Friday 23 October 2009

அத்தை சொன்ன கதை 5

தாத்தா பெரிய படிப்பாக அறியப்பட்ட ஐந்தாம் வகுப்பு படித்தவர் .பாட்டியோ படிக்காதவர் .பாட்டி தான் படிக்கவில்லை என்பதை பற்றி பெரிதாக அலட்டிக் கொண்டோ கவலைப்பட்டோ நான் கண்டதில்லை . இது சம்பந்தமாக அத்தை சொன்ன கதை ஒன்று ,


"எங்க தேன்மொழிக்கு (என் அத்தை மகள் ) நாலு வயசு இருக்கும் .எங்கய்யா ஒரு புஸ்தகம் வாங்கிக் கொடுத்தாரு .அது ஒரு சாதாரண அ னா ,ஆவன்னா புக்கு தான் .இவ அத பாத்துக்கிட்டிருந்தா .எங்கம்மா வந்து என்னளா படிக்க ன்னு கேட்ட ஒடனே ,இவ சட்டுன்னு அதெல்லாம் ஒங்களுக்கு தெரியாது பாட்டி ன்னு சொல்லிட்டா .எங்கய்யா சிரிச்சிட்டாரு .எங்கம்மாவுக்கு வந்துதே ஒரு கோவம் .இவ சொன்னது கூட அவளுக்கு கோவம் இல்ல .இவ சொன்னதுக்கு எங்கய்யா சிரிச்சிட்டாருன்னு தான் ."

Wednesday 21 October 2009

அத்தை சொன்ன கதை 4

தாத்தா அமைதியானவர் என்றே சொல்வார்கள் .புகைப்படத்தில் கூட சாந்தம் தவழவே அமர்ந்திருப்பார் .இவரைப் பற்றி என் அத்தை சொன்ன கதை ஒன்று .


"எங்கய்யா ரொம்ப அமைதியா இருப்பாரு .ஆனா கோவம் வந்துதுன்னா முன்னால நிக்க முடியாது .ஒரு தடவ எங்க பெரிய அண்ணன எதுக்கோ ,என்னன்னு நெனவு இல்ல ,அடிக்க வந்தாரு .ஒடனே எங்கண்ணே ஓடிட்டாங்க .வெரட்டிக்கிட்டே வந்தாரு .ரெண்டு பெரும் விடாம வெரட்டிகிட்டே கோவில் வரைக்கும் வந்துட்டாங்க .(சுமார் அரை கிலோமீட்டர் தூரம் ).


கோவில்கிட்ட எங்கம்மா தண்ணி எடுத்துகிட்டு வந்திட்டிருந்தா .எங்கண்ணே ஒடனே எங்கம்மா கைய பிடிச்சிக்கிட்டாங்க .பிடிக்க போனா ,எங்கம்மா கொடத்தொட நிக்கா .அண்ணன பிடிக்க போனா இவ விழுந்துருவா .எங்கையா பாத்துட்டு பேசாம வந்துட்டாரு .வீட்டுக்குள்ள வந்து பேசாம ஒக்காந்திருந்தாரு.எங்கண்ணனும் தைரியமா ,உள்ள வந்தாங்க .உள்ள வரும் போதே பிடிச்சிட்டாரு எங்கய்யா .கதவிடுக்குல கைய வச்சி ,நங்கு நங்குன்னு சாத்திட்டாரு.

இன்னொரு தடவ எங்க சின்னண்ணன அடிச்சிப்புட்டாரு .அவன போயி அடிச்சீங்களேன்னு ஏச்சு ஏச்சு ,ஒரு நாள் பூரா ஏசுனா எங்கம்மா.இவன் அடி தாங்க மாட்டாம்லா. "


சின்ன வயது முதலே என் அப்பா ஒல்லியாகவும் என் பெரியப்பா கொஞ்சம் பூசினாற்போலவும் இருப்பார்களாம் .

Monday 19 October 2009

கூண்டில் அடைந்து

கூண்டுக்குள் ஒரு பறவை
தானியம் பிரிப்பதும் உண்பதும் தவிர்த்து
வேறு பணியின்றி
அழகு செய்வதும் பேணுவதும் கடமையென்று
அண்டை கூண்டுகளில் இருக்கும் பறவைகள் போலவே ...


