Saturday 24 January 2009

பதில் சொல்லுங்கள் அம்மா ...

பார்ட்டிக்கு போனேன் அம்மா
நீ சொன்னதை மறக்கவே இல்லை
குடிக்க வேண்டாம் என்று சொன்னாய் என்று
சோடா மட்டும் குடித்துக் கொண்டேன்

நீ சொன்னதை போலவே அம்மா ,
பெருமையாய் இருந்தது எனக்கு.
குடித்து விட்டு ஓட்டவில்லை அம்மா
செய் ,என்று பிறர் தூண்டிய போதும்

சரியாகவே செய்தேன் தெரியும் அம்மா,
நீ சரியாகவே சொல்வாய்,அதுவும் தெரியும்
பார்ட்டி முடிந்து கொண்டிருக்கிறது அம்மா
எல்லாரும் கலைந்து கொண்டிருக்கிறார்கள்

காருக்குள் ஏறும் போது தெரியும் அம்மா,
பத்திரமாய் வந்து சேர்வேன் என்று
பொறுப்பும் அன்பும் சொல்லி
எனை நீ வளர்த்தது அப்படி அம்மா

ஓட்டத் துவங்கிவிட்டேன் அம்மா,
ஆனால் சாலைக்குள் வந்த போது
அடுத்த கார் என்னை கவனிக்காமல்
இடியாக மோதிக் கடந்தது

ரோட்டோரம் கிடந்த போது அம்மா
போலீஸார் பேசிக் கொண்டார் ,
"அடுத்த காரிலிருந்தவன் குடித்திருக்கிறான் "
ஆனால் விலை கொடுக்கப்போவது நான்தான்

நான் இறந்துகொண்டிருக்கிறேன்அம்மா
நீ சீக்கிரம் வரமாட்டாயா என்று ஏங்கிக்கொண்டே..
இது எப்படி எனக்கு நடக்கலாம் அம்மா ?
வெறும் பலூனைப் போல் வெடித்தது என் வாழ்க்கை

எனை சுற்றிலும் எங்கும் ரத்தம் அம்மா,
அதில் அதிகம் என்னுடையது தான் .
டாக்டர் சொன்னதை கேட்டேன் அம்மா
சிறிது நேரத்தில் நான் இறந்து விடுவேன்.

இதை மட்டும் உன்னிடம் சொல்ல வேண்டும் அம்மா,
நான் சத்தியமாக குடிக்கவில்லை .
அவர்கள் குடித்திருந்தார்கள் அம்மா
அவர்கள்எதையும்நினைக்கவில்லை

நான் போன பார்ட்டிக்கே கூட அவனும் வந்திருக்கக்கூடும்
ஒரே ஓர் வித்தியாசம் தான்
அவன் குடித்தான்
நான் இறக்கப் போகிறேன் .

எதற்காக குடிக்கிறார்கள் அம்மா?
வாழ்க்கை வீணாக போகக் கூடுமே.
அம்மா, வலிகள் உணர்கிறேன் இந்நேரம் ,
கத்திப் போல் கூர்மையாக

என்னை மோதியவன் நடந்து கொண்டிருக்கிறான் அம்மா
இது கொஞ்சமும் நியாயமில்லை
இங்கே நான் இறந்து கொண்டிருக்கிறேன்
வெறித்துப்பார்க்கிறான் அவன், வேறு என்ன செய்ய முடியும்

தம்பியை அழ வேண்டாம் என்று சொல்லுங்கள் அம்மா,
அப்பாவை தைரியமாக இருக்கசொல்லுங்கள் .
நான் சொர்க்கம் சேர்ந்த பின்னால்
"நல்லபையன்"என்றுஎன்கல்லறையில்எழுதிவையுங்கள்.

எவரேனும் அவனுக்கு சொல்லியிருக்கவேண்டும் அம்மா
குடித்து விட்டு ஓட்ட வேண்டாம் என்று
எவரேனும் சொல்லிமட்டுமிருந்தால் அம்மா
நான் இன்னமும் உன் மகனாயிருந்திருப்பேன்

என் மூச்சடைக்கிறது அம்மா
ரொம்ப பயமாய் இருக்கிறது
எனக்காக அழாதே அம்மா..
எனக்காக எப்போதும் நீ இருந்தாய் ...

ஒரே ஒரு கேள்வி தான் அம்மா
நான் விடை பெற்றுக் கொள்ளும் முன்னால்
குடித்துவிட்டு ஒட்டியது நானில்லை
இறப்பது மட்டும் ஏன் நானாகவேண்டும் ?


I went to a party Mom,
I remembered what you said.
You told me not to drink, Mom,
So I drank soda instead.

I really felt proud inside, Mom,
The way you said I would.
I didn't drink and drive, Mom,
Even though the others said I should.

I know I did the right thing, Mom,
I know you are always right.
Now the party is finally ending, Mom,
As everyone is driving out of sight.

As I got into my car, Mom,
I knew I'd get home in one piece.
Because of the way you raised me,
So responsible and sweet.

I started to drive away, Mom,
But as I pulled out into the road,
The other car didn't see me, Mom,
And hit me like a load..

As I lay there on the pavement, Mom,
I hear the policeman say,
"The other guy is drunk," Mom,
And now I'm the one who will pay.

I'm lying here dying, Mom....
I wish you'd get here soon.
How could this happen to me, Mom?
My life just burst like a balloon.

There is blood all around me, Mom,
And most of it is mine.
I hear the medic say, Mom,
I'll die in a short time.

I just wanted to tell you, Mom,
I swear I didn't drink.
It was the others, Mom.
The others didn't think.

He was probably at the same party as I.
The only difference is,
he drank
And I will die.

Why do people drink, Mom?
It can ruin your whole life.
I'm feeling sharp pains now.
Pains just like a knife.

The guy who hit me is walking, Mom,
And I don't think it's fair.
I'm lying here dying
And all he can do is stare.

Tell my brother not to cry, Mom.
Tell Daddy to be brave.
And when I go to heaven, Mom,
Put "GOOD BOY " on my grave.

Someone should have told him, Mom,
Not to drink and drive.
If only they had told him,
Mom,I would still be alive.

My breath is getting shorter,
Mom.I'm becoming very scared.
Please don't cry for me, Mom.
When I needed you, you were always there.

I have one last question, Mom.
Before I say good bye.
I didn't drink and drive,
So why am I the one to die?

இந்த கவிதையை எனக்கு தந்து மொழிபெயர்க்க தந்த சகோதரர் ஷன்வேலுக்கு நன்றி

Friday 23 January 2009

பாவாடை தாவணியில் ....

ஒரு விடுமுறைக்காக ஊருக்கு சென்றிருந்தேன் .ஒரு நாள் காலையில் பாட்டி வந்து ,"தங்கப்பாப்பாவுக்கு இன்னிக்கி சடங்கு ,வரியா ?"என்று கேட்டார் .நானும் போவதாக முடிவு செய்து கொண்டேன் .குளித்து கிளம்பும் முன் பாட்டியிடம் ,"நா சுரிதார் போட்டுக்கட்டுமா இல்லை தாவணி கட்டிக்கட்டுமா ?"என்று கேட்ட போது ,கொஞ்சம் யோசித்து விட்டு ,"தாவணி கட்டுளா "என்று சொல்லி விட்டார் .


தாவணி அதிகம் கட்டி எனக்கு பழக்கமில்லை என்று பாட்டிக்கும் தெரியும் எனக்கும் தெரியும் .அம்மாவும் முன்னெச்சரிக்கையாக ஒரு பட்டுப் பாவாடையும் தாவணியும் கொடுத்து அனுப்பியிருந்தார் .ஒரு வழியாக நீல நிறத்தில் பிங்க் கரை போட்ட பாவாடையையும் கரை நிறத்திலேயே தாவணி ரவிக்கையும் உடுத்தி கிளம்பியாகிவிட்டது .

அங்கு போன பின் சிறு வயதில் மட்டுமே என்னை பார்த்திருந்த பலர் என்னை வந்து விசாரித்துக் கொண்டிருந்தனர் .அதில் பெண்கள் எல்லாரும் பெண்ணுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த இடத்தில் இருந்தனர் .இதில் எனக்கு அங்கிருந்தவர்களில் அதிகம் பரீட்சையமான கனகவல்லி அக்கா ,"என்னப்பா ,தாவணியை திருப்பி கட்டியிருக்கியே ?,"என்று கேட்டார் .வெட்கமாக போய்விட்டது எனக்கு ."நா வேணா சரியா கட்டிவிடட்டுமா ?"என்றார் வாஞ்சையாக .

இதை கேட்டுக் கொண்டிருந்த பாட்டி சட்டென்று சொன்னார் ,'அது அவ பட்டணத்து ஸ்டைலுளா ,அது அப்படியே இருக்கட்டும் ".அவர் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார் .நான் பதறிப் போய் ,"இல்ல அக்கா ,எனக்கு தாவணி ரொம்ப சரியா கட்டத் தெரியாது ",என்று வாக்குமூலம் கொடுத்ததும் என்னை தனியே அழைத்துப் போய் சரியாக கட்டி விட்டார்கள் .

எனக்கான பாட்டியின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தும் இப்போதும் .


Thursday 22 January 2009

தந்தை மகற்காற்று நன்றி ....

இதை எழுதுவதா வேண்டாமா என பல முறை யோசனை செய்துகொண்டேயிருந்தேன் .உலகத்து நடப்புகளில் எத்தனையோ விசித்திரங்கள் நடந்து கொண்டேதான் இருக்கின்றன .அதில் இதுவும் ஒன்று தான் .

ஒரு தம்பதியர் சிகிச்சைக்கு வந்தனர் .இருவரும் காதல் மணம் செய்துகொண்டவர்கள் . மனைவி கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் பரிசோதனைக்கு சென்றிருக்கிறார்கள் .அதில் மனைவிக்கு எச்.ஐ.வி நோய் இருப்பது தெரிய வந்துள்ளது .கணவருக்கு நோய் இல்லை .மேலும் பரிசோதனைகள் செய்ததில் மனைவிக்கு நோயினால் பாதிப்பு அதிகமாகவே இருந்தது .

வழக்கம் போல் ஆலோசனை செய்த போது ,இந்த பெண்ணின் தந்தைக்கு எச்.ஐ.வி இருந்தும் அவர் அதற்கு சரியான சிகிச்சை செய்யாமல் இறந்ததும் தெரிய வந்தது .அதோடு மட்டுமல்லாமல் அவர் இந்த பெண்ணுடன் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதும் தெரிய வந்தது .சில நாள் கழித்து இதை உணர்ந்து கொண்ட இவர் தாயார் இந்த பெண்ணை விடுதியில் சேர்த்தாராம் .

என்ன சொல்லி தேற்றுவது ?

அந்த பெண் கூறினார் ,"என் அம்மாவிற்கும் நோய் இருக்கிறது .ஆனால் அவர்கள் சிகிச்சைகள் பற்றி தெரியாததால் சிரமப்படுகிறார்கள் ,நான் அவர்களையும் சிகிச்சைக்கு அழைத்து வருகிறேன் .ஆனால் எனக்கு நோய் இருக்கும் விஷயம் அவர்களுக்கு தெரிய வேண்டாம் " ,என்று...

