Tuesday 30 March 2010

மடமை

கர்ப்பமாகயிருந்த போது சிகிச்சைக்கு வந்தார் இந்த பெண் .பரிசோதனையின் போது கர்ப்பபையில் ஒரு கட்டி இருப்பது தெரிய வந்தது .பல சிக்கல்களுக்கு இடையே தீவிர கவனிப்பின் பின் பிரசவம் ஆனது .சிக்கலான பிரசவம் தான் .இது நடந்து பத்து மாதங்கள் இப்போது .இந்த பத்து மாதங்களாக சரியாக சிகிச்சைக்கு வரவில்லை .திடீரென்று போன வாரத்தில் வந்தார் .மூன்று மாத கர்ப்பத்தோடு .

சிசேரியன் செய்தே முதல் குழந்தையை பிரசவித்திருக்கிறோம் .அதுவும் பத்து மாதங்களுக்கு முன்னர் தான் .கர்ப்பப்பையில் கட்டி வேறு .எதை கேட்டாலும் ஒரே அழுகை .கோபம் தான் வந்தது எங்களுக்கு .சரி ஸ்கேனும் மற்ற பரிசோதனைகளும் செய்து பார்க்கலாம் என்று பேசிக் கொண்டிருக்கும் போதே ,கணவனும் மனைவியும் சொன்னார்கள் ,"ஆம்பிள பிள்ளையா இருந்தா வச்சிக்கிறோம் ,பொண்ணுன்னா வேண்டாம் ."

"வைத்தியம் பாக்கிற டாக்டர் ,பிரசவம் பாக்கிற டாக்டர் ,இங்க வந்தா உங்கள நோகாம கவனிக்கிற சிஸ்டர் எல்லாரும் பொம்பளைங்க ,ஆனா உங்களுக்கு ஆம்பள கொழந்த வேணும் ?" என்று நன்றாக திட்டி அனுப்பி வைத்தோம் .

Thursday 25 March 2010

வேர் தேடும் கிளைகள்


விதையுள் முளையாக
ஒன்றாக கிடந்த வேரும் கிளையும்
வானோக்கி ஒன்றும்
மண்நோக்கி ஒன்றுமாய்
வெவ்வேறாய் வளர்ந்து போயின .

பின்னாளில் ,
கிளை விண்தொட்ட பின்னும்
வேர் மண் தூர்த்த பின்னும்
ஒன்றாய் கிடந்தும் காணாததை எண்ணி,
கிளை கீழ் வர முடியாமலும்
வேர் மேல் எழ முடியாமலும்
அயர்ந்தும் போயின .

அதிசயமாய் ,
கிளை தொட்டு வேரொன்று விழுதாக கிளம்பி
மண் பிளந்து வேர் தேடி செல்லும்.
மண்ணடியில்,
வேரும் ,கிளையின் வேரும்
எவரும் காணாமல் நீருருஞ்சிக் கொண்டே
பழங்கதைகள் பேசிக் கிடக்கக் கூடும் ....

Friday 19 March 2010

மீண்டும் தெருவோரத்தில் கண்ணகி


சிங்காரச் சென்னையின் சாலைகளை அழகு படுத்துவதற்காக முக்கிய சாலைகளில் ஓவியங்கள் வரையப்படுவது தெரிந்ததே .அதே போல் நமது அரசுக்கு தமிழ் மீதும் தமிழர் பண்பாட்டின் மீதும் உள்ள அளவிட முடியாத பற்றும் தெரிந்ததே :)

இரண்டு வாரங்களாக கிரீன்வேஸ் சாலையில் இந்த ஓவிய வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .இதில்ஒரு பக்கம் ,அழகிய இயற்கை காட்சிகள் வரைந்து முடித்தாயிற்று .இன்னொரு பக்கம் ,சிலப்பதிகாரக் காட்சிகளை வரைந்து கொண்டிருக்கிறார்கள் .இதுவரையிலும் சரிதான் .

