Thursday 11 September 2008

பகவதி பாட்டி




யாரிந்த பகவதி பாட்டி ?
என் தாத்தாவின் பாட்டி .

இவரை பற்றி தெரியாதவர்கள் எங்கள் சந்ததியில் எவரும் இல்லை .
ஆலடிப்பட்டியிலிருந்து தீபத்திற்கு திருவண்ணாமலை செல்லும் பழக்கம் பல வருடங்களுக்கு முன் இருந்ததாம் .அப்படி தன் கணவருடன் வண்டியில் சென்றார் பகவதி பாட்டி .சென்ற இடத்தில தாத்தா எதிர்பாராமல் இறந்து விட ,அவரை அங்கேயே அடக்கம் செய்து விட்டு ஊர் திரும்பினாராம்.


ஊருக்கு திரும்பியவர் தன் வீட்டு மாடியில் குடியேறினர் .ஆனால் அதன் பின்னர் தன் வாழ்நாள் முழுதும் அங்கிருந்து இறங்கவே இல்லை .உடை ,குளியல் ,உணவு என்று சகலமும் அந்த ஒரு அறையிலினுள் தான் .பாட்டிக்கு வேண்டிய சகல பணிவிடையும் அவர் மருமகள்கள் நால்வரும் செய்தனர் .இறந்த பின் தான் அவர் உடல் அங்கிருந்து இறக்கப்பட்டது .


இத்தனை நெஞ்சுரம் கொண்டவராக பகவதி பாட்டி இருந்ததால் ,இந்த பெயர் கொண்ட எவரும் அப்படியே இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது .என் அத்தையின் பெயரும் கூட பகவதி தான் .பகவதி பாட்டியின் கல்லறை ஊரில் உண்டு .நான் அதைப் பார்த்ததாக நினைவில்லை .என் அத்தை ,தான் இறந்த பிறகு
பகவதி பாட்டியின் கல்லறை அருகில்தான் தனக்கும் கல்லறை வைக்க வேண்டும் என்று விரும்பினார்.இடம் தான் கிடைக்கவில்லை . தாத்தாவின் கல்லறை திருவண்ணாமலையில் இருக்கிறதாம் .எங்கே என்று அறிந்தவர்கள் எவரும் இல்லை .

பகவதி பாட்டியை நினைக்கும் போது அவருடைய உறுதியை நினைத்து ஆச்சரியப்பட்டாலும் அவர் மருமகள்களை நினைத்து பார்க்கையில் கொஞ்சம் வருத்தம் தான்.

இவர் குடியிருந்த வீடு என் பாட்டி வீட்டிற்கு எதிரில் இருந்தது .என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன் .பாழடைந்து போய் இருந்த இந்த வீட்டை ஊரில் யாரைக்கேட்டாலும் பய பக்தியுடன் சொல்வார்கள் ,"இது பகவதி பாட்டியின் வீடு "என்று .ஆலடிப்பட்டியின் சரித்திரச் சின்னங்களில் ஒன்றாகவே அது மாறிப் போயிருந்தது .


No comments: