Monday 29 September 2008

பாட்டி வீடு

என் பாட்டி வீட்டில் என்னை மிகவும் ஆச்சரியப் படுத்தியது அங்கிருந்த கழிவறை தான் .பாட்டி வீட்டிற்கு எதிரில் வீட்டிற்கு வெளியே இருந்தது .உள்ளேயே தண்ணீர் தொட்டி கூட உண்டு .கூரை இருந்ததாக நினைவில்லை .

இதில் என்ன ஆச்சரியம் என்று நினைக்கலாம் .என் அம்மாவின் அம்மா வீடு திருநெல்வேலி டவுனில் இருந்தது .நாகரீகம் சற்று வளார்ந்து விட்டதாகக் கருதக் கூடிய ஊரில் இருந்த அந்த வீட்டில் கழிவறை கிடையாது .கழிவறை என்று பெயரிடப் பட்ட அறையில் ஒரு குட்டி சுவர் இருக்கும் அவ்வளவே .எறும்புகள் மொய்க்கும் .நினைத்தாலே கொஞ்சம் பயமாக தான் இருக்கிறது இப்பொழுது கூட .காலையில் ஒரு பெண் வந்து ஒரு தென்னம் மட்டையை வைத்து அத்தனையும் சுத்தம் செய்து ஒரு வண்டியில் அள்ளிக் கொண்டு போவார் .உயிரே இருக்காது அவர் முகத்தில் .பின்பு இப்படிப்பட்ட இழிவான அருவருப்பான பணியை காலம் காலமாக செய்யும் அவருக்கு மனநிலை எப்படி இருக்கும் ?வெட்கக் கேடான விஷயம் இது .ஆனால் அந்த சிறு வயதில் அவரை கண்டாலே
அருவருப்புடன் ஒதுங்கவே தெரிந்தது .


என் பாட்டி வீட்டில் 1965 லிருந்து 1968 குள் கழிவறை கட்டப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன் . ஏனென்றால் அப்போது தான் என் பெரியப்பாவிற்கு திருமணம் ஆகியது .என் பெரியம்மா சென்னையில் வளர்ந்தவர் .பட்டிணத்திலிருந்து மருமகள் வருவதால் இந்த கழிவறையை கட்டினார்களாம் .

Wednesday 24 September 2008

கண்ணீர்


சில நேரங்களில்
எல்லையற்ற மகிழ்ச்சி என்னுள் பூக்கும் போது
கண்ணீர் என் கண்ணாடி


சில நேரங்களில்
விலா கொள்ளாமல் நான் சிரிக்கும் போது
கண்ணீர் என் கடிவாளம்


சில நேரங்களில்
சிறுதுகள்கள் உள்ளேறி உறுத்தும் போது
கண்ணீர் என் மருந்து


சில நேரங்களில்
இதயத்து சுமை ஏந்தி நான் துவழும் போது
கண்ணீர் என் சுமைதாங்கி


சில நேரங்களில்
துயரங்கள் எனை ஆழ்த்த முயலும் போது
கண்ணீர் என் வடிகால்


சில நேரங்களில்
எவருமில்லா தனிமையில் நான் தவிக்கும் போது
கண்ணீர் என் துணை


சில நேரங்களில்
என்னை மீட்க நான் எத்தனிக்கும்போது மட்டும்
கண்ணீரும் என் ஆயுதம்

Friday 19 September 2008

துணிவுடைமை

சில நிமிடங்களின் தடுமாற்றங்கள் நம் வாழ்க்கையின் திசைகளை பல வேறாக
மாற்றக் கூடும் .என் நோயாளி இவர் .வயது ஐம்பது இருக்கும் .ஒரு மகன் இரண்டு மகள்கள் .கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு மேலாக எச்.ஐ.வி. நோயுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் .


இவருக்கும் இவர் கணவருக்கும் ஒரே நேரத்தில் தான் ரத்த சோதனை செய்யப்பட்டதாம் .நோய் இருக்கிறது என்று தெரிய வந்ததும் இவர் கணவர் ஊரில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் .நோயுடன் சிறு பிள்ளைகளை பராமரிக்கும் பொறுப்பையும் தன் மனைவி தலையில் சுமத்தி விட்டு.

அவர் சொன்னார் ,"எனக்கு இங்கு மருத்துவமனையில் வந்து பார்க்கும் போது முதலில் பயமாக இருந்தது .பின்னர் இத்தனை பேர் இங்கு வந்து சிகிச்சை செய்து நலமாக இருக்கிறார்களே நாமும் அது போல இன்னும் சில வருடங்களேனும் நம்
பிள்ளைகள் வளரும் வரை உடல் நலத்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன் .ஆனால் என் கணவருக்கோ இதெல்லாத்தையும் விட
தனக்கு நோய் இருப்பதும் அதன் அவமானமும் தான் பெரிதாக தெரிந்து விட்டது .எத்தனை நான் தேற்றியும் பலனில்லாமல் இப்படி செய்து கொண்டார்."

வருத்தப்படாதீர்கள் என்று சொன்னேன் .அவர் கூறினார் ,"இன்று எனக்கு இருப்பது வருத்தமல்ல ,கோபம் தான் .தன்னை பற்றி மட்டுமே நினைத்து அவர் தன் முடிவை தேடிக் கொண்டார் .என் பிள்ளைகளை பற்றியோ என்னை பற்றியோ
கவலைப் படவில்லை ."

இன்று தனியாகவே தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி அவர்களை ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார் இவர் .

Monday 15 September 2008

தோட்டம்


பாட்டிக்கு சொந்தமாக ஒரு தோட்டம் உண்டு .இதில் ஒரு பெரிய கிணறும் பம்ப் செட்டும் உண்டு .இதில் குளிக்க சென்ற நினைவிருக்கிறது சிறு வயதில் .

இதில் சில பனை மரங்களும் தென்னை மரங்களும் உண்டு .தன்னால் இயன்ற
வரை பாட்டி இதை மேற்பார்வை செய்து வந்தார் .வீட்டிலிருந்து வெகு தொலைவு நடந்து செல்வது போன்று தோன்றும் முன்பு .சமீபத்தில் சென்ற போது தான் தெரிந்தது அது ஒன்றும் அத்தனை தொலைவில் இல்லை என்பது .
இளநீர் பறிக்க சொல்லி அதை அங்கே வெட்டி குடித்த நினைவும் இருக்கிறது .

இதில் ஒரு பக்கத்தில் என் தாத்தாவின் கல்லறை இருக்கிறது .சில கற்களை அடுக்கி சதுரமாக கட்டப் பட்டது போல் தோன்றும் அது .நான், இதில் என் தாத்தாவை புதைத்துஇருக்கிறார்களோ என்ற பயத்தில்," இதற்கு அடியில் என்ன
இருக்கிறது?" என்று கேட்ட போது என் பெரியம்மா சொன்னார் ,"உன் அப்பா ,பெரியப்பாக்கள் அழுத கண்ணீரை பாட்டிலில் அடைத்து புதைத்தோம் "என்று .

இன்றோ அதே தோட்டத்தில் ,என் பாட்டி ,என் பெரிய அத்தை ,பெரிய பெரியப்பா
என்று நான்கு கல்லறைகள் இருக்கின்றன.குடும்பத்தின் தோட்டம் என்று மட்டும் அல்லாமல் குடும்பத்தின் கல்லறை தோட்டமும் ஆகி விட்டது அது.