கண்ணகி சிலையை ஒரு அரசு வைத்ததும் ,இன்னொரு அரசு எடுத்ததும் ,மீண்டும் ஒரு அரசு வைத்ததும் நாம் அறிந்ததே .இதற்காக தமிழர் பண்பாட்டு சின்னம் கண்ணகி என்றும் அதை அகற்றியது தமிழருக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று முழங்கியதும் கூட தெரிந்த விஷயம் தான் .(இந்த சிலையை பார்க்கும் போதெல்லாம் எனக்கு நினைவுக்கு வருவது ,என் அம்மா சொன்னது ,"கண்ணகிய அவ புருஷனும் தெருவில நிப்பாட்டுனான் .இவங்களும் தெருவில நிப்பாட்டிட்டாங்க .")

இப்போது தெருவோரத்தில் சுவற்றில் கண்ணகியை வரைந்து கொண்டிருக்கிறார்கள் .சிலப்பதிகாரத்தை மக்களுக்கு நினைவுபடுத்தும் இந்த முயற்சி பாராட்டப்படவேண்டியதே .ஆனால் ...............நமது சாலையோர சுவர்கள் பொது கழிப்பிடங்களாக பயன்படுவது தெரிந்த விஷயம் ....இந்நிலையில் சுவற்றில் கண்ணகியை வரைவது சரியா ?இதனால் தமிழர் பண்பாட்டு சின்னம் அடையக் கூடிய அவமானத்திற்கு யார் பொறுப்பு ?

Wednesday 17 March 2010

வம்பு

இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு நோயாளியின் உறவினர் என்று சொல்லி சிலர் வந்தார்கள் .வேறு மருத்துவமனையில் இருக்கும் அவரை இங்கே மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் .அதோடு நோயாளி சிறிது மனநிலை பாதித்த நிலையில் இருப்பதையும் சொன்னார்கள் .

சுமார் ஐந்து மணியளவில் நோயாளியை அழைத்து வந்தார்கள் .வந்தவர் செய்த ஆர்ப்பாட்டம் கொஞ்சமில்லை .உள்ளே வர மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்தவரை ஒரு வழியாக வார்டு வரை இழுத்தே வந்துவிட்டார்கள் .இதில் கொஞ்சம் சமாதமான அவர் ,திடீரென்று கர்ணன் கதையை சொல்லத் தொடங்கினார் .செடேட் செய்ய ஊசிகள் போட்ட பின் தூங்கவில்லை என்றாலும், அமைதியானார் .சிகிச்சைக்கும் ரத்தம் எடுப்பதற்கும் ஒத்துழைத்தார் .

அடுத்தும் சற்று அமைதியாகவே தான் இருந்தார் .நேற்று என்னுடன் பணிபுரியும் இன்னொரு மருத்துவர் ,ரொம்ப அழகு ,வயது அறுபத்தி நாலு .இவர் வழக்கம் போல் எல்லா நோயாளிகளை பார்த்து விட்டு இவரையும் பார்க்க போன போது ,உடனிருந்த நர்சிடம் ,"நீங்க வெளிய இருங்க ,இவங்க என் அத்த பொண்ணு .இவங்களுக்கும் எனக்கும் கணக்கு இருக்கு ,அத நா பேச வேண்டியிருக்கு .அதனால எங்கள தனியா விடுங்க ,"என்று ஒரே போடாக போட்டிருக்கிறார் .பயந்து போன அந்த மருத்துவர் இந்த நொடி வரை அவர் அறை பக்கமே போகமால் நடுங்கிப் போயிருக்கிறார் . இதுவும் ஒரு வகை occupational hazard போலும்.....

Monday 15 March 2010

சட்டசபை திறப்பு விழா

சனிக்கிழமை அன்று நடந்து முடிந்த கோலாகல விழாவில் என் மனதில் பதிந்த சில நிகழ்வுகள் ...


1.தமிழக முதல்வர் கைத்தாங்கலாக என்றாலும் மேடைக்கு நடந்தே வந்தது .
2.உள்ளே சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேட்டரி கார் .
3.சோனியா காந்தி கட்டியிருந்த சிம்பிளான அழகான ஒரியா ? காட்டன் புடவை
4.மேடையிலும் பார்வையாளர் தடுப்புகளிலும் நிரம்ப தெரிந்த மங்கலமான மஞ்சள்
5.முதல்வர் "இந்திராவின் மருமகளே ,இந்தியாவின் திருமகளே" என்று அடுக்கு ? மொழியில் பாராட்டிக் கொண்டிருக்கும் போது ,அதை கவனியாமல் சோனியா கையிலிருந்த பேப்பர் கட்டில் (முதல்வர் உரையின் மொழிபெயர்ப்பு ?) ஏதோ தேடிக் கொண்டிருந்தார் .இதை மீண்டும் மீண்டும் கேட்டு அவருக்கும் அலுத்து விட்டதோ என்னவோ ?
6.எனது மருத்துவக் கல்லூரி ஆசிரியர் டாக்டர் .சுதா சேஷய்யன் .சட்ட சபை உறுப்பினர்கள் யாரையாவது தொகுக்க சொல்லியிருக்கலாம் ?
7.விழா மலரை சோனியா சபாநாயகருக்கு வழங்குவார் என்று இருமுறை இரு மொழிகளில் சொல்லியும் சோனியா அதை வாங்கி சட்டென்று பின்னால் கொடுத்தது .
8.எதிர்கட்சிகள் என்று எவரும் பெரிதாக தென்படாதது .அம்மா ஒருவேளை திடீர் பிரசன்னமாகியிருந்தால் விழா நிஜத்தில் களை கட்டியிருக்கும்
9.சோனியா காந்தியின் பொருத்தமான பேச்சு ,நிகழ்வுக்கு பொருத்தமாக இருந்தது .
10.முதல்வர் ஏனோ புலம்பித் தள்ளினார் .கூட்டணியை உடைக்க சதி செய்கிறார்கள் என்று ஒரே புலம்பல் + சுய பிரச்சாரம் அவர் பேச்சில் .
11.சோனியாவும் பிரதமரும் மறக்காமல் காங்கிரஸ் முதல்வர்களையும் எம்.ஜி ஆரையும் நினைவு கூர்ந்தது .
12.பிரதமர் ,சி.சுப்பிரமணியம் நாட்டின் பசியைப் போக்க பாடுபட்டார் ,எம்.ஜி.ஆர் ஏழைகளின் பசியைப் போக்க சத்துணவு திட்டம் கொண்டுவந்தார் ,கருணாநிதி இப்படியொரு பிரமாண்ட சட்டசபையை கட்டியிருக்கிறார் என்று சொன்னார் .அவர்கள் மக்கள் தேவைகளுக்காக பாடுபட்டார்கள் ,இவர் காசை கொட்டி கட்டடம் கட்டிக் கொண்டிருக்கிறார் என்று குத்தி காட்டுகிறாரோ என்று தோன்றியது .
13.அ.தி.மு.க மேடை போல் பிற தலைவர்கள் கீழேயே அமர்ந்திருந்தது .
14 . எல்லாவற்றையும் விட ,குறிப்புகளை மட்டுமே கையில் வைத்துக் கொண்டு அசத்தலாக பேசக் கூடிய தமிழக முதல்வர் ,முழு பேச்சையும் எழுதிக் கொண்டு வந்து வாசித்தது .வயதாகி விட்டதையா ,வயதாகி விட்டது :(


இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் ,புதிய சட்டசபையை கட்டியதை பாராட்டி விருது வழங்கும் விழாக்கள் எப்போது ஆரம்பம் ?

Saturday 13 March 2010

ஏவாளின் மகள்

முட்டாளாகவே இருந்திருக்கிறேன் நான்
மதியத்தில் உறங்கப் போய் ,சில்லிரவில்
ஆறுதலற்ற சிலீர் நிலவடியில் கண்விழிக்க .
முட்டாள் நான் ,
என் ரோஜாவை பூக்கும் முன்னமே கிள்ளிப் போட..
முட்டாள் நான் ,
லில்லியை மலரும் முன் ஒடித்து போட ..

என் தோட்டம் படர்ந்த எல்லைகளை
நான் பராமரிக்கவில்லை .
கைவிடப்பட்டு வாடிப்போய்
என்றும் அழாதது போல் இன்று அழுகிறேன்.
ஐயோ , நான் உறங்கப் போகையில் கோடையாய் இருந்தது
விழித்து பார்க்கையிலோ கடும்பனியாய் குளிர்கிறது !