Wednesday 21 January 2009

வேண்டும் ஒரு சாபம்

அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்
நீண்டதொரு தவம் செய்து
வரமாக அதைக் கோரி பெறும்
அவகாசங்கள் எனக்கில்லை

சொல்லிடுக்கில் காயப்பட்டு
அவசரமாய்
என் கன்னத்தில் கோள் சொல்லி
ஓடி வரும் கண்ணீரும்
முன் அறிவிப்பாய் மனவலி உணர்த்திவிடும்
முக மாற்றமும்

இனி என்றும் வராமல் உறையும் படி
அவசரமாய் எனக்கொரு சாபம் வேண்டும்

Thursday 8 January 2009

வசப்படும்


வெளி வானமெங்கும்
கொட்டிக் கிடக்கும் விண்மீன்கள்
சட்டென்று வசமாகாத என்ஆசைகள்போலவே
எனை பார்த்து கண்சிமிட்டிக் கொண்டு ..


ஜன்னலின் வழியே கைபறிக்கும் தூரத்தில்
தெரியும் போதெல்லாம்
கை நீட்ட கை நீட்டஅகப்படாமல்
ஓடி வானம் சேர்ந்து...


சரி வேண்டாம் ,என நான்
விட்டுவிடும் போதெல்லாம்
சிணுங்கலாய் என் ஜன்னலில் என் மாடியில்
எனக் கூட்டமாய் எனை அழைக்கவந்து .....


தினம் தினம் கண்ணாமூச்சியாய்
விளையாடிய களைப்பில்
சோர்ந்ததென்னவோ நான் தான் ..
அங்கே மினுமினுப்பில் ஏதும்குறைவில்லை


இளைப்பாறி, மீண்டும் கைநீட்டும் போது
மனமிளகி ஒளிக்கீற்றாய்
என் கையருகே வந்து சேரும்
அட விண்மீனில்லை! நிலவே தான்..............

Wednesday 7 January 2009

நோய் முதல் நாடி ...

மருத்துவக் கல்லூரியில் ஐந்தாண்டுகளில் கற்பிக்க முடியாத பாடங்கள் பலவற்றை நோயாளிகள் சில நிமிடங்களில் கற்பித்து விடுவார்கள் .அப்படிதான் நடந்தது இன்றும் .


இந்த பெண்ணும் அவர் கணவரும் எச்.ஐ.வி யினால் பாதிக்கப் பட்டவர்கள் .இருவரும் ஆசிரியர்கள் .இவர் கணவர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகி விடவே ,தனது இருபத்து ஏழாம் வயதில் மூன்று வயது மகனுடன் விதவையானார்.இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த தன் தம்பியின் திருமணத்திற்கு ,நகைகள் மற்றும் நல்ல பட்டுப் புடவை கட்டிக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வந்தவரை ஊராரின் பேச்சுகள் மனநோயாளியாக்கியது .


சிகிச்சைக்கு பிறகு உடல் நலமும் மன நலமும் ஓரளவு தேறியது .இன்று வந்த போது இவர் தந்தை சொன்னார் ,"சாப்பாடு நேரா நேரத்திற்கு சாப்பிடுறதில்லை .வெறும் வயிற்றில் மாத்திரையை போட்டுக்கறா .எதுக்கெடுத்தாலும் கோவம் வேற .அந்த டாக்டரையும் (மன நல மருத்துவர் )பாக்க வரதில்லை ,"என்று .


அவர் மகளின் பதில் இது ."என்னைய எல்லாத்திலேயும் தனியாவே வைக்கிறாங்க .என் பாத்திரம் ,அத விளக்குற நாரு,படுக்கை எல்லாமே தனி தான் .நான் தொடுற பலகாரத்த யாரும் சாப்பிடுறதில்ல .ஒரு நாள் நா இட்லி துணியை அலசப் போக எங்கம்மா அத திரும்பவும் அலசினாங்க. நா எங்கப்பாவுக்கு இட்லி எடுத்து வைக்க போறேன்னு எங்கம்மா வேகமா வந்து அதிலே கரண்டியை போட்டாங்க .


எல்லாருக்கும் எங்க வீட்டில தனியா ரூம் இருக்கு ,நானும் என் மகனும் நடுவீட்டிலே தான் படுக்குறோம் .எங்களுக்குன்னு தனி அறை இல்லை .
நா குளிச்சிட்டு வந்தாலும் ,டாய்லெட் போய்ட்டு வந்தாலும் நா அந்த இடத்த டெட்டால் போட்டு கண்டிப்பா கழுவி விடனும் .


இப்ப எங்கக்கா ஆபரேஷன் பண்ணி வீட்டிலே இருக்காங்க .நா சமைக்கறது தெரிஞ்சா அவங்களும் எங்க மாமாவும் சாப்பிட மாட்டங்க ன்னு எங்கம்மா என்னைய சமைக்கவே விடுறதில்ல .இதுனால நா மத்தியானம் சாப்பாடே எடுத்துக்காம பள்ளிக்கூடம் போறேன் .


நானும் என் மகனும் தனியா எங்கையாவது வீடு எடுத்து தங்கிக்கறோம்னு சொன்னாலும் விட மாட்டேங்குறாங்க .என்னை இப்படி ஒண்ணா வச்சி நோயாளின்னு கஷ்டப்படுத்துறாங்க .என் மகன் மட்டும் இல்லைன்னா நா என்னைக்கோ செத்துப் போயிருப்பேன் .அவன் வந்து எங்கிட்ட கேக்கறான் ,ஏன் ஒனக்கு எல்லாமே தனியா இருக்குன்னு .


இதெல்லாம் மாறாம, நா எந்த வைத்தியம் பாத்து எனக்கு என்ன சரியாக போகுது ?"





Monday 5 January 2009

அன்புடைமை

பதினெட்டே வயது நிரம்பிய செவித்திறன் ,பேசும் திறன் இழந்த ஒரு பெண் .அழகானவர் .இந்த பெண்ணை மணந்து கொள்ள ஒருவன் முன்வந்தான் .மகிழ்ச்சியாக அவர் பெற்றோரும் திருமணம் (அனைத்து சீர்களோடும் தான் ) செய்து வைத்தனர் .திருமணம் முடிந்து சில மாதங்கள் இந்த பெண்ணுடன் வாழ்ந்த அவன் ,அகப்பட்ட நகைகளை சுருட்டிக் கொண்டு ஒரு நாளில் காணாமல் போனான் .


அதன் பின் இந்த பெண் அடிக்கடி நோய்வாய்ப் படவும் பரிசோதனை செய்ததில் இந்த பெண்ணுக்கு எச்.ஐ .வி இருந்தது தெரிய வந்தது .அதன் பின் விசாரித்ததில் அவனுக்கும் திருமணத்திற்கு முன்பே நோய் இருந்ததும் தெரிந்தது .மனம் துவண்டு போன அந்த பெண்ணின் பெற்றோர் ,சிகிச்சைக்காக எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர் .இப்போது சிகிச்சைக்கு பிறகு அந்த பெண்
ஆரோக்கியமாகவே இருக்கிறார் .ஒரு நாள் கூட இந்த பெண் முகம் வாடி உற்சாகம் குன்றி நான் பார்த்ததில்லை .எப்பொழுதும் ஒரு சிரிப்புடன் மகிழ்ச்சியாகவே இருப்பார் .நோயின் தன்மை பற்றி சரியாக புரிந்திருக்குமா என்பதே ஐயம் தான் .இவருடன் வரும் இவர் தமக்கையின் முகத்தில் மட்டும் சோகம் அப்பிக் கிடக்கும் .