வெள்ளிநிலவு

சத்தங்கள் இல்லை அவசரம் இல்லை
வெள்ளிக் காலெடுத்து நிலவும்
இரவைக் கடக்கிறாள்


அங்கும் இங்கும் அவள் பார்வை பட்டதும்
அடவெள்ளி மரங்களில் விளைந்தன
வெள்ளிக்கனிகள்


கூரைகள் மேல் அவள் தொட்டுப் பார்த்து
ஓலைக் கீற்றிலும் வெள்ளிகள்
வேய்ந்து போனாள்


காவலின் களைப்பில் உறங்கும் நாய்க்கும்
அசைவற்ற உறக்கத்தில் நீளும்
வெள்ளிக் கால்கள்


இருளில் ஒளித்த கூட்டில் தெரியும்
வெள்ளி இறகுகள் சுமந்துறங்கும்
வெள்ளை புறாக்கள்


வயலில் திரியும் குட்டி எலிக்கும்
இருட்டில் மிளிரும்
வெள்ளிக் காலும் கண்ணும்


நிலவில் குளித்த
வெள்ளி ஓடையில் மின்னும்
வெள்ளி நாணல்கலுள் வெள்ளி மீன்களும்



Silver by Walter de la Mare


Slowly, silently, now the moon
Walks the night in her silver shoon;
This way, and that, she peers, and sees
Silver fruit upon silver trees;
One by one the casements catch
Her beams beneath the silvery thatch;
Couched in his kennel, like a log,
With paws of silver sleeps the dog;
From their shadowy cote the white breasts peep
Of doves in silver feathered sleep
A harvest mouse goes scampering by,
With silver claws, and silver eye;
And moveless fish in the water gleam,
By silver reeds in a silver stream.


Saturday 13 September 2008

வாழ்க்கை

கருத்த மேகங்கள் இருளை கூட்டும்
இருண்ட கனவில்லை வாழ்க்கை
விடியலை கலைக்கும் சின்னத் தூறல்
கூடும் மேகத்தை விலக்கக்கூடும்

சில பொழுதில் அடர்ந்து சூழும்மேகம்
ஒரு மழையாய் விலகக் கூடும்
சில துளியால் பல மலர்கள் பூக்கும்
நனைவதற்கு அஞ்சலாமோ

நொடிகள் மணிகளாய் மணிகள் நாட்களாய்
வாழ்க்கை கடந்து போகும்
சோகம் மறந்து இன்பம் உணர்ந்து
திளைக்க மறக்கலாமோ

நம் உயிரின் நேசங்களை மரணம் சிலநேரம்
அழைத்துப் போனால் என்ன?
சில சோகத்தின் தாக்கத்தில்
நம்பிக்கை கொஞ்சம் தளர்ந்து போனால் என்ன?

விழுந்த போதிலும் நம்பிக்கை சிறகுகள்
இறகாய் நம்மை தாங்கும்
விழுந்த போதும் வீழ்ந்திடவில்லை
உயிர்த்தெழுந்தே மீண்டும் தோன்றும்

ஆண்மை கொண்டு அச்சம் தவிர்த்தால்
சோதனை வென்றிடக் கூடும்
துயர்களை சுமக்கும் துணிவில் மட்டும்
வெற்றிகள் பிறக்கக் கூடும் .



LIFEby: Charlotte Bronte (1816-1855)
LIFE, believe, is not a dream
So dark as sages say;
Oft a little morningrain
Foretells a pleasant day.
Sometimes there are clouds of gloom,
But these are transient all;
If the shower will make the roses bloom,
O why lament its fall?
Rapidly, merrily,
Life's sunny hours flit by,
Gratefully, cheerily
Enjoy them as they fly!
What though Death at times steps in,
And calls our Best away?
What though sorrow seems to win,
O'er hope, a heavy sway?
Yet Hope again elastic springs,
Unconquered, though she fell;
Still buoyant are her golden wings,
Still strong to bear us well.
Manfully, fearlessly,
The day of trial bear,
For gloriously, victoriously,
Can courage quell despair!

Thursday 11 September 2008

பகவதி பாட்டி




யாரிந்த பகவதி பாட்டி ?
என் தாத்தாவின் பாட்டி .

இவரை பற்றி தெரியாதவர்கள் எங்கள் சந்ததியில் எவரும் இல்லை .
ஆலடிப்பட்டியிலிருந்து தீபத்திற்கு திருவண்ணாமலை செல்லும் பழக்கம் பல வருடங்களுக்கு முன் இருந்ததாம் .அப்படி தன் கணவருடன் வண்டியில் சென்றார் பகவதி பாட்டி .சென்ற இடத்தில தாத்தா எதிர்பாராமல் இறந்து விட ,அவரை அங்கேயே அடக்கம் செய்து விட்டு ஊர் திரும்பினாராம்.


ஊருக்கு திரும்பியவர் தன் வீட்டு மாடியில் குடியேறினர் .ஆனால் அதன் பின்னர் தன் வாழ்நாள் முழுதும் அங்கிருந்து இறங்கவே இல்லை .உடை ,குளியல் ,உணவு என்று சகலமும் அந்த ஒரு அறையிலினுள் தான் .பாட்டிக்கு வேண்டிய சகல பணிவிடையும் அவர் மருமகள்கள் நால்வரும் செய்தனர் .இறந்த பின் தான் அவர் உடல் அங்கிருந்து இறக்கப்பட்டது .


இத்தனை நெஞ்சுரம் கொண்டவராக பகவதி பாட்டி இருந்ததால் ,இந்த பெயர் கொண்ட எவரும் அப்படியே இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது .என் அத்தையின் பெயரும் கூட பகவதி தான் .பகவதி பாட்டியின் கல்லறை ஊரில் உண்டு .நான் அதைப் பார்த்ததாக நினைவில்லை .என் அத்தை ,தான் இறந்த பிறகு
பகவதி பாட்டியின் கல்லறை அருகில்தான் தனக்கும் கல்லறை வைக்க வேண்டும் என்று விரும்பினார்.இடம் தான் கிடைக்கவில்லை . தாத்தாவின் கல்லறை திருவண்ணாமலையில் இருக்கிறதாம் .எங்கே என்று அறிந்தவர்கள் எவரும் இல்லை .

பகவதி பாட்டியை நினைக்கும் போது அவருடைய உறுதியை நினைத்து ஆச்சரியப்பட்டாலும் அவர் மருமகள்களை நினைத்து பார்க்கையில் கொஞ்சம் வருத்தம் தான்.

இவர் குடியிருந்த வீடு என் பாட்டி வீட்டிற்கு எதிரில் இருந்தது .என் சிறு வயதில் பார்த்திருக்கிறேன் .பாழடைந்து போய் இருந்த இந்த வீட்டை ஊரில் யாரைக்கேட்டாலும் பய பக்தியுடன் சொல்வார்கள் ,"இது பகவதி பாட்டியின் வீடு "என்று .ஆலடிப்பட்டியின் சரித்திரச் சின்னங்களில் ஒன்றாகவே அது மாறிப் போயிருந்தது .

Wednesday 10 September 2008

வயலின் இசை மேதை குன்னக்குடி வைத்தியநாதன்

மனதை மயக்கும் தன் வயலின் இசையால் இசை நன்கு அறிந்தோரையும் அதிகம்
அறியாதவரையும் ஒரு சேர கட்டிப் போட்ட வயலின் இசை மேதை திரு .குன்னக்குடி வைத்தியநாதன் அவர்கள் காலமானார் .


வயலின் முதல் முதலில் பேசியது இவர் மீட்டிய போது தான் .
பல முறை இவர் நிகழ்ச்சியைப் பார்த்த போதெல்லாம் இவர் வயலினில் பேச்சுக் குரல் கேட்பது போன்றே தோன்றும் எனக்கு .

நெற்றியை மறைக்கும் திருநீறு ,அதில் காசகல குங்குமம் ,கழுத்தை மறைக்கும் நகைகள் என்று தனக்கென்று உடையிலும் தனி அடையாளம் கொண்டிருந்தவர் .

திரை இசைப் பாடல்களை பலரின் எதிர்ப்புகளுக்கு இடையே கர்நாடக சங்கீத மேடைகளில்அரங்கேற்றியவர் .கோமாளித்தனங்கள் செய்கிறார்,சங்கீத மேடையை அவமதிக்கிறார்
என்ற ஏசல்களை மீறி ரசிகர்களுக்காகவே வாசித்தவர் .இவர் அடிக்கடி கூறுவாராம் "நான் ஒரு டிபார்ட்மெண்டல் ஸ்டோர் என்று ".
தெய்வம் என்ற திரைப்படத்திற்கு இவர் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்றவை .

இசை உலகம் ,இசையின் எல்லா பரிமாணங்களையும் ஆராயத் துணிந்த ஒரு மாமேதையை இழந்திருக்கிறது .


அன்னாரின் ஆன்மா சாந்தி அடையட்டும் .











Monday 8 September 2008

நேரமில்லை!

இது எனக்கு மிகவும் பிடித்த கவிதை . இதை என்னால் இயன்ற வரை மொழியாக்கம் செய்திருக்கிறேன் .

Leisureby William Henry Davies

What is this life if, full of care,
We have no time to stand and stare.

No time to stand beneath thebough
And stare as long as sheep or cows.

No time to see, when woods we pass,
Where squirrels hide their nuts in grass.

No time to see, in broad daylight,
Streams full of stars like skies at night.

No time to turn at Beauty’s glance,
And watch her feet, how they can dance.

No time to wait till her mouthcan
Enrich that smile her eyes began.

A poor life this if, full of care,
We have no time to stand and stare.



நேரமில்லை!


அட !என்ன வாழ்க்கை இது!
நேரமில்லை! நேரமில்லை !
நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை!


மர நிழலில் இளைப்பாறி
மந்தைகளாய் சில நிமிடம்
வெற்றுவெளியில் விழியை விட்டு வைக்க நேரமில்லை!


பயணிக்கும் பாதையில் விளையாடிய சிறு அணில்கள்
கவ்வி வந்த விதையோடு
தோட்டத்தில் மறைந்துவிட்டால்
எந்த புல்லில் ஒளித்திருக்கும்
என எட்டிப் பார்க்க நேரமில்லை!


சல சலவென்று ஓடி வந்து
நிலம் நிறைக்கும் நீர் மடியில்
இரவில் கொட்டி விட்ட விண்மீன்கள்
பகலில் நின்று பார்க்க நேரமில்லை!


காதல் வீசும் வேல் விழியால் பாவை
ஒரு கணை தான் வீசிப் போக
மறுபார்வையில் சில பதில்கள்
சொல்லி வைக்க நேரமில்லை!


மண்தொட்ட அவள் பாதம்,
நடப்பதே அழகென்றால்
அவை நடனமாடும் அழகுதனை
பார்த்துச் செல்ல நேரமில்லை!


அவள் விழி துவங்கிய புன்னகையும்
கன்னத்தில் வடிந்து வந்து
கடைவாய் ஓரம் தேங்கத் துவங்கும் வரையும்
காத்திருக்க நேரமில்லை!


அட !என்ன வீணான வாழ்க்கை இது !
நேரமில்லை! நேரமில்லை !
நின்று எதையும் ரசிக்கவும் நேரமில்லை !

மக்கள் தொலைக்காட்சி

மக்கள் தொலைக்காட்சியின் மூன்றாவது ஆண்டு துவக்க விழாவினை சனிக்கிழமை மாலை நேரலையில் ஒளிபரப்பினார்கள் .மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தமிழ் தொலைக்காட்சியை நாமும் வாழ்த்துவோம் .

இன்றைய மற்ற பெருவாரியான தொலைக்காட்சிகளில் இது முற்றிலும் மாறுபாடானதே.

மற்றவை அனைத்திலும் திரைப்படங்களும் தொடர்களும் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்க இந்த ஒரு தொலைக்காட்சி மட்டும் திரைப்படங்களை தவிர்த்து வருகிறது.
இன்னும் சிறப்பான ஒரு விஷயம் ..இங்கு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழிலேயே
சிறிதும் ஆங்கில கலப்பின்றி நடத்தப்படுவது .
இன்று இந்த தொலைக்காட்சியின் வாயிலாக வழக்கில் உள்ள பல பிற மொழி
சொற்களுக்கு தமிழ் சொற்களை அறிய முடிந்திருக்கிறது .

ஒரு கட்சியினரால் நடத்தப் படும் தொலைக்காட்சி என்றாலும் விழாவில் அந்த சாயல் அதிகம் விழவில்லை .விழா நிகழ்ச்சிகளும் சிறப்பாக சிந்திக்கப் பட்டிருந்தன .


தமிழண்ணல் ,ராஜா ,மு.ரா, கவிஞர் சுப்பு ஆறுமுகம் ,நாஞ்சில் நாடன் ,பெரியார்தாசன் என்று பல நல்ல தமிழறிஞர்கள் மேடையில் .
நெல்லை தமிழ் ,குமரி தமிழ் ,கோவை தமிழ்,சென்னை தமிழ் என்று சிறப்பு உரைகள் . இவர்களோடு இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் ,பத்திரிகையாளர் பகவான் சிங் ,இயக்குனர் அமீர் ,சீமான் என துறை வல்லுனர்கள் வேறு.
அதி முக்கியமான செய்தி ஆளுக்கொரு நிகழ்ச்சி இவர்களுக்கு விமர்சனத்திற்கு
கொடுக்கப்பட்டிருந்தது .அதில் சிலர் குறைகளையும் சுட்டிக்காட்டி பேசவே செய்தார்கள் .

ஆட்டங்கள், தேவையில்லாத ஆர்ப்பாட்டங்கள் என்று கொக்கரிக்கும் தொலைக்காட்சிகள் இடையே இதமான மாறுதல் .நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் ,இறுதியில் பேசும் போது சொன்னார் ,"குறை கூற வாருங்கள் "என்று .ஒப்புக்கே சொல்லப்பட்டிருந்தாலும் உயர்வான வார்த்தைகள் .


இந்த விழாவில் என்னை கவர்ந்த சில நிகழ்வுகள் .
பிறரை அதிகம் ஏளனம் செய்யாமல் நடத்தப்பட்டது.
பேசியவர்கள் அனைவருமே தமிழேலேயே பேச முயன்றார்கள் .
உடல் நலம் கருதி சுப்பு ஆறுமுகம் அவர்களை அமர்ந்தே உரையாற்றச் சொன்னார்கள் .
கால விரயம் இன்றி விழாவினை நடத்தியது .
பேச்சாளர்கள் அனைவரையும் மணி அடித்து தங்கள் நேரத்துக்கு மிகாமல் பேசச் செய்தது .

மக்கள் தொலைக்காட்சி தான் ஏற்ற பாதையினின்று விலகாமல் மேலும் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் !

Saturday 6 September 2008

பாட்டி

பாட்டிக்கென்று சில விசித்திரமான பழக்கங்கள் உண்டு .


நான் பள்ளியில் படிக்கும் போது நடந்தது இது .என் வகுப்பு தோழி ஒரு நாள் வீட்டிற்கு வந்திருந்தாள் . என் பாட்டியும் இவளும் ஒரு அறையில் இருந்தார்கள் .திடீரென்று நான் இருந்த அறைக்கு ஓடி வந்த அவள் "உங்க பாட்டி வாய்க்குள்ள அமிர்த்தாஞ்சன் தடவுறாங்க "என்று சொன்னாள் .எந்த வலியானாலும் அதற்கு அமிர்த்தாஞ்சன் தடவும் பழக்கம் இருந்தது பாட்டிக்கு.இந்த முறை அவர் தடவியது பல் வலிக்கு !


