Monday 10 May 2010

இறுதி வரை

போன வாரத்தில் ,நெடுநாட்களாக சிகிச்சையில் இருந்த ஒரு பெண் இறந்து போனார். எச்.ஐ.வியால் அல்ல ,கர்ப்பப்பை வாய் புற்று நோய் காரணமாக .கிட்டத்தட்ட ஒரு ஏழு மாதங்களுக்கு முன் இவருக்கு புற்று நோய் இருப்பதை கண்டறிந்தோம் .உடனே சிகிச்சைகள் ஆரம்பித்தும் ,நோய் குறையவில்லை ,பரவவும் ஆரம்பித்தது .சில மாதங்களிலேயே ,சிறுநீரகம் வரையும் பரவியது .சிறுநீரகங்கள் பழுதடைய ஆரம்பித்தன .இனி செய்வதற்கு ஒன்றுமில்லை என்று எல்லா நிபுணர்களும் கையை விரித்துவிட்டனர் .


சாதாரண இல்லத்தரசியாக ,இரண்டு குழந்தைகளுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார் .திடீரென ,தன் கணவருக்கும் தனக்கும் எச்.ஐ.வி இருப்பது தெரிந்தவுடன் சிகிச்சை எங்கு கிடைக்கும் என்பதை கண்டறிந்து வந்து சேர்ந்தார்.ஒருநாள் கூட மாத்திரை மருந்துகள் சாப்பிட மறந்ததில்லை .சிகிச்சைக்கு பணம் தேவைப் படும் என சில சிறப்பு பயிற்சிகள் பெற்று ஆசிரியராக பணிசெய்ய துவங்கினார். ஒவ்வொரு முறையும் எல்லாவற்றையும் நன்றாக தெளிவாக கேட்டுக் கொண்டே கிளம்புவார் .என் இரண்டு குழந்தைகள் கொஞ்சம் பெரியதாக வரும் நான் இருந்தால் போதும் என்று சொல்வார் .


இறுதியாக வந்த போது உடல்நலம் மிகவும் கெட்டிருந்தது .சரியாக சாப்பிட முடியவில்லை .உடல் வேறு வெகுவாக இளைத்திருந்தது .ஆனாலும் ,"நல்லா இருக்கேன் மேடம் .உங்கள பாத்துட்டேன்ல்ல என் ஒடம்பு நல்லாயிரும் .எல்லாரும் என்ன நல்லா பாத்துக்கிறீங்க .அங்க வீட்டிலேயும் எல்லாரும் என்ன நல்ல பாத்துக்குறாங்க .என் பசங்க கூட என்ன தொந்தரவு செய்யறதில்ல .பாப்பா அவளே துணிய துவைச்சுக்குரா .தம்பி கூட அவனே கெளம்பி ஸ்கூல் ,டியூஷன் எல்லாம் போய்க்கறான்.
எங்க நைனா என்ன இப்படி கவனிச்சுக்குவாருன்னு நா நெனைக்கவே இல்ல மேடம் .ஜூஸ் புழிஞ்சு கொடுக்கறாரு .ராத்திரி பகல் பக்கத்திலேயே இருந்து விசிறி விடுறாரு .என் பக்கத்திலே எல்லாரும் எப்பவும் இருக்காங்க மேடம் .கஷ்டத்திலேயும் நா கொடுத்து வச்சவ .நா கண்டிப்பா நல்லாயிருவேன் மேடம் ,"என்று சொல்லிக் கொண்டே வந்தவர் ,"எங்க நைனா கேக்குறாரு ஒன்னைய பொழைக்க வைக்க ஏதாவது வழி இருக்கான்னு கேட்டுட்டு வாடான்னு .சொல்லுங்க மேடம் ,நா நல்லாயிருவேன்ல்ல .எங்க நைனா கேக்கச் சொன்னாரு.நா முன்ன மாதிரி நல்லாயிருவேன்ல்ல ?"இதை அழுதபடியே அவர் கேட்டது இன்னமும் என் காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது .

Friday 7 May 2010

வீடு விட்டு வீடு வந்து

ரெண்டு மாசத்துக்கு முன்னால என்னோட ஹவுஸ் ஓனர்,நா இருக்கிற வீட்டுக்கு அவங்களே குடி வர்ற போறதால வீடு வேணும்ன்னு சொல்லிட்டாங்க .மூணு மாசம் டயம் வேற கொடுத்தாங்க .வீடோ பிள்ளைங்களுக்கு ஸ்கூலுக்கு ரொம்ப பக்கத்துல இருக்கு,விளையாட அப்பார்ட்மென்ட் உள்ளேயே நெறைய எடம் வேற .பெரிய பையன் பத்தாவது வேற ,சரி இப்பதைக்கு இங்கேயே வேற வீடு பாக்கலாம் (மொத்தமா நாப்பத்தி எட்டு வீடு இருக்கு )ன்னு முடிவு செஞ்சோம் .


வசதியா ரெண்டு வீடு வேற காலியாச்சு .ஏப்ரல் ,மே மாசத்துல நெறைய பேரு வீடு மாறுவாங்க போல .யார பாத்தாலும் அங்க வீடு காலியா இருக்கு இங்க வீடு காலியா இருக்குன்னு சொல்ல ஆரம்பிச்சாங்க .ஹிந்து ,அந்த டைம்ஸ் ,இந்த டைம்ஸ் ன்னு நேரிய பேப்பர வேற பாத்துகிட்டே இருந்தோம் .(ஹிந்துவில வர்ற வாடகைஎல்லாம் கொடுக்க எப்படி கட்டுபடி ஆகும்ன்னே புரியல ).அதுக்குள்ளே இங்கேயே ஒரு வீட பேசி முடிச்சிட்டோம் .