சென்ற வாரத்தில் மருந்துகள் வாங்கி செல்ல அக்காவும் தங்கையும் வந்திருந்தனர் .நான் படிக்கட்டில் ஏறி வருவதை கண்டவுடன் அந்த பெண்ணுக்கு அப்படி ஒரு உற்சாகம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை ,ஒரு சிறு குழந்தையின் துள்ளலோடு ஓடி வந்து என்னை கட்டி அணைத்து முத்தமிட்டார் .
நானும் திக்குமுக்காடித் தான் போனேன் இந்த அன்பில் .....

என் கடுதாசி

பாட்டி ஊரில் இருந்த போது எப்படியும் மாதம் ஒரு கடிதம் எழுதி விட வேண்டும் என்று அப்பா வற்புறுத்துவார் .சில வேளைகளில் ,பாட்டிக்கு தான் எழுத படிக்க தெரியாதே ,இந்த கடிதங்கள் எதற்கு என்று நான் நினைத்ததுண்டு .இருந்தாலும் கடமையாக முந்தைய கடிதத்தில் விட்ட இடத்திலிருந்து கடிதம் எழுதி விடுவேன் .


இதுபோல் ஒரு முறை ,நான் பள்ளியில் நடந்த சில போட்டிகளில் பரிசு பெற்றதை எழுதியிருந்தேன் .இந்த கடிதம் சென்ற சில வாரங்கள் இருக்கும் ,என் சின்ன அத்தை (இவர் தென்காசியில் இருக்கிறார் ) சென்னை வந்திருந்தார் .வீட்டிற்கு வந்த இவர் ,"நீ நிறைய பரிசு வாங்கியிருக்கிறாயாமே ?" என்று விவரம் கேட்டுக்கொண்டிருந்தார் .என் அப்பா ஆச்சரியமாக ,"உனக்கு யார் சொன்னது ?"
என்று கேட்டதும் அத்தை சொன்னார் ,"அம்மா ,இதைத்தான் ஊர் பூரா சொல்லிக் கொண்டிருக்கிறாள் ,'என்று .

பாட்டி அன்பை அத்தனை எளிதில் வெளிக் காட்டுபவர் இல்லை .நான் விளையாட்டாக எண்ணிய கடுதாசி விஷயம் எத்தனை முக்கியமானதாக இருந்திருக்கிறது பாட்டிக்கு !

Saturday 3 January 2009

புத்தாண்டில் இன்னமும்

இன்னுமொரு நற்செய்தி .....

ஆறு வருடங்களாக பிரிந்திருந்த என் நோயாளியின் மனைவியும் குழந்தையும் அவருடன் சேர்ந்தார்கள் .

பிரசவத்திற்கு அம்மா வீட்டிற்கு சென்ற இவர் மனைவி அதற்குள் ஏற்பட்ட மனக்கசப்பு, சிறு சிறு சச்சரவுகளை காரணம் காட்டி இத்தனை ஆண்டுகளாக திரும்ப வரவேயில்லை .இவர் தேடிப் போனாலும் இவரிடம் முகம் கொடுத்தும் கூட பேசாமல் விரட்டி வந்தார் .இவர் சென்னையிலும் இவர் மனைவி பெங்களூரூவிலும் தனித்தனியே வாழ்ந்து வந்தனர் .

இவருக்கும் தனக்கு எச்.ஐ.வி இருக்கிறதே ,தன்னால் அவர்களுக்கு நல்ல வாழ்க்கை அமைத்துத் தர முடியுமா ?தன்னால் நன்றாக வாழ முடியுமா என்றெல்லாம் பயம் இருந்ததால் இவரும் அவர்களை தன்னுடன் வந்து வாழுமாறு கட்டாயப்படுத்தவில்லை .தன் மகளையே தாழ்வு மனப்பான்மை ,குற்ற உணர்வு காரணமாக இவர் சில வருடங்களாக பார்க்கவில்லை .


கடந்த மாதத்தில் ஒரு நாள் தன் மனைவியை என்னிடம் அழைத்துவந்தார் .இருவருக்கும் நோய் குறித்துப் பல சந்தேகங்கள் இருந்ததால் அதைப் போக்கும் பொருட்டு .அப்பொழுதே அவர் மனைவி சொன்னார் ,"என் மகள் இவரை புகைப்படத்தில் மட்டுமே சரியாக பார்த்திருக்கிறாள் .ஆனாலும் இவர் சில நாட்களுக்கு முன் பெங்களூரூ வந்த போது 'என் அப்பா 'என்று இவரை கட்டிக் கொண்டாள் .ஆறு ஆண்டுகளை வீணடித்து விட்டோம் "என்று .

இன்று உள்ளம் கொள்ளா ஆனந்தத்துடன் அவர் வந்து கூறிச் சென்றார்,"என் மனைவியும் மகளும் என்னுடனே வந்துவிட்டார்கள் .மகளின் பள்ளி காரணமாக இந்த ஆண்டு இறுதி வரை அவள் அங்கேயே இருக்கட்டும் ,நாம் வாரம் ஒரு முறை சென்று பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்திருக்கிறோம் "என்று .

இனி வரும் ஆண்டுகள் நலமே நல்கட்டும் .

Friday 2 January 2009

புத்தாண்டில் ....

புத்தாண்டில் எனக்கு வந்து நல்ல செய்தி இது .

என் நோயாளி இவர் .இவர் மனைவி (சொந்த அக்கா மகள் தான் )கோபித்துக் கொண்டு தன் மகனுடன் தன் அம்மா வீட்டில் வசித்து வந்தார் .மகள் தந்தையுடன் இருந்தாள் .அங்கிருந்து வழக்கு தொடர்ந்து தன் கணவர் பேரில் இருந்த வீட்டை தன் பெயருக்கு மாற்றி தர வேண்டும் என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தார் .

பெண்கள் காவல் நிலையத்தில் வேறு சொல்லப் போக ,அவர்கள் இவரை அடித்த கொடுமையெல்லாம் நடந்தேறியது .இவர் காவல் நிலையத்தில் தனக்கு எச்.ஐ.வி இருப்பதை தெரிவிக்கவும் (நல்ல வேளையாக இவர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் நோய் இல்லை ) அவர்கள் இவர் மேல் பரிதாபப்பட்டு இவரை விடுவித்திருக்கிறார்கள் .இருவரையும் வைத்து அறிவுரைகளும் கூறியிருக்கிறார்கள் .இதற்கும் இவர் மனைவி அசையவில்லை .
வழக்கு விசாரணைக்கு வந்த போது இவர் வேறுவழியின்றி செலவு செய்து தனக்கென்று ஒரு வழக்கறிஞர் வைக்க வேண்டியதாயிற்று .


இது இவ்வாறு போய்க் கொண்டிருக்கையில் ,வீட்டிலும் சமாதான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன .இதனூடே இவர் மனைவியின் அண்ணனும் ,பிறரும் இவர் மனைவியையும் ,மகனையும் உதாசீனமாகவும் பாரமாகவும் குத்திக் காட்டிப் பேசவே மனமுடைந்த இவர் மனைவி ,வழக்கை திரும்ப பெறவும் இவருடன் மறுபடி சேர்ந்து வாழவும் முன் வந்தார் .ஆனால் வழக்கறிஞரோ ,ரூ.ஐந்தாயிரம் கொடுத்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும் என்று கூறிவிட்டார் .அன்றாடம் கூலி வேலை செய்யும் இவர் ,அந்த பணத்துக்கு எங்கே போவார் ?எங்கெங்கோ கடன் வாங்கி இரண்டாயிரம் கொடுத்த பின்னரே வழக்கு முடிவுக்கு வந்தது .

