Saturday 26 April 2008

ஆலடிப்பட்டி


கூட்டுறவு சங்கத்தில் புகையிலையை வாங்கி ,அதை அச்சில் வைத்து வெட்டி எடுத்து, உள்ளே புகையிலையை வைத்து ,திணித்து, சுருட்டி, நூலோ நாரோ கொண்டு கட்டி ,அழகாய் கட்டு கட்டாய் கட்டி அடுக்கி வைத்து கொண்டே இருப்பார்கள் .ஒரு கட்டிற்கு இத்தனை பீடி என்று கணக்கெல்லாம் உண்டு .யார் அதிகம் வேகமாக பீடி சுற்றுகிறார்கள் என போட்டியெல்லாம் நடக்கும் .எங்கள் ஊரில் வெகு சிலரை தவிர அனைவரும் இந்த தொழில் அறிந்தவரே .வேறு வேலையிலிருந்த சிலரும் கூட பகுதி நேர தொழிலாக இதைச் செய்வார்கள்.
வீட்டு வேலைகளை முடித்து விட்டு மடியில் முறத்தோடு உட்கார்ந்தால் இத்தனை பீடிகள் என அவர்கள்' டார்கெட் 'எட்டும் வரை சுற்றி கொண்டே இருப்பார்கள் .

( இன்னும் சொல்வேன் )

Wednesday 23 April 2008

ஆலடிப்பட்டி


பெண்கள் முன்னேற்றம் பற்றி இங்கு பலரும் பல விதமாக முழக்கங்கள் செய்துக் கொண்டிருக்க அதற்கு முன்னோடியாக பொருளாதார முன்னேற்றமும் கல்வியும் பெண்களுக்கு சுயமரியாதையும் முன்னேற்றமும் பெற்று தரும் என்று நிரூபிக்கப் பட்டது எங்கள் ஊரில் .வீட்டினுள் நுழைந்தவுடன் சமையலறையை நான் இங்கு மட்டுமே பார்த்திருக்கிறேன் .
பீடி சுற்றிக் கொண்டே ஒரு திண்ணையிலிருந்து எங்கள் ஊர் பெண்கள் காரியம் ஒரு கண்ணாகவும் கதை ஒரு கண்ணாகவும் வீட்டை நிர்வகிக்கும்
அழகே தனி தான் .இப்படி பீடி சுற்றுபவர்களுடன் சேர்ந்து அதை பற்றி தெரிந்து கொண்டு என் கை வரிசையை முயற்சிப்பதில் தனி சந்தோஷம் எனக்கு சிறு வயதில் ..............

(இன்னும் சொல்வேன் )

Monday 7 April 2008

நான் கடவுள் இல்லை




மரணத்தின் விளிம்பில் நின்று
நீ யாசிக்கும் சில உயிர்த்துளிகள்
வரமளிக்க நான் கடவுள் இல்லை..


மரணித்துக்கொண்டிருக்கும் உன் நரம்புகளை
குருதி பாய்ச்சி உயிர்பிக்க முயலும்
உன் இருதயத்திற்கு தெரியுமா -
அதன் துடிப்புகள் எண்ணப் படுகின்றன


உன் நாசிக்கும் வாய்க்கும் இடையே
சிக்கி மெலிந்துக் கொண்டிருக்கும்
சுவாசத்திற்கு தெரியுமா-
இந்த கூடு அதற்கினி சொந்தமில்லை


மங்கிக் கொண்டிருக்கும் உன் பார்வையில்
தோன்றி மறையும் ஒவ்வொரு
நம்பிக்கை கீற்றும்
என்னை குத்திப் பாய்கிறது


உன் நரம்பில் புகுத்தப்படும் மருந்துகளும்,
உனக்காக செய்யப்படும் செயற்கை சுவாசமும்,
உன் பிரிவை மேற்பார்வையிடும்
என் வலியைக் குறைக்கத்தான்

காத்திருக்கும் உன் சொந்தங்களுக்கு
செய்திச் சொல்ல காத்திருக்கும்
மரணத்தின் தூதனாகவே
நான் இப்பொழுதில்

உன் நாடி துடிப்புகள் ஓங்கி அடங்கி
அய்யோ என்ற அழுகை வெடிக்கும் போது
எங்கேனும் ஒளிந்து கதற வேண்டும் நான்
நான் கடவுள் இல்லை, இல்லவே இல்லை

Friday 4 April 2008

ஆலடிப்பட்டி


இது என் ஊர் .வளம் கொழிக்கும் தாமிரபரணியும் நீர் கொழிக்கும் குற்றாலமும் இரண்டு பக்கங்களிலும் மாற்றந்தாயின் மனதோடு நீர் மறுக்க வற்றிய குளங்களும் காய்ந்த கிணறுகளும் எங்கள் ஊரில் அதிகம் .
என் அப்பா பிறந்தது வளர்ந்தது ஆரம்ப கல்வி படித்தது எல்லாம் இங்கு தான் .
மண் பொய்ததால் இங்கு உழவு விடுத்து பீடி சுற்ற பழகியவர் பலர் பீடி சுற்றியதால் புகையிலையின் தாக்குதலில் காச நோய் கண்டவரும் பலர் . என் தந்தை தலைமுறையில் பலர் ஆசிரியர் பயிற்சி பயின்றனர் .
பல ஊர்கள் பொறாமைப்படும் வைத்தியலிங்கசாமி கோவில் உண்டு இங்கே .கோவிலின் பங்குனித் திருவிழாவும் சித்திரை கொடையும் சிறப்பானவை .இந்தக் கோவிலின் பூசாரிக் குடும்பமாக இருந்து நாத்திகராக மாறியவர்கள் என் அப்பாவும் பெரியப்பாவும் .