வரப்போகும் வசந்தம் பற்றி
உங்கள் விருப்பம் போல் பேசுங்கள் ..
இதமாய் கதிர் காயும் இனிய நாளையைப் பற்றியும்..
இனி புன்னகையும் இல்லாமல் ,
இனி கீதங்களும் இல்லாமல்,
என் நம்பிக்கையும் எல்லாமும் முழுவதாய் உரியப்பட்டு
தனியே இருக்கிறோம் , என் துயர்களும் நானும்


A DAUGHTER OF EVE
by: Christina Rossetti (1830-1894)


A fool I was to sleep at noon,
And wake when night is chilly
Beneath the comfortless cold moon;
A fool to pluck my rose too soon,
A fool to snap my lily.

My garden-plot I have not kept;
Faded and all-forsaken,
I weep as I have never wept:
Oh it was summer when I slept,
It's winter now I waken.

Talk what you please of future spring
And sun-warm'd sweet to-morrow:--
Stripp'd bare of hope and everything,
No more to laugh, no more to sing,
I sit alone with sorrow.

Wednesday 10 March 2010

தி லாஸ்ட் சிம்பல் (The lost symbol)

போன வாரத்தில் தான் "தி லாஸ்ட் சிம்பல் " படித்து முடித்தேன் .முந்தைய கதைகள் போல் இல்லை என்றாலும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் இருந்தது .அதில் சொல்லப்பட்டிருக்கும் இடங்களும் சடங்குகளும் உண்மையே என்று ஆரம்பத்திலேயே கூறப்பட்டிருப்பது இன்னமும் ஆச்சரியத்தை கூட்டியது .இதை எழுத ஐந்து வருடங்கள் ஆனது ஆச்சரியமில்லை தான்.


நேற்று இரவு டிஸ்கவரியில் வந்த ஒரு நிகழ்ச்சி .தாஜ் மகாலைப் பற்றியது .நிஜமாகவே ஷா ஜகானின் காதல் மனைவிக்காக மட்டும் கட்டப்பட்டதா தாஜ் மகால் என்பதை ஆராய்ச்சி செய்தார்கள் .கொஞ்சம் மேலோட்டமாகவே இருந்தது .இவர்கள் சொல்ல வந்தது என்னவென்றால் ,ஷா ஜகான் ,குர்ஆனில் சொல்லப்பட்டிருக்கும் சொர்க்கத்தை அச்செடுத்தாற்போல் தாஜ் மகாலைக் கட்டியிருக்கிறார் என்பதே .இதற்கு சான்றாக தாஜ் மகாலில் எழுதப்பட்டிருக்கும் வாசகங்கள் உள்ளனவாம் .ஆனால் எதற்காக இப்படி கட்டினார் என்பதையும் கொஞ்சம் பேசினார்கள் .அதற்கு விடை ஷா ஜகான் தனக்கு கொடுத்துக் கொண்ட பட்டங்களில் இருக்கிறதாம் .இந்த பட்டங்கள் கடவுளுக்கு நிகரானவர் என்பதாக பொருள் தருபவை (ஆனால் பல மன்னர்களின் பட்டங்கள் இப்படி தானே இருக்கின்றன ).அதனால் வழக்கமான கல்லறை தோட்டங்கள் போல் அல்லாமல் தாஜ் மகால் அமைந்திருக்கிறது என்றார்கள் .இறுதியாக அலிகார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் ,ஷா ஜஹான் மிகவும் நல்ல அரசர் என்று கூறினார் .இன்னொரு வெளிநாட்டு பேராசிரியரோ ,அவர் ஆடம்பர மோகம் கொண்டு அகங்காரம் கொண்டவர் என்று சொன்னார் .இப்படியாக இரு கருத்துகளை சொல்லி நிகழ்ச்சியை முடித்தார்கள் .

இந்த நிகழ்ச்சியைப் பார்த்தவுடன் எனக்கு நினைவுக்கு வந்தது ,"தி லாஸ்ட் சிம்பல் "புத்தகம் தான் .டான் பிரவுன் தனது படைப்புகளில் சரித்திரத்தை அழகாக கலந்து கதை சொல்கிறார் . இதில் நிஜமான இடங்கள் வருவது பெரும் ஈர்ப்பாக இருக்கிறது ."டா வின்சி கோட்" வெளிவந்த போது சுஜாதா தமிழில் "பொன்னியின்
செல்வனுக்கு " பிறகு யாருமே சரித்திரம் புனைவுகளோடு கலந்த தளத்தில் கதை சொல்ல முற்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தார் .ஏன் ?

