Wednesday 10 July 2013

மழை





ஏதுமில்லா
ஒற்றை இரவில்
விழித்தே கிடந்தேன் நான்
கண்மூட மறுத்து
சோம்பலில் சுகித்திருந்தேன்
வேடிக்கை பார்த்திருந்தது
வெறுமை


கருத்திருந்தது வானம்
கண்சிமிட்டி  காணாமல் போயின
நட்சத்திரங்கள்
என் தலை வருடிக்  கடந்தது
நிலா
என் கன்னம் கிள்ளிப் போனது
காற்று


இன்னமும்  விழித்திருந்தேன்
பிடிவாதமாய்
கண்டிப்பதாய் வந்து போனதொரு
மின்னல்
பெருமூச்செறிந்து அகன்றது
காற்று


கனவுகள் அமர்ந்து
இமை அயர்ந்த நொடியில்
ஜன்னல் ஓரமாய் எட்டி
விளையாட்டாய் நீர் தெளித்து
உறக்கம் கலைத்து
இரவெல்லாம் என்னுடன் கதைத்திருந்தது
மழை