இன்று வழக்கம் போல் சிகிச்சைக்கு வந்த இவர் ,வந்து அமர்ந்த மறுநிமிடமே ,"சம்சாரம் வீட்டுக்கு வந்துட்டாங்கம்மா ,பையனை இந்த வருஷம் எங்க வீட்டுக்கு பக்கத்திலேயே பள்ளிக்கூடத்திலே போடப் போறோம் .இப்ப கொஞ்சம் வேலை சரியா இல்லாததால ,பொங்கல் துணி கூட அப்புறம் பாத்துக்கலாம் ன்னு சொல்லிட்டா ...எனக்கு இன்னிக்கி சாப்பாடு கூட கட்டிக்
கொடுத்திருக்கா ..",என்றார் .நான் அவருக்கு சிகிச்சை செய்து வரும் இந்த இரண்டு ஆண்டுகளில் அவரை இத்தனை மகிழ்ச்சியாக நான் கண்டதில்லை .

இந்த புத்தாண்டு அவருக்கு இன்னமும் பல சந்தோஷங்களை கொண்டு சேர்க்கட்டும் .

ஆடல் காணீரோ

இந்த வருடமும் சென்ற வருடம் போலவே அம்மா ,"கார்த்திக் பைன் ஆர்ட்ஸ் "நடத்தும் மார்கழி விழாவிற்கு சென்று வந்தார்கள் .இதில் நேற்று மயிலை ,வித்யா மந்திர் பள்ளியில் நடந்த ,"ஆடல் காணீரோ -எம்.எல்.விக்கு ஒரு நாட்டிய அஞ்சலி" என்ற நிகழ்ச்சிக்கு நானும் சென்றிருந்தேன் .இதற்கான எண்ணமும் ஆக்கமும் நடனமும் திருமதி .ராதிகா சுரஜீத்தினுடையது .


கானக்குயில் .திருமதி .எம்.எல்.வியின் திரை இசைப் பாடல்கள் ,அவர் தன் கச்சேரிகள் மூலம் பிரபலப்படுத்திய பாடல்கள் என பாடல்களை தெரிவு செய்திருந்தார்கள் .இதனூடே அவருடைய சீடர்கள் ,அவருடன் பணியாற்றியவர்கள் என சிலர் அவருடனான தங்கள் அனுபவங்கள் ,அவரின் குண நலன்கள் ,அவரின் இசையின் சிறப்புகள் என பகிர்ந்து கொண்டதன் பதிவையும் ஒளிபரப்பினார்கள் .


முதல் பாடலாக ,இறை வணக்கம் .இதில் எம் .எல்.வி . அவர்களே பாடிய "கஜானனம்" பாடல் திரையில் காண்பிக்கப் பட்டது .பின்னர் இரண்டு பாடல்கள் ,ஒரு திரைக்காட்சி என நிகழ்ச்சி நடந்தது .ஆடல் காணீரோ ,கொஞ்சும் புறாவே ,நந்தகோபாலனுடன் நான் ஆடுவேன் ,முருகன் பாடல்கள் என்று பல பாடல்களுக்கு திருமதி .ராதிகாவின் குழுவினர் ஆடினார்கள் .
ஆச்சரியமாக ,"அய்யா சாமி "பாடலும் கூட இடம் பெற்றிருந்தது .


பாடல் தெரிவு ,நடனக் குழுவினர் தேர்வு, நடன அமைப்பு ,உடைகள் ,பேட்டிகளின் தொகுப்பு ,பல அரிய புகைப்படங்களின் தொகுப்பு என்று அனைத்து விஷயங்களிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டிருந்தது .கருத்தூன்றி ரசித்துப் பார்த்தேன் என்று சொன்னால் அது மிகையில்லை .அத்தனை அற்புதமாக நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது .எம்.எல்.விக்கு தக்கதொரு அஞ்சலியாக இது அமைந்தது என்பதில் ஐயமில்லை .எம்.எல்.வியின் ஆன்மா எங்கிருந்தாலும் இவர்களை வாழ்த்தியிருக்கும் .