Tuesday 9 March 2010

பிறந்தநாள்

ஒரு அம்மா மகன் .மாதந்தோறும் சிகிச்சைக்கு சரியாக வரும் இவர் தன் மகனை மட்டும் சரியாக அழைத்து வருவதில்லை .அதிகம் வற்புறுத்தி சொன்னால் வருடம் ஒரு முறை அழைத்து வருவார் .சரியான சிகிச்சையும் கொடுப்பதில்லை .எந்த ஒரு பரீட்சையும் அவனுக்கு செய்வதில்லை .இது உதாசீனம் என்றாலும் மகனை அழைத்து வந்தால் அவனுக்கு உண்மை தெரிந்து விடுமோ என்ற பயமே முக்கிய காரணம் .


ஒரு வழியாக போன வாரத்தில் இவனை அழைத்து வந்தார் .ரத்த சோதனைக்காக ,வயதை கேட்கையில் (பார்மில் நிரப்ப வேண்டும் ) ,பதிமூணு முடிஞ்சி பதினாலு ஆரம்பிக்க போகுது என்று சொன்னான் அவன் .சொல்வதைப் பார்த்தால் பிறந்தநாள் நெருக்கத்தில் இருக்குமோ என ,உனக்கு என்னைக்கு பிறந்தநாள் ?என்று கேட்டேன் ."எனக்கு தெரியாது" என்றான்."எங்கம்மா சொன்னதே இல்ல . இதுவரைக்கும் எனக்கு கருத்து தெரிஞ்சு எனக்கு எங்கம்மா பெறந்தநாள் கொண்டாடுனதே இல்ல .நா கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாங்க .நா பெறந்தப்ப கொடுத்த ஆஸ்பத்திரி சீட்டெல்லாம் வீட்டில இருக்கு .அதையும் என்னைய பாக்க விடமாட்டேங்குறாங்க .அவங்களும் பாத்து சொல்ல மாட்டேங்குறாங்க .டேய், அத தொடாதடான்னு சத்தம் போடுறாங்க . ஆஸ்பத்திருக்கு என்னைய கூட்டிட்டு போங்கன்னு சொல்றேன் ,அதெல்லாம் முடியாது ,பக்கத்திலே பாத்துக்கிரலாம் ன்னு சொல்றாங்க .பக்கத்துல பாத்து ஊசி போட்டா எனக்கு சீக்கிரம் நல்லாவே ஆக மாட்டேங்குது ,"என்றான் மிக வருத்தமாய் .இத்தனையையும் அவன் அம்மா அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தார் எந்த ஒரு சலனமும் இல்லாமல் .


நோய் இருப்பது குழந்தைகளுக்கு தெரிந்து விடுமோ என்ற பயம் பெற்றோரை பலவாறாக ஆட்டி வைக்கிறது .ஆனால் அதற்கென மருத்துவமனைக்கு வராமல் ஒளித்து வைப்பது எதற்கும் தீர்வில்லை என்பதை இவர்கள் உணர மறுக்கிறார்கள் .சற்று விவரம் தெரிந்த குழந்தைகள் தங்களை சுற்றி ஏதோ மர்மம் இருப்பதாக குழம்பிப் போகிறார்கள் .இப்படி அவர்களின் மருத்துவ அறிக்கைகளை ஒளித்து வைப்பது, இன்னமும் அவர்களின் குழப்பத்தை அதிகப்படுத்துகின்றது .குழந்தையிடம் உரிய காலத்தில் பக்குவமாக உண்மையை எடுத்து சொல்வது மட்டுமே இதற்கு உறுதியான தீர்வாக முடியும் .

Monday 8 March 2010

அனுபவம் புதுமை

ரெண்டு வருஷத்துக்கு முன்னால சிம்லா போயிருந்தப்ப இது நடந்தது .நாங்க அங்க இருந்தப்ப தான் மம்மி பார்ட் த்ரீன்னு நெனைக்கிறேன் ,ரிலீஸ் ஆயிருந்துது .என் கணவரும் என் பிள்ளைகளும் ஒடனே படத்த பாக்கணும் முடிவு பண்ணிட்டாங்க .என் கணவரோட நண்பர் ஒருத்தர் சிம்லாவில இருந்தார் .அவர் நானும் வரேன்ன்னு டிக்கட்டுக்கும் ஏற்பாடு பண்ணிட்டாரு .நைட் ஷோ .இது ஹிந்தி டப்பிங்கா இருக்கப் போகுது அத விசாரிச்சிக்கோங்கன்னு சொன்னா யாரும் கண்டுக்கல .


