Thursday 14 May 2009

என் சொற்கள்



வழி நெடுகிலும் சிந்தியிருக்கின்றன
நான் பேச நினைத்த
பேசியிருக்க வேண்டிய
பேசிய
பேசியிருக்கக் கூடாத சொற்கள்


அவற்றினால்
ஆகிய புன்னகைகளும்
சிந்திய குருதிகளும்
விளைந்த கோபங்களும்
குழம்பாயிருக்கிறது வழியெங்கும்


கைக்கெட்டிய குப்பைகளை
வாயில் ஏந்தியிருக்கிறேன்
பல நேரங்களில்
சில நேரங்களில்
முத்துக்களும்தான் கோர்த்திருக்கிறேன்

வாயுலர்த்த மறுக்கும் சோம்பலில்
வார்த்தைகளை வீசிவிட்டு
என்ன நேர்ந்தது
என்று எண்ணாமல்
நெடுந்தொலைவு கடந்துவிட்டேன்


ஆனாலும், மறுபக்கம் பார்க்கையில்
தெரியும் ஒரு புன்னகையும்
ஒரு கோபமும்
ஒரு பாராமுகமும் சொல்லிப் போகின்றன
என்ன ஏந்திப் போயின என் சொற்கள் என்று




No comments: