Wednesday 30 July 2008

அஞ்சறைப்பெட்டி


என் பாட்டி வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தது இந்த அஞ்சறைப் பெட்டி .செவ்வக வடிவத்தில் இருந்த இதில் ஆறு அறைகள் இருக்கும் . மரத்தில் செய்யப் பட்டது இது .இதில் என்ன வைக்கப்பட்டிருந்தது என்பதெல்லாம் எனக்கு சரியாக ஞாபகம் இல்லை ஆனால் இது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது மட்டும் நினைவிருக்கிறது.

அடுக்களையிலேயே இருந்த இது என் பாட்டி இறந்த பின்னால் எவர் அடுப்புக்கோ விறகானது .இதை எனக்கு வேண்டும் என்று கேட்டு வாங்கவில்லையே என்ற வருத்தம் எனக்கு இன்று வரை உண்டு .பல இடங்களில் விசாரித்தும் அது போன்ற மற்றொன்று எனக்கு இன்னும் எட்டாக் கனியாகவே இருக்கிறது .


Saturday 19 July 2008

பாட்டி வீடு




மர ஏணியில் ஏறிப் போனால் மச்சி வீட்டுக்கு போகலாம் .இதில் இரண்டு அறைகள் இருந்தன .ஒரு அறையில் நெல் மூட்டைகள் அடுக்கப் பட்டிருக்கும் ,இன்னொரு அறையில் பல புத்தகங்கள் இருக்கும் .இவற்றை யாரும் அதிகம் பயன்படுத்தி நான் பார்த்ததில்லை .நெல் மூட்டைகளுக்கு நடுவே ஒரு ஊஞ்சல் இருந்ததாக ஞாபகம் .அந்த அறை பெரிதாகவும் இருள் அடைந்தும் உள்ளே சென்றதும் ரொம்ப பயமாகவே இருக்கும் .அதுவும் அந்த மர ஏணியில் சென்றால் கேட்கவே வேண்டாம் .வெளியில் இருந்தும் இதற்கு ஒரு படிக்கட்டு உண்டு .அதில் ஏறி சென்ற நாட்களில் கொஞ்சம் பயம் குறைந்ததாக உணர்ந்திருக்கிறேன் நான் .
இதற்கு மேல் ஒரு மொட்டை மாடியும் அதற்கு ஒரு மர ஏணியும் உண்டு .பயந்து போய் இதில் நான் அதிகம் ஏறியதில்லை என்று சொல்லித் தெரிய வேண்டுமா ?





Tuesday 1 July 2008

பாட்டி வீடு


எங்கள் ஊரில் இன்னொரு சிறப்பு இங்கிருக்கும் வீடுகள் .ஒவ்வொரு வீடும் ஒரே மாதிரியாக இருக்கும் .மூன்று வீடுகள் சேர்ந்தார் போல் இருக்கும் இதில்
நடு வீடு பாட்டி வீடு . நுழைந்த உடன் ஒரு மாட்டுத் தொழுவம் ,அடுத்தது அடுப்படி (பெண்களுக்கு முதல் உரிமை என்பது இங்கு நான் கண்ட உண்மை ).
அடுப்படி வாசலில் ஒரு வெற்றிடம் அதில் ஒரு பெரிய வேப்ப மரம் ,மர நிழலில்
ஒரு ஆட்டுரல் .இதை தாண்டி உள்ளே போனால் முற்றம் .இதில் சுவற்றில் எல்லாருடைய புகைப் படங்களும் இருக்கும் .என் பெரியப்பா ,பெரியம்மா ,அம்மா ,அப்பா ,அத்தையும் அவர் தோழியும் என அனைவரும் இளம் வயதில் புன்னகை பூத்திருப்பர் .
அடுத்த அறை படுக்கை அறை ,இதில் ஒரு பெரிய கட்டில் இருக்கும் .இதற்கு மெத்தை என் அப்பா வாங்கித் தந்ததாம் .இந்த அறையின் ஒரு ஓரத்தில் ஒரு மர ஏணி ஒன்று இருக்கும் .இதில் ஏறிப் போனால் ஒரு மரக் கதவு இருக்கும் .இது மச்சிக்கு செல்லும் வழி.வெளியிலிருந்தும் ஒரு படிக்கட்டு உண்டு .
அடுத்த அறையில் எனக்கு ரொம்ப பிடித்தது அதில் தொங்கும் உறி.ஒரு மர பெஞ்சில் தண்ணீர் குடங்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் . அடுத்தது கூரையில்லாத குளியலறை .

இல்லாமை ????????????

அரசு மருத்துவமனைகள் பற்றி தவறான கருத்துகள் பல உண்டு .

இங்கு தேவையான சாதனங்கள் பல இல்லை...
இது ஓரளவே உண்மை .
இருக்கும் சாதனங்கள் சரியாக உபயோகப் படுத்தப்படுவதில்லை என்பதே உண்மை .பல லட்சம் செலவில் வாங்கப் பட்ட சாதனங்கள் சில சின்ன நடைமுறை சிக்கல்கள் காரணமாக கேட்பாரற்று கிடந்து பழுது பட்டு போயிருக்கின்றன .

தேவையான ஆள்பலம் இல்லை .....
பணியில் இருப்பவர்கள் தங்கள் வேலைகளை மட்டுமே சரியாக செய்தால் கூட
இது ஒரு முடிவுக்கு வரும்.

தேர்ச்சி பெற்ற சிறப்பு மருத்துவர்கள் இல்லை ......
கண்டிப்பாக இருக்கிறார்கள் ,ஆனால் பலரும் இங்கு வரும் நோயாளிகளை தங்கள் தனி மருத்துவமனைகளுக்கு மாற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள் .

பல வசதிகள் சில ஐந்து நட்சத்திர மருத்துவமனைகளை காட்டிலும் குறைவாகவே இருக்கின்றன .ஆனால் இங்கு சுத்தமாக இல்லாமல் போனது
அன்பும் ,நோயாளிகளுக்கு தேவையான அரவணைப்பும் .

வாசலில் வந்தவுடன் காசு கேட்கும் ஊழியர்கள் ,உயிர் போகும் அவசரமாக இருந்தாலும் அங்கே போ இங்கே போ என்ற அலைகழிப்பு ,வா போ என்று மரியாதை இல்லாத பேச்சு ,இங்கு வருபவர்கள் ஏதோ நான்காம் தர குடிமக்கள் என்ற அலட்சிய மனோபாவம் ..இவையெல்லாம் களையப் படாவிடில் இந்த மருத்துவமனைகள் மக்களின் ஆதரவை ஒரு போதும் பெறப் போவதில்லை .