ராத்திரி படத்துக்கு கெளம்பியாச்சு .ஊருக்கு அடியில தியேட்டர் .நிசமா தான் .ஊருக்கு அடியில த்ரில்லர் படத்துல சேஸ் சீன்ல வர்ற அண்டர்கிரவுண்ட் டனல் மாதிரி ஒரு வழியில போனோம் .ரொம்ப தூரமா இருந்துது .நடந்து தான் வர்ற முடியுமாம் .டனல் ஏதோ பிரிட்டிஷ் காலத்துல கட்டினதாம் .அங்கங்க மேலேயிருந்து தண்ணி சொட்டு சொட்டா விழுந்துகிட்டு இருந்துது .அப்பப்ப ஒண்ணு ரெண்டு எலி வேற .

இத கடந்து போனா தியேட்டர் ?ஆள் அரவமே இல்லாத ஒரு எடம் .வெளிய ஒரு பிட்டு படம் போஸ்டர் .பக்குன்னு இருந்துச்சு .சரி உள்ளூர் காரர் தான் ஒருத்தர் தொணைக்கு இருக்காரேன்னு தைரியமா போய்ட்டோம் .ஷோ நேரம் ஆகிடுச்சி .ஒரு ஆளு கூட இல்ல .வாசலில ஒரு லைட்டு .கதவு தெறந்திருந்திச்சி. தெறக்காத ஒரு பாப்கார்ன் மிஷீன் .அவ்வளவு தான் .சரியான எடத்துக்கு தான் வந்திருக்கோம்ன்னு நண்பர் சொன்னாரு .திரும்பி போயிடலாம்ன்னு சொன்னேன் .வசதியா சத்தியத்துல போயி படத்த பாத்துக்கலாம்ன்னு சொல்லி பாத்தேன் .இல்ல இவ்வளவு தூரம் வந்துட்டு ,என்னன்னு விசரிக்கலாம்ன்னு கேட்டா ,மொத்தம் அஞ்சு டிக்கட் தான் வித்திற்கு (நாங்க அஞ்சு பேர் தான் ).இன்னும் கொஞ்ச பேர் வந்தா படம் போடுவோம் இல்லைன்னா ஷோ கேன்சல்ன்னு சொல்லிட்டாங்க .


கொஞ்ச நேரம் கழிச்சு ஒருத்தர் வந்து உள்ள போய் உக்காந்துக்கோங்கன்னு சொன்னார் .நா இன்னும் கொஞ்ச பேர் வந்த பின்னாடி போலாம்ன்னு சொன்னேன் .யாரு கேக்கப் போறா ?உள்ள போயாச்சு .ஹோன்னு இருந்துச்சி .நாங்க அஞ்சு பேர் மட்டும் .கொஞ்ச நேரம் கழிச்சு இன்னும் ரெண்டு பேர் வந்தாங்க .படம் பாத்தா ஹிந்தி டப்பிங் .ஒரு மண்ணும் புரியல .ஷோவ கேன்சல் பண்ணியிருந்தா கூட பரவாயில்லைன்னு தோணிச்சு .கிழிஞ்ச சீட் .காலுக்கடியில அங்கேயும் இங்கேயும் ஓடிக்கிட்டிருந்த எலி .ரொம்ப கிலியாவே இருந்துது .நல்லவேளை இன்டர்வெல் இல்லாம படத்த போட்டாங்க .பாஸ்ட் பார்வர்ட் பண்ணியிருந்தா கூட சந்தோஷப்பபட்டிருப்பேன்.
இப்படியா திகில்லாவும் தில்லாவும் படம் பாத்து முடிச்சோம் .

தெரியாத ஊருல படம் பாக்கப் போகக் கூடாதுன்னு நல்லா புரிஞ்சுது .