வெளியே இருப்பவை பூனைகள் மட்டுமே
என்ற அச்சுறுத்தலில்
கூண்டுக்குள் இருப்பதே சுகமென்று
பழகிக் கொண்டு
சுற்றியிருக்கும் கம்பிகளும்
தொங்கிக்கொண்டிருக்கும் பூட்டும்
பாதுகாப்பிற்கே என்றும் மகிழ்ந்து போய்


வெளியேற திமிரும் இன்னொரு பறவையை
ஆணவம் பிடித்ததாய் அவமானம் செய்து
அது வெளியே போனபின் விரித்த சிறகை
அண்ணாந்து ஆர்வமாய் வாய்பிளந்து பார்த்து
வானத்தை எட்டினால் மட்டுமே சிறகுகள் வருமென
கூண்டுக்குள் மீண்டும் சமாதானமாகி


எவருமற்ற ஒரு பொழுதில்
பறப்பதாய் பாவிக்கையில்
கைகளுக்கடியில் சிறகுகள் இருப்பதை அறிந்ததும் ,
எதற்கென்று புரியாதிருந்து ,பின்
பூட்டும் கம்பியும் இது போலவே என்றுணர்ந்து
கதவை கொத்தி வானத்தில் பறந்துபோகும்


எனினும்
கூண்டுக்குள் மீண்டும் வந்தடையும்
தானியம் பிரிக்கவும் அழகு பார்க்கவும்

Tuesday 13 October 2009

அத்தை சொன்ன கதை-3

"எங்கண்ணே படிச்சிட்டு லேட்டா தான் வந்து படுப்பான் .அரிக்கன் லைட்டுக்கு கீழ பேப்பர் சுத்தி வச்சிருப்பான் .வெளிச்சம் வெளிய தெரியக் கூடாதுன்னு .படுக்கும் போதும் லைட்ட அமத்தி போட்டுட்டு வர மாட்டான் .தீய கொஞ்சமா ரொம்ப வெளிச்சம் வராம கொறச்சி வச்சிட்டு வந்து படுப்பான் .படுத்துக்கிட்டு பாடத்த சொல்லிக்கிட்டே இருப்பான் .முணுமுணுன்னு சத்தம் கேட்டுக்கிட்டே இருக்கும் .வாய மூடிட்டு படுல ன்னு சொன்னாலும் கேக்க மாட்டான் .


ஏதாவது மறந்து போச்சின்னா ஒடனே எந்திரிச்சி போவான் .வெளக்க கொஞ்சம் கூட்டி வைப்பான் .திருப்பி படிப்பான் .மறுபடியும் வெளக்க கொறச்சி வச்சிட்டு வந்து படுத்துக்குவான் .திரும்பியும் மொதலெருந்து சொல்லி பாப்பான் முணுமுணுன்னு .மறந்து போச்சுன்னா திருப்பி போவான் .மறுபடியும் வெளக்க ஏத்தி வச்சி படிப்பான் .படுத்துகிட்டு சொல்லி பாப்பான் .இப்படி செஞ்சுகிட்டே இருப்பான் .மறக்காம சொல்லி பாத்த பெறகு தான் போயி வெளக்க அமத்தி போட்டுட்டு தூங்க வருவான் ."

இதிலிருந்து நான் அறிந்து கொண்டவை
1.என் அப்பா வெகு சிறப்பாக படித்ததாக சொல்வார்கள் .அதன் காரணத்தை தெரிந்து கொண்டேன்.
2.என் அத்தையின் பேரன் என் அப்பாவை அதிகம் பார்த்திராவிட்டாலும் ,நல்ல மதிப்பெண் வாங்கிய போதெல்லாம் என் அப்பாவிற்கு தொலைபேசியில் தெரிவித்து ,ஏதாவது பரிசு வாங்கிக் கொள்வான் .ஏன் என்று யோசித்திருக்கிறேன் .இப்போது தெரிந்தது .
3.இதை பற்றி வீட்டில் பேசிக் கொண்டிருந்த போது என் மகனிடம் சொன்னேன் ,"பாத்தியா ,ராஜம்மா பாட்டி சொன்னாங்கல்ல ,தாத்தா எப்படி படிச்சிருக்காங்கன்னு !"உடனே என் மகன் சொன்னான் ,"ஆமாம்மா ,படிச்சு முடிக்கிற வரைக்கும் தாத்தா லைட்ட ஆப் பண்ண மாட்டாங்க ,இந்த ஒரு லைன்ன அந்த பாட்டி எப்படி கத மாதிரி சொன்னாங்க !சூப்பரா இருந்திச்சி "

அத்தை சொன்ன கதை- 2


(ராஜம்மா அத்தை -செல்லமாக சின்ன அத்தை )

என் தாத்தா வெகு அருமையாக கதை சொல்வாரென சொல்வார்கள் .அதனாலோ என்னவோ, என் பெரிய அத்தையும் (அப்பாவின் அக்கா -பகவதி அத்தை  ) அப்பாவும் கூட அழகாக கதை சொல்வார்கள் .சாதாரண செய்தியைக் கூட ஒரு கதை போல் நேர்த்தியாக சொல்லும் திறமை வாய்ந்தவர்கள் இவர்கள் .ஆனால் என் சின்ன அத்தை (அப்பாவின் தங்கை )கதை சொல்லி நான் அதிகம் கேட்டதில்லை .இந்த முறை ஊருக்கு சென்ற போது சின்ன அத்தைக்கும் அந்த திறமை இருப்பது தெரிந்தது .



