியாமல்

சில நாட்களுக்கு முன் அம்மா வீட்டிற்கு நான் சென்றிருந்த போது என் சிறு வயது முதல் எங்களிடம் பணி செய்த பெண் வந்தாள்.சின்ன வயதில் (என் திருமணம் வரை )எனக்கு வாராவாரம் தலை தேய்த்து விடுவாள் .இப்போதெல்லாம் இவள் வருவதே அபூர்வம் தான் .ஊர் கதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு ,அவள் தங்கையைப் பற்றி விசாரித்தேன் .(இவள் குடும்பம் மொத்தமும் எனக்கு அத்துப்பிடி .இவள் தங்கையும் எங்களிடம் சில காலம் பணி செய்திருக்கிறாள் )


"அதுக்குத்தாம்மா வந்தேன் .அதுக்கு ரொம்ப முடியல.செவ்வாக்கெழமையே போயிரும்ன்னு நெனைச்சோம் .எங்கெங்கியோ பாத்துட்டேன் .ஒண்ணும் சரியாகல .மொதல்ல கே அம் சி ல சேத்து வச்சிருந்தேன் .என்னென்னமோ டெஸ்ட் பண்ணினாங்க .ரத்தம் தான் கொறையா இருக்கு வேற ஒண்ணும் இல்லன்னு சொல்லிட்டாங்க .அப்புறம் வீட்டாண்ட டிரஸ்ட் ஆஸ்பத்திரில போயி காண்பிச்சேன் .அங்க இருக்கிற டாக்டர் எங்க ஆஸ்பத்திரிக்கு வா நல்லா ஆக்கிரலாம்னு சொன்னாரு .அவரு சொன்ன எடத்துல போயி சேத்தேன்.பதினாலாயிரம் ரூவா குடுத்தேம்மா .வெறும் குளுகோஸ் மட்டும் தான் போட்டாங்க .ரத்தம் வெளிய வாங்கிட்டு வந்து கொடுத்தேன் ,அத மூணு பாட்டில் ஏத்துனாங்க .வேற ஒண்ணுமே செய்யல .மருந்து கூட எழுதி தரலம்மா வீட்டுக்கு போகும் போது .ஏதாவது செஞ்சு காப்பாத்தி விடும்மா .ஒரு பொண்ண கட்டி கொடுத்தாச்சு .இன்னொரு பொண்ணு இருக்கே .கொஞ்சம் பாரும்மா ,"என்று வருத்தமாக சொன்னாள் .


வீட்டிற்கு சென்று ரிபோர்டை எல்லாம் எடுத்துக் கொண்டு வந்தாள் .ரத்தம் மிகவும் குறைவாக இருந்தது .ஏன் குறைகிறது என்ற காரணம் கண்டறியப்படாமலேயே இருந்தது .அடையார் கேன்சர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன் .அங்கு சென்று பார்த்துவிட்டு போன் செய்தாள் ."நல்லா பாத்தாங்கம்மா .எல்லா டெஸ்டும் எடுத்திருக்காங்க .நாளக்கி வரச் சொல்லியிருக்காங்க ரிபோர்டுக்கு "என்று சொன்னாள் .அப்புறம் போன் ஏதும் வரவில்லை .


ஒரு வாரம் முன்பு அம்மா சொன்னார்கள் அவள் தங்கைக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக .அதோடு அவளை ஜி ஹெச் இல் சேர்த்திருப்பதாகவும் .நேற்று கேட்ட போது ,"பாவம், இறந்து போனாள் "என்று சொன்னார்கள் .