Thursday 4 March 2010

நித்தியானந்தா

கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தையே புரட்டி போட்ட ஸ்கூப் நியூஸ் இதுதான் .ஆனால் இத்தனை முக்கியத்துவம் தர இந்த செய்தியில் என்ன இருக்கிறது ?அப்படி என்ன வேறு எவரும் வேறு எந்த சாமியார்களும் செய்யாததை இவர் செய்து விட்டார் என்று இத்தனை பிளாஷ் நியூஸ் ?இத்தனை பதிவுகள் ?இத்தனை சாடல்கள் ?

ஆனால் நித்தியானந்தாவிற்கு இது நிச்சயம் நல்ல விளம்பரம் தான் .இதற்கு முன் இவரை அறியாத பலருக்கும் இப்போது அவர் அறிமுகமானவராகி இருக்கிறார் .ஒருவேளை அதற்காக அவரே இந்த சிடியை பதிவு செய்திருக்கக் கூடும் ?சன் டிவியில் நல்ல விலைக்குக் கூட விற்றிருக்கலாம் .இல்லை இவருக்கும் ஆளும் வர்க்கத்திற்கும் ஏதும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையோ என்னவோ இப்படியாக பழி? வாங்கியிருக்கிறார்கள் .

கொஞ்ச நாளில் எல்லா பரபரப்பு செய்திகளைப் போல இதுவும் கடந்து போகும் ....


Monday 1 March 2010

உயிர்த்தெழுதல்

சுடர் அறிவில்லை வார்த்தைகளில்லை கண்ணீரில்லை
கல்லாய் கிடக்கிறது என் இதயம் என்னுள்
நம்பிக்கை அச்சம் மறந்து மரத்து போனதாய்
இருபுறமும் பாருங்கள்,நான் தனியாகவே வசிக்கிறேன் .
துயரில் மங்கிப் போன என் பார்வையை உயர்த்தையில்
அழியாத குன்றுகள் எவற்றையும் நான் காணவில்லை .
உதிர்ந்து கொண்டிருக்கும் இலையில் என் வாழ்க்கை
ஏசுவே ,துரிதப்படுத்துங்கள் என்னை ....

வாடிக் கொண்டிருக்கும் இலை போல என் வாழ்க்கை
வெறும் உமிக்காய் சுருங்கியது என் அறுவடை
நிஜத்தில் என் வாழ்க்கை சுருக்கமாய் வெற்றிடமாய்
தரிசான மாலை போலும் சோர்வானதாய் ....
உறைந்து போனது போல் என் வாழ்க்கை
எந்த மொட்டும் பசுமையும் நான் காணவில்லை
ஆனால் வசந்தத்தின் சாறு அதில் நிச்சயம் ஏறும்
ஏசுவே ,என்னில் எழுங்கள் ....

உடைந்த கிண்ணம் போல் என் வாழ்க்கை
என் ஆன்மாவிற்கு துளி நீரும் கொள்ள முடியாத
உடைந்த கிண்ணம் போல் என் வாழ்க்கை
தவிக்கும் குளிரில் கதகதப்பற்றதாய் ....
அழிந்து விட்ட அதை நெருப்பில் வீசுங்கள்
உருக்கி வார்த்தெடுங்கள் மீண்டும் மீண்டும்
என் அரசருக்குரியதாய் அது ஆகும் மட்டும் ,
ஏசுவே ,என்னில் பருகுங்கள் ....



A BETTER RESURRECTION
by: Christina Rossetti (1830-1894)


HAVE no wit, no words, no tears;
My heart within me like a stone
Is numb'd too much for hopes or fears;
Look right, look left, I dwell alone;
I lift mine eyes, but dimm'd with grief
No everlasting hills I see;
My life is in the falling leaf:
O Jesus, quicken me.

My life is like a faded leaf,
My harvest dwindled to a husk:
Truly my life is void and brief
And tedious in the barren dusk;
My life is like a frozen thing,
No bud nor greenness can I see:
Yet rise it shall--the sap of Spring;
O Jesus, rise in me.

My life is like a broken bowl,
A broken bowl that cannot hold
One drop of water for my soul
Or cordial in the searching cold;
Cast in the fire the perish'd thing;
Melt and remould it, till it be
A royal cup for Him, my King:
O Jesus, drink of me.