Friday 1 August 2008

பெயர்க்காரணம்




என் பெயரை யாராவது பாராட்டும் போது இல்லை பொருள் கேட்கும் போது எனக்கு மனசுக்குள்ளே ரொம்ப பெருமையா இருக்கும் .


ஆனா, சின்ன வயசுலே அப்படி இல்லை ..
நிர்மலா ,ஷீலா இது மாதிரி பெயரையெல்லாம் கேட்கும் போது பொறாமையா இருக்கும் .நம்ம பெயர் ஸ்டைலா இல்லையேன்னு.அதோட நம்ம பேர்ல ஒரு சினிமா பாட்டு கூடஇல்லையேன்னு வருத்தமா இருக்கும் .
'பூ முடிப்பாள் இந்த பூங்குழலி'இந்த பாட்ட நான் முதல் தடவ கேட்டப்ப
ஏற்பட்ட சந்தோஷம் ..


இந்த பெயரோட ஆரம்பம் எல்லாருக்கும் தெரிஞ்ச மாதிரி ,கல்கியின் 'பொன்னியின் செல்வன்' தான் .இந்த பெயர் எங்கப்பாவ ரொம்ப பாதிச்சிருச்சி .பெண்களுக்கு வைக்க இத விட்டா வேற பெயரே கிடையாது ன்னு முடிவு பண்ணி யாருக்கு வைக்கலாம்ன்ணு யோசிச்சப்ப எங்க அக்கா பொறந்தாங்க (பெரியப்பா மகள்).என் பெரியப்பா "யாருக்குமே வாயில நுழையாதுப்பா " ன்னு பயந்து போனதும், அப்ப திருமணம் ஆகாத எங்கப்பா இது தன் மகளுக்கு தான்னு முடிவு பண்ணியிருப்பார் ன்னு நினைக்கிறேன்.



எங்கப்பா ஆசை பட்டபடியே நான் பிறந்து எனக்கும் வெற்றிகரமா" பூங்குழலி" என்ற இந்த கிடைத்தற்கரிய பெயரையும் வச்சாச்சி .இந்த பெயரோட பொருள் என்னனா "பூவைச் சூடிய கூந்தலுடையவள் ,பூ போன்ற மென்மையான கூந்தலுடையவள் ".ஆக முக்கியமான விஷயம் கூந்தல் .ஆனா நான் பிறந்தப்ப ,காஞ்ச நிலத்தில லேசா அங்கொண்னும் இங்கொண்னுமா இருக்குமேபுல் ,அது மாதிரி தான் என் கூந்தல் இருந்ததாம்.(உங்கப்பா உனக்கு இந்த பெயர் வச்ச நேரம் உன் கூந்தல் நிஜமாவே பூங்குழலாயிருச்சி ன்னு எங்கம்மா சொல்வாங்க)

 என் தம்பி பிறந்தப்ப இவன் பேரு குழலனான்னு எங்க மாமா கிண்டல் பண்ணியதா அம்மா சொல்வாங்க.அதோடஅவங்க ழகரம் பத்தி ரொம்ப அசட்டையா இருந்துட்டாங்க ..இப்ப அத வேற பழகவேண்டியதா போச்சி.
(வீட்டுல எல்லாரும் குழலி ன்னு என்னை கூப்பிடுவாங்க ).


இப்ப பெயர் வைச்சாச்சி !இத ஆங்கிலத்திலே எப்படி எழுதணும் ?இது அடுத்த பிரச்சனை .எங்கப்பா ,பேர் தெரிஞ்சவுங்க எப்படி எழுதினாலும்
சரியா தான் சொல்வாங்க ,தெரியாதவங்க எப்படி எழுதினாலும்
தப்பு தப்பா வாசிப்பங்க ன்னு முடிவு செஞ்சி Poongulali ன்னு எழுதினாங்க.
எல்லாரும் என்னை எப்படி எப்படி விளிச்சாங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?சில பேர் அவங்களே Poonkuzhali எழுதிட்டு பூந்குஸலி ன்னு படிச்சாங்க .....
அண்டை வீட்டிலே ஒரு சிறுவன் 'குர்லி' னும் ,
என் தம்பி கதிரவன்' கொல்லி 'னும், என் மாமியார் ' கொலலி' னும் அவங்க அவங்க வசதிக்கு கூப்பிட்டாங்க. எங்க மருத்துவமனைக்கு வரும்
வெளி நாட்டு நண்பர்கள் வசதியா' பூங்கா 'ன்னு சொன்னாங்க .
(Your name isa tongue twister ).

என் பள்ளியில் நான் ஒரே பூங்குழலி தான் .அன்புடன் குழுமத்தில் ஒரே பூங்குழலி நான் தான் ஒரு தடவை சேது சொன்னாங்க ..
ஒரு வழியா நானும் என் பெயரும் இரண்டற கலந்து ஒரு
சந்தோஷமான வாழ்க்கைய வாழ்ந்திட்டு இருக்கோம்.


இத்தனை வருஷம் முடிந்து திரும்பி பார்க்கும் போது
இவ்வளவு அழகான பெயரை எனக்கு சூட்டிய
அப்பாவிற்கு நன்றிகள் சொன்னால் போதாது .
அதோடு இந்த பெயர் சூட்ட தடை ஏதும் சொல்லாத
என் அம்மாவிற்கும் நன்றி சொல்ல வேண்டும்.