பாட்டிக்கு பிடித்த உணவுகளில் முக்கியமானது முருங்கைக் கீரை .எங்கள் வீட்டிலும் ,இரண்டு பெரியப்பாக்கள் வீட்டிலும் முருங்கை மரங்கள்
உண்டு .இதை பறித்து இலைகளை ஆய்வது என்பது கொஞ்சம் சிரமமான ,அனேகர் சங்கடப்படும் வேலை . இதை நன்கு அறிந்ததாலோ என்னவோ ,தனக்கு முருங்கை கீரை சாப்பிட வேண்டும் என்று தோன்றும் போது பாட்டியே கீரையை பறித்து ஆய்ந்து கொண்டு வருவார் .காலை நீட்டி அமர்ந்து குனிந்த தலை நிமிராமல் மடியில் முறத்தை வைத்துக் கொண்டு ஆய்ந்து முடிப்பார் .சமைப்பதற்கு கஷ்டம் என்று யாரும் சாக்கு சொல்ல முடியாது !இதை சமைக்க முடியாது என்று சொன்னதால் அக்காவுக்கும் பாட்டிக்கும் ஒரு முறை சண்டை கூட நடந்ததுண்டு .

பாட்டி இறந்த நாளில் என் அண்ணன் ஒருவர் சொன்னார் ,"பாட்டியின் ஆவி கண்டிப்பாக இந்த முருங்கை மரத்தில் தான் இருக்கும் "என்று .....

Monday 1 September 2008

சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து

சென்னையின் இன்றைய முக்கிய அடையாளங்களின் ஒன்றான தியாகராய நகர்
சரவணா ஸ்டோர்ஸில் இன்று தீ விபத்து .ஊழியர்களுக்காக சமையல் நடந்து கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து இந்த விபத்து நேர்ந்ததாக
சொல்லப்படுகிறது .உயிர் சேதம் பொருள் சேதம் பற்றி முடிவான செய்திகள் ஏதும் இல்லை .

ரங்கநாதன் தெரு ,சென்னையின் முக்கிய கடைவீதிகளில் முதன்மையானது .குறுகலான இந்த சந்தில் எப்போதும் பல்லாயிரக் கணக்கான
மக்கள் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் .இதில் தீ விபத்தோ ,இல்லை
ஒரு நில அதிர்வோ ஏற்பட்டால் சேதங்கள் அதிகம் என்பது மட்டுமல்லாமல்
மீட்பு பணிகளிலும் அதிக சிரமம் என்று பல நேரங்களில் அச்சம் தெரிவிக்கப் பட்டிருக்கிறது .புது மேம்பாலம் சில நாட்களுக்கு முன்பு திறக்கப் பட்ட போது கூட
அதில் தீயணைப்பு வண்டிகள் நுழைவது கடினம் எனக் கூறப்பட்டது .


இந்த எச்சரிக்கைகளை மெய்ப்பிக்கும் வண்ணம் இன்று தீ விபத்து நடந்தே விட்டது .அதிகாலை நேரம் என்பதால் சேதம் குறைவே .அலுவல் நேரங்களிலோ
மாலையிலோ இந்த விபத்து நேர்ந்திருந்தால் எண்ணிப் பார்க்க முடியாத கோரம்
நடந்து முடிந்திருக்கும் .

சரி நாம் எண்ண செய்ய முடியும் .அடடா ,நல்ல வேளை,அப்பவே சொன்னாங்க என்று வழக்கம் போல் அங்கலாய்த்து விட்டு மறுபடியும் தீபாவளி துணிகள் வாங்க கிளம்ப வேண்டியது தான் .