Wednesday 29 October 2008

பாட்டி

பாட்டியை பற்றிய சுவாரசியமான நிகழ்வு இது .
பாட்டி எங்கள் வீட்டில் எப்போதும் நார் கட்டிலில் ஜன்னல் ஓரம் படுத்திருப்பார் .

ஒரு நாள் காலையில் ,"எவனோ களவாணிப் பய ஜன்னல் பக்கம் வந்து ராத்திரியிலே என் கையை தொட்டான் .நா கதிரவன் தான் படுக்க வர்றான் ன்னு நெனைச்சி ஏலே சின்ன மணி தள்ளி படு ,தள்ளி படு ன்னு சொல்லிகிட்டே இருக்கேன் குதிச்சு ஓடிட்டான் ,"என்றார் .

எங்கள் எல்லாருக்கும் இது ஏனோ ரொம்ப வேடிக்கையாய் இருந்தது .பாட்டி,"ஏதாவது கனவாயிருக்கும் "என்றதுக்கு "ஏளா , எனக்கு தெரியாதா ....." இது பாட்டி .
சரியென துப்பறியும் வேலை பார்த்ததில் ஜன்னல் ஓரம் காலடி சுவடுகள் .பாட்டி சொன்னது உண்மை தான் .


இதில் பயந்துபோன பாட்டி ஜன்னலிலிருந்து இரண்டு அடி கட்டிலை தள்ளி இழுத்த பிறகு தான் தூங்கப் போவார் ."பாசத்தால் திருடனை விரட்டி விட்டார் பாட்டி "என்றும் "கையை தொட்டவன் காதை தொட்டிருந்தா பாமடமாவது கிடைத்திருக்கும் "என்றும் பாட்டியை கிண்டல் செய்து கொண்டிருந்தோம் சில காலம் .

Friday 24 October 2008

என் சிரிப்பு


என் சிரிப்பை சிறையெடுத்திருக்கிறேன்
இப்போது -
எவர் பொருட்டும்
அது களவு போய்விடக் கூடாதென


அதை நீட்ட நினைப்பவர்களும்
நீக்க நினைப்பவர்களுமாக
பெரும் யுத்தம்
நடந்து கொண்டே தான் இருக்கிறது


என் சிரிப்பை புதைத்திருக்கிறேன்
ஒரு சமயம் -
எவரும் கண்டு விடாமல் இருக்க


பல நேரங்களில்
என் சிரிப்பை மீட்டிருக்கிறேன்
எனை ஆண்ட பல வேந்தர்கள்
ஆணைக்குட்பட்டதாகவே இருந்தது என் சிரிப்பு
அப்போது


காணாமல் போயிருந்தது சில காலம்
வெளியில் தேடி
அலைந்து மெலிந்த பின்
என்னுள் ஓரமாய் ஒளிந்திருந்தது
துணிவை சேர்த்து ஒட்டிக் கொண்டேன்


இப்போது
என் சிரிப்பு எப்போதும்
தேங்கியிருக்கிறது
என் கடைவாய் ஓரங்களில் ..............

Thursday 23 October 2008

பொழுது புலர்ந்தது

அலைகடலில் கிளம்பிய காற்று
சொன்னது"ஓ பனியே! என் வழி மறைக்காதே!"

கலங்களை கண்டு கூறிச் சென்றது
"இரவும் முடிந்தது ,ஓய்வும் முடிந்தது"


தொலைவில் தெரிந்த ஊருக்குள் விரைந்து
"பொழுது புலர்ந்தது, துயில் களையுங்கள்!" என்றது


தூங்கிய வனத்திடையே இலைகளை தட்டி
"சோம்பல் முறித்து ,ஆர்ப்பரியுங்கள்" என்றது


மடித்த சிறகினை வருடி பறவையிடம்
"விழித்துப் பாடும் வேளை "என்றது


வயல் வெளியெங்கும் ஓடிப் பரவி
"கூவு சேவலே ,இது விடியல் "என்றது


முதிர்ந்து நிற்கும் சோளக்கதிரதட்டி சொன்னது
"தலை தாழ்த்துங்கள்! கதிரவன் ரதம் வரும் நேரம்"


மணி கூண்டிடையே போய் உரக்கச் சொன்னது
"பகலினை அறிவிக்க ஓங்கி ஒலித்திடு "


கல்லறைகள் முத்தமிட்டு ஏக்கமாய் சொன்னது
"இன்னும் வேளையில்லை ,அமைதியாய் உறங்குங்கள் "


DAYBREAK
Henry Wadsworth Longfellow

A wind came up out of the sea,
And said, "O mists, make room for me."

It hailed the ships and cried,
"Sail on,Ye mariners, the night is gone."


And hurried landward far away,
Crying "Awake! it is the day."


It said unto the forest, "Shout!
Hang all your leafy banners out!"


It touched the wood-bird's folded wing,
And said, "O bird, awake and sing."


And o'er the farms, "O chanticleer,
Your clarion blow; the day is near."


It whispered to the fields of corn,
"Bow down, and hail the coming morn."


It shouted through the belfry-tower,
"Awake, O bell! proclaim the hour."


It crossed the churchyard with a sigh,
And said, "Not yet! In quiet lie."

Tuesday 14 October 2008

பொறையுடைமை ???

என்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண் இவர் .பரிசோதனையின் போது கர்ப்ப வாயில் புற்று நோய் இருப்பது தெரிய வந்தது.இது ஒரு ஆறு மாத காலத்திற்கு முன் .சிகிச்சைக்கு அடையாறிலுள்ள புற்று நாய் சிகிச்சை மருத்துவமனைக்கு அல்லது எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினேன் .

இதன் பிறகு நான்கு மாதங்கள் இந்த பெண் வரவேயில்லை .சிகிச்சைக்கும் எங்கும் செல்லவில்லை .ஒரு முறை மருத்துவமனைக்கு சென்று விட்டு யோசித்து சொல்கிறோம் என்று சொல்லிவிட்டு காணாமல் போனார்கள் இவரும் இவர் கணவரும் .யோசித்து யோசித்து நோயும் அதிகமாகி பல முறை சொன்ன பின் இப்போது சென்றிருக்கிறார்கள் சிகிச்சைக்கு ...

Monday 6 October 2008

பிறன்மனை நோக்காமை

ஆதரவற்று போய் விட்டதால் சிலர் இந்த சமூகத்தில் எத்தனை இன்னல்கள் பட நேர்கிறது ?

இந்த பெண் வயது வெறும் இருபது தான் .தாயும் தந்தையும் சிறு வயதிலேயே இறந்து விட தன் பாட்டி (ஆத்தா ),மாமன்கள் என்று பலரது வீட்டிலும் மாறி மாறி வளர்ந்தவர் .இவர் தம்பி தங்கைகளோ வேறு உறவினர்களிடம் .

பதினெட்டு வயதானவுடன் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்.மாப்பிள்ளை
எச்.ஐ.வி நோயாளி .அதுவாகிலும் பரவாயில்லை .இந்த மாப்பிள்ளைக்கு ஒரு அண்ணன் ,ஏதும் வருமானம் இல்லாமல் .நன்கு சம்பாதிக்கும் கொழுந்தனை
கைக்குள் போட்டுக் கொண்டு அண்ணி ,சித்திரவதை செய்ததோடல்லாமல் ,மூன்று மாத கர்ப்பமாக இருந்த போது வீட்டை விட்டு விரட்டியும் விட்டாள் .

இப்போது இந்த பெண் ,கை குழந்தையுடன் வீடு வீடாக சென்று கொண்டிருக்கிறார் .எச்.ஐ.வி நோயும் வேறு தொற்றிக் கொண்டது .ஆத்தாவிடம் குழந்தையை விட்டு விட்டு கூலி வேலை செய்கிறார் .எவர் சமரசம் பேச சென்றாலும் அண்ணியே பேசுவதால் தீர்வு வரவில்லை ...வரப் போவதுமில்லை ....

Wednesday 1 October 2008

பொம்மைகள்

என் மகனுக்கென
வாங்கியதாய்,
என் வீடு முழுவதும்
கிடக்கின்றன.....
வண்ண வண்ண பந்துகள்
ஓடும் கார்கள்
பேசும் கிளிகள்
பம்பரங்கள்
அம்புகள்
பிளாஸ்டிக் வீடுகள் என
சிறு வயதில்
நான் விரும்பிய
விளையாட்டு பொம்மைகள்