மே ஒண்ணாம் தேதி ரெண்டாம் தேதி தொடர்ந்து ரெண்டு நாள் விடுமுறையா வரதால அன்னிக்கே வீட மாத்திரலாம்ன்னும் முடிவு செஞ்சோம் .நா இருக்கிற வீடு கிரவுண்ட் ப்ளோர் .இது எதிர் ப்ளாக் ,first ப்ளோர் .பாக்கேர்ஸ் அண்டு மூவர்சுக்கு போன்ல கேட்டா ஐயாயிரம் பத்தாயிரம்னு சாதரணமா சொன்னாங்க .சரி இது சரியா வராதுன்னு ,வாட்ச்மேன் அப்புறம் அவருக்கு தெரிஞ்ச நாலஞ்சு பேர வச்சி மாத்திரலாம்ன்னு ஏற்பாடு ஆச்சு .ஏதோ கொஞ்சம் சாமான் ,ஒரு சோபா ,ஒரு கட்டில் ,பிரிட்ஜ் ன்னு நெனைச்சுக்கிட்டு இருக்கேன் ,பாத்தா தோண்ட தோண்ட சாமானா வந்துகிட்டே இருக்கு .வெள்ளம் வரப்ப எல்லா இடத்தையும் ஒடச்சிகிட்டு தண்ணி வருமே அத மாதிரி .வந்துக்கிட்டே இருக்கு .இதுல கண்ட கான்பிரன்ஸ்லேயும் கொடுத்த பை வேற ஒரே மாதிரி ,பத்து பதினஞ்சாவது இருக்கும் . நாலு மணி நேரம் முழுசா ஆச்சு சாமான எடுத்து முடிக்க .


புது வீட்டுல போயி கொஞ்சம் கொஞ்சமா அடுக்க ஆரம்பிக்கலாம்ன்னு போனா ,அது இப்ப ஒரு குப்ப மேடு மாதிரி இருக்குது .அத பாத்தவுடனே இந்த வீடு எனக்கு பிடிக்கலன்னு தோணிச்சு .பழைய ஹவுஸ் ஓனர் மேல எக்கச்சக்கமா கோவம் வந்துச்சு .எங்க ஆரம்பிக்கிறதுன்னே தெரியல.தல கால் புரியாம ஒரு குப்ப மேட்டுல நிக்கிற மாதிரி இருக்குது .கால் வலி வேற .இதுக்குள்ள சாப்பாட வச்சி சாப்பிட கூட எடமில்லாம குப்பை எல்லா எடத்திலேயும் .அதிலேயே நடுவில ஒரு சின்ன எடத்த கிளியர் பண்ணி சாப்பிட்டு முடிச்சாச்சு .


கொஞ்சம் நிதானமா யோசிச்சப்ப ,சிக்கல்ல நூல் நுனிய கண்டுபிடிச்ச மாதிரி, ஒவ்வொருத்தார் துணியா எடுத்து அடுக்க ஆரம்பிச்சா சரியா இருக்கும்ன்னு தோணிச்சு . அத ஆரம்பிச்சதும் கொஞ்சம் கொஞ்சமா தெளிவாக ஆரம்பிச்சுது .துணிய முடிச்சாச்சு .அடுத்தது புக் .ஒரு சின்ன லைப்ரரி அளவுக்கு புக் இருந்துது .அத எல்லாத்தையும் சாக்கில அள்ளி நடு ஹாலில கொட்டியிருந்தாங்க .அத பிரிச்சு எடுக்கறதுக்குள்ள ....சொல்லவே முடியாது அத்தன கஷ்டம்.மேலெல்லாம் தூசி ... (புக்கெல்லாம் லைப்ரரியில எடுத்து படிக்கிறதோட நிப்பாட்டிக்கனும்ன்னு நெனைக்கிறேன் )இத ஒதுங்க வச்சி ஹால் கண்ணுக்கு தெரியவே ரெண்டு மணிநேரம் ஆச்சு .


கிட்சனுக்குள்ள போனா சின்க் ஒழுகுது .எல்லா பக்கமும் மேடை சின்னதா தெரியுது .எந்த பக்கம் அடுப்ப வைக்கிறதுன்னு மூளைய கசக்கி யோசிச்சு வைக்க வேண்டியதா இருந்துது (அதுக்கப்புறம் அத மறுபடியும் மாத்தியாச்சு ) .அத எனக்கு வேல செய்யற பொண்ணே முழுசா அடுக்கிட்டா (அவளுக்கு வேண்டாம்ன்னு தோணினதை எல்லாம் அவளே வெளியே போட்டுட்டா ).


இப்படி ஒண்ணொண்ணா சரி பண்ணிக்கிட்டே வந்தோம் .ஒரு வழியா எல்லாம் கிட்டத்தட்ட சரி பண்ணியாச்சு .இன்னமும் கொஞ்சம் சாமான் வெளிய கெடக்குது .அதில பாதி வெளிய போட வேண்டியது தான் (ஏன் இன்னமும் போடலைன்னு கேக்காதீங்க ...பாசம் தான் ).ஆனாலும் சொந்த வீடு இல்லாம இருக்குறது ரொம்ப கஷ்டம் .ஒரு தடவ மாறினதே இத்தன ரோதனையா போச்சு மூணு வருஷத்துக்கு ஒரு முறை வருஷத்துக்கு ஒரு முறைன்னு ஊர் ஊரா போறவங்க எப்படி சமாளிக்கிறாங்களோ ? ..அடுத்த முறை வீடு மாறினா அது சொந்த வீட்டுக்கா தான் இருக்கணும் .....