அவர் சொன்னதில் ஒன்று ."நானும் எங்க சின்ன அண்ணனும் (என் அப்பா )தான் எங்கம்மா கூட கட்டில்ல படுப்போம் .எங்கம்மா நடுவில படுத்திருப்பா .செவரு பக்கமா நா படுத்திருப்பேன் ,அந்தப் பக்கம் எங்க சின்ன அண்ணே படுத்திருப்பான் .இதுல யார பாத்து எங்கம்மா படுக்கனும்ன்னு போட்டி நடக்கும் .ஏன்பக்கம் திரும்பி படும்மான்னு நா சொல்லுவேன் .இல்ல ஏன்பக்கம் தான் பாக்கணும்ன்னு எங்கண்ணே சொல்லுவான் .இப்படியே சண்ட போடுவோம் .அப்புறம் ,வாரத்தில நாலு நாளு ஏன்பக்கம் பாத்து எங்கம்மா படுப்பா ,மீதி மூணு நாளு எங்கண்ணே பக்கம் . இப்படி முடிவு பண்ணிக்கிட்டோம் ."

என் பாட்டி இறந்த போது அவருக்கு வயது தொண்ணூறைத் தாண்டியிருக்கும் .சில காலம் வேறு படுக்கையில் இருந்தார் .சில மாதங்களாக எதிர்பார்த்த நிகழ்வாகவே இருந்தது பாட்டியின் மரணம் .அப்போது கேவிக் கேவி அடக்க மாட்டாமல் அழுத அன்று ஐம்பது வயதை தாண்டிய என் அப்பாவை எல்லோரும் ஆச்சரியமாக பார்த்தார்கள் .பாட்டி அப்பாவை "ஏலே ,சின்ன மணி "என்றே அழைப்பார். அப்பாவுக்கும் பாட்டி மீது நிறைய பாசம் உண்டு என்றறிந்த எனக்கும் கூட அது ஆச்சரியமாகவே இருந்தது இதைக் கேட்கும் வரையில் .

Thursday 1 October 2009

கல்லானாலும்

தொடர்ந்து சிகிச்சைக்கு வந்து கொண்டிருக்கும் நோயாளி இவர். ஆரோக்கியமாகவே இருக்கிறார் .எதை சொல்லும் போதும் இவரிடம் ஒரு தயக்கம் இருக்கும் .பயந்தே பேசுவது போல் இருக்கும் இவரின் பேச்சும் .வந்தவுடன் எல்லாம் சொல்லிவிட்டு மாத்திரைகள் எழுத ஆரம்பிக்கும் போதே ,"வீட்டுல பேசனும்ன்னு சொன்னா "என்று ஆரம்பிப்பார் .உடனே கைபேசியில் பேசுவார் .பாதி நேரம் பேசுவது மகளாக இருக்கும் ."அம்மா வெளியே போயிருக்காங்க "என்று பதில் வரும் .இல்லை அம்மாவை தேடி அழைத்து வந்து பேச வைக்கும் அந்த வாண்டு .எப்படி இருக்கிறார் என்பதை மட்டும் விசாரித்துக் கொள்வார் இவர் மனைவி .

ஒரு முறை இவர் மனைவியின் தம்பியும் உடன் வந்திருந்தார் .வீட்டுல பேசுங்க என்று இவர் சொன்ன உடனே ,அவர் சொன்னார் ,"நா தான் வந்திருக்கேன்ல ,நா சொல்லிக்கிறேன் அவ கிட்ட ."இவர் ,"இல்ல அவளே பேசிரட்டும் என்று இருவரும் தர்க்கம் செய்து கொண்டிருந்தனர் . நான் "பரவாயில்லை நான் பேசிடறேன் ,"என்று இந்த பிரச்சனையை முடித்து வைத்தேன் .இவர் மச்சினர் சொன்னார் ,"எங்கக்கா ,சாட்டையை அங்கிருந்தே சுத்தி எங்க எல்லாத்தையும் ஆட்டி வைக்கிறா ."

பாவம் இரு குழந்தைகளை வைத்துக் கொண்டு இந்த நோயை வைத்திருக்கும் கணவரின் நிலையால் பரிதவிக்கும் அந்த பெண்ணின் நிலை சங்